Wednesday, December 31, 2014

முக்கூடற் பள்ளு - II

வணக்கம் நண்பர்களே !!

இந்த ஆண்டின் (2014) கடைசி பதிவு ; விளையாட்டாய் ஒரு கேள்விக் கேட்டு அதுக்கு கொஞ்சம் விரிவா பதில் கொடுக்க முதல் பதிவு எழுதினேன் ; அப்பிடியே பழகிட்டேன் ; இப்ப விட முடியல :) தினமும் பதிவு எழுத தோணுது ; நீங்க கொடுத்த ஊக்கமும் , பதிந்த கருத்துக்களும் இன்னும் எழுதத் தூண்டுது ; அதுக்கு ஒரு நன்றி ;

நேத்து "முக்கூடற்பள்ளு" பத்தின ஒரு பதிவுப் பார்த்தோம் ; பள்ளு பாடவும் ஒரு அமைப்பு முறை இருக்கு ; முதல்ல கடவுள் வாழ்த்து போல காப்புச் செய்யுள் பாடனும் ; இதிலும் பூ மேவு’ என்று காப்புச்செய்யுள் தொடங்கி திருமால் மேல வாழ்த்துப் பாடுறாங்க ; அப்புறம் த்து ஆழ்வார்களும் பாவலரும் நாவலரும் பத்தர்களும் காப்பாம்’ என்று  சொல்லி கருடாழ்வர், சேனைமுதலியார், நம்மாழ்வார் ஆகிய இவர்களுக்கு வணக்கம் கூறுகின்றது.

இருப்பா !! இங்க எங்கயா திருமால் வந்தாரு ?? பள்ளு உழவன் பாட்டுன்னு நேத்து சொன்ன ; வயல்ல வேலை செய்யும் பொது பாடுற பாட்டுன்னு வேற சொன்ன ; வயலும் வயல் சார்ந்த பகுதியும் = மருத நிலம் ; As per தொல்காப்பியம் மருத நிலத்துல திருமால் வரக் கூடாதே ;

"மாயோன் மேய காடு உறை உலகமும்,   == திருமாலுக்கு முல்லை நிலம்
சேயோன் மேய மை வரை உலகமும்,       == முருகனுக்கு குறிஞ்சி நிலம் (குன்று கண்ட இடமெல்லாம் முருகன் :))
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,          == வேந்தன் (அரசன்) மருத நிலம்
வருணன் மேய பெரு மணல் உலகமும்,  == வருணனுக்கு (பெரு மணல் = நீண்ட மணலை உடைய கடற்க்கரை) நெய்தல் நிலம்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச்
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே" (தொல் = அகத்திணையியல் 5)

இதுதான் தொல்காப்பிய formula ; so இங்க இருக்குற மருத நிலத்துக்கு வேந்தன்தானே வரணும் ? ஏன் திருமால் ?

தமிழ் ஆதி குடிகள் எடுத்தவுடன் விவசாயம் பாக்கல ; முதல அவங்க காடு, மலைலதான் (முல்லை & குறிஞ்சி ) வாழ்ந்தாங்க ; அப்புறம் நாகரிகம் மாற மாற விவசாயம் செய்ய ஆரம்பிக்க காட்டை அழித்து விவசாய நிலமா மாத்தி சமவெளிக்கு வந்தாங்க ; ஊர்கள் , நகரங்கள் இப்பிடித்தான் வந்துச்சு ; அப்பிடி காட்டுல இருந்தும் மலைல இருந்ததும் வரும் பொது அவங்க மட்டும் வரல ;
அவங்க பழக்கத்தையும் கொண்டுவந்தாங்க ; திருமாலையும் அப்பிடியே கூட்டிட்டு வந்துட்டாங்க ; அடே அடே வேற எங்கயோ போய்டோம் ; lets get back to முக்கூடற்பள்ளு.

காப்புச் செய்யுள் முடிந்ததும் கதை மாந்தர் அறிமுகம் ; மூத்தபள்ளி , இளையபள்ளி , பள்ளன் அறிமுகம் ; இதுதான் இன்னிக்கு நாம பாக்கப்போறோம் ;

"காவலராந் தேவரைமுன் கைதொழுது பின்னருமென் 
ஆவலினா லேயழகர் ஆசூர் வளநாடு
சீவலநன் னாடுமிசை தேர்ந்துரைக்கப் பண்ணைதனில் 
ஏவலுறும் பள்ளியர்வந் தெய்தியது சொல்வேனே."

எம்மைக் காப்போராகிய விளங்குந் தேவர்களை முதலில் கைகுவித்து வணங்கி, மேலும் என் ஆவலால் முக்கூடலழகரின் ஆசூர் வளநாடாகிய வடகரை நாட்டைப் பற்றியும், சீவலமங்கை நன்னாடாகிய தென்கரை நாட்டைப் பற்றியும், இசைத் தமிழ் ஆராய்ந்து உரைப்பதற்கு, முதற்கண் முக்கூடல் நகர்ப் பண்ணைகளில் பயிரிடுவதற்குக் கட்டளை பெற்றுள்ள பள்ளியர்கள் வந்து சேர்ந்ததைப் பற்றிச் சொல்லுவேன்; எதுக்கு இந்த பள்ளு பாடராருனு சொல்லுறாரு ;

முக்கூடற் பள்ளி (மூத்த பள்ளி ) அறிமுகம் :

"நெற்றியி லிடும் மஞ்சணைப் பொட்டும்
மற்றொரு திருநாமப் பொட்டும்
நெகிழ்ந்த கருங் கொண்டையும் ரெண்டாய்
வகிர்ந்த வகுப்பும்
பற்றிய கரும்பொற் காப்பும் கையில் 
வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய
பாக்கும்ஒரு சுருளுக் கொருக்கால்
நீக்கும் இதழும்
வெற்றிவிழிக் கெதிர் கொண் டிருகோ
டுற்ற கருப் பின்னு மெதிர்ந்தால்
விரிந் திடுமென் றெண்ணிச் சற்றே 
சரிந்த தனமும்
சிற்றிடையும் செம்பொ னிடைக்கிடை
பெற்றிடும் பட்டாங்கு மிலங்கத் 
திரு முக்கூடல் வாய்த்த பள்ளி
தோன்றினாளே. "

இலக்கியத்தில கேசாதிபாதம் , பாததிகேசம் அப்பிடின்னு பாடுவாங்க ; அதவாது தலைல இருந்தது பாதம் வரை வர்நிச்சுப் பாடுறது ; reverseல பாதமல இருந்தது தலை வர பாடுறது ; இந்தப் பாட்டு முதல் வகை ; முக்கூடற் பள்ளி நடந்தது வரா ; அவ நெற்றில இருந்தது ஆரம்பிக்குறார் கவிஞர் ; நெத்தில மஞ்சணைப் பொட்டு +  திருநாமப் பொட்டு ; மஞ்சள் பொட்டு வச்சு
அதுக்குமேல பெரிய சந்தனப் பொட்டு வைச்சுருக்கா ; சந்தனப் பொட்டுல இருந்தது அப்பிடியே நடுவுல வகுடு எடுத்து சீவின பெரிய கொண்டை போட்டுருக்கா ; முடி கரும் மேகம் போல கருப்பா இருக்கு ; கைல காப்பு போட்டுருக்கா ; கரும்பொற் காப்புன்னு சொல்லுறாரு ; இரும்பால செஞ்ச காப்பு போட்டு இருக்கா... கைல வெற்றிலை வைச்சுருக்கா ; வாயில் பாக்கு போட்டு மென்னுட்டு இருக்கா ; வெற்றிலையைச் சுருட்டி சுருட்டி வாயில் போடுறா ; வாயில் மடித்து வைக்கும் ஒவ்வொரு வெற்றிலைச் சுருளுக்கும் ஒவ்வொரு முறை நெளிந்து ஒதுங்கி விலகும் வாய் இதழ்கள் ;
அடுத்த வரி : சற்றே சரிந்த தனமும் ; வயசு ஆகிடுச்சு அதுனால அப்பிடின்னு சொல்லல ; இரண்டு மார்புகளும் நிமிர்ந்து நின்னு பாக்கும் போது அவளோட வெற்றி தரும் வேல் போன்ற கூர்மையான் கரிய கண்ணைப் பார்த்துப் பயந்ததுனால சரிஞ்சு போச்சாம்... இதுக்குப் பேருதான் தற்குறிப்பேற்ற அணி...ஒடுங்கிய இடையும், அந்த இடையில் உடுத்த, எடைக்கெடை தங்கத்தின் விலைபெறும் பொற்பட்டு போட்டுட்டு வருகிறாள் ;எடைக்கெடை தங்கத்தின் = இடை இடையே தங்க சரிகை இருக்க பட்டுச் சேலை ;

கொஞ்சம் கண்ணை மூடிட்டு இதப் படிச்சா முக்கூடற் பள்ளி தெரிவா ; பாத்துகோங்க :))

மருதூர்ப் பள்ளி அறிமுகம் :

"செஞ்சரணப் படமிடுங் கொச்சியின்
மஞ்சளும்பூம் பச்சையும் மணக்கச்
சிறியநுதற் பிறை வெண்ணீற்றுக் 
குறி யொளி வீசப்
பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே
அஞ்சனந்தோய் கண்கள் இரண்டும்
பக்கக் கொண்டையினும் குழையினுந் 
தைக்கக் குதிக்க
நெஞ்சுகவர் கனதன மாமதக் 
குஞ்சரவிணைக் கோடுகள் அசைய
நீலவடக் கல்லுடன் கோவைத்
தாலியும் இலங்க
வஞ்சிமருங்கி லணிதரும் பட்டும்
பஞ்சவணத் தழகுந் துலங்க
மருதூர்க்கு வாய்த்த பள்ளி
தோன்றி னாளே."

அடுத்து இளையபள்ளி , கால்ல ஆரம்பிக்குறார் ; சிவந்த கால்களில் அழகாகப் பூசப்பட்ட கொச்சி மஞ்சளும், பூம்பச்சை இலையோட வாசனையும் அந்த இடம் பூரா மணக்குது. சின்ன நெற்றி அவளுக்கு அதுல பிறைக் குறியிட்ட திருநீறு வைத்து இருக்கிறாள் ; இரண்டு கண்களிலும் மை பூசி இருக்கிறாள் ; அந்த கண்கள் இரண்டும் கெண்டை மீன் மாதிரி இருக்கு ; பாத்ததும் கவர்ந்து இழுக்கற மாதிரி பெரிய மத யானை மாதிரி இருக்க மார்புகளின் இணை கோடுகள் அசைய (எப்பிடி சொல்லுறது இத? He is talking about cleavage); அது மேல நீலக்கல் வடத்துடன் கோவையாகக் கோத்த தாலியும் தொங்குது ; வஞ்சிக்கொடி போன்ற இடையில் அணிந்த பட்டும் அதினுள்ள ஐந்துவகை வண்ணத்தின் அழகும் தெரியுற மாதிரி மருதூர்லையே இவதான் அழகுன்னு சொல்லுற மாதிரி வந்தாள் ;

இப்ப சொல்லுங்க .. ஏன் நம்ம அழகன் விழுந்திருக்க மாட்டான் ??

பள்ளன் அறிமுகம் :

"கறுக்குங் கடாய் மருப்பின்
முறுக்கு மீசையும்--சித்ரக்
கத்தரிகை யிட்ட வண்ணக்
கன்னப் பரிசும்
குறுக்கில் வழுதடி சேர்த்
திருக்குங் கச்சையும்--செம்பொற்
கோலப் புள்ளி் யுருமாலும்
நீலக் கொண்டையும்
சறுக்குந் தொறுங் குதிப்பும்
சுறுக்குந் தலை--யசைப்பும்
தடிசுற்றி ஏப்ப மிட்டே
அடிவைப் பதும் 
மறுக்கும் மதுவெறிகொண்
டுறுக்குஞ் சிரிப்புந் தோன்ற
வடிவழகக் குடும்பன்வந்து
தோன்றினானே."

சீற்றங் கொள்ளும் ஆட்டுக்கடாயின் கொம்பு போன்ற முறுக்கு மீசையும், அழகிய கத்தரிக்கோலால் வெட்டிவிட்ட அழகான கன்னத்துப் பக்கத்தின் எழிலும், இடுப்பில் வழுதடி என்ற ஒருவகைப் படைக்கலத்துடன் சேர்த்து இறுக்கிக் கட்டிய கச்சையும், பொன்னாலாகிய அழகிய புள்ளியுள்ள உருமால் என்ற அணியும், நீலநிறக்கொண்டையும், காலில் ஏதேனும் இடறிச் சறுக்குந்தோறும் குதித்தலும், சுறுக்கென்று ஏதேனுந் தைக்குந் தோறும் தலையசைத்தலும் உடையவனாகித் தடியைச் சுற்றி ஏப்பமிட்டுக்கொண்டு மெல்ல அடிவைப்பதும், அறிவை மறுதலைப் படுத்தும் கள்வெறி கொண்டு
காரணமின்றி சிரிப்புந் தோன்ற வடிவழகக் குடும்பன் வந்து நாடக மன்றத்தில் தோன்றினான்.


சரி , மூணு பேரும் வந்தாச்சு ; என்ன பண்ணுறாங்கனு அப்பால பாப்போம் ;

நன்றி,
ஆசிப்


Tuesday, December 30, 2014

முக்கூடற்பள்ளு - I - ஊதாக் கலரு ரிப்பன்

வணக்கம் நண்பர்களே !!

கடந்த வாரம் ஒரு நான்கு நாட்கள் விடுமுறை..தாவீது குமாரனின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு புதுசாப் படிக்க எதுனா இருக்கா இருக்கானு தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தேடியதில் கிடைத்தது "முக்கூடற்பள்ளு". நான் இதுவரை இதைப் படித்ததில்லை. சங்க இலக்கியத்தில் இது வராது , ஏனோ தெரியல இக்கால இலக்கியத்திலும் இத நான் படிக்கல ; சரி விடுங்க ; இப்பவாது படிக்க வாய்ப்பு கிடைச்சுதே.. பள்ளு 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒண்ணு ; "ஆடுவோமே , பள்ளு பாடுவோமேனு" நம்ம பாரதி பாடினது இந்தப் பள்ளுவத்தான்.. எனக்கு முக்கூடற் பள்ளு ஒண்ணுதான் தெரியும் ; ஆனா ஏகப்பட்ட பள்ளுப் பாடல்கள் இருக்கு ;

திருவாரூர்ப் பள்ளு, குருகூர்ப் பள்ளு, திருமலைப் பள்ளு, சிவசயிலப் பள்ளு, வைசியப் பள்ளு, வடகரைப் பள்ளு, உரிமைநகர்ப் பள்ளு, சீகாழிப் பள்ளு, தில்லைப் பள்ளு, கண்ணுடையம்மை பள்ளு, கதிரைமலைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு, சேற்றூர்ப் பள்ளு, திருவிடைமருதூர்ப் பள்ளு, மாந்தைப் பள்ளு, கூடற் பள்ளு, தஞ்சைப் பள்ளு, தென்காசைப் பள்ளு, கொடுமளூர்ப் பள்ளு, இராசைப் பள்ளு, புதுவைப் பள்ளு, முக்கூட்டுப் பள்ளு, மன்னார் மோகனப் பள்ளு, சண்பகராமன் பள்ளு, வையாபுரிப் பள்ளு, திருச்செந்தில் பள்ளு இப்பிடிச் சொல்லிட்டே போகலாம் ;

முக்கூடற் பள்ளுதான் முதல் பள்ளு இலக்கியமாகவும் , ஆகச் சிறந்தப் பள்ளு இலக்கியமாகவும் இருக்குதுன்னு படிச்சவங்க சொல்லுறாங்க ;

அதுலாம் சரிதான்ப்பா ? அது என்ன பள்ளு ? அப்பிடினுதானே கேக்குறிங்க ? வரேன், வரேன் ; பள்ளன், பள்ளத்தி பாடுறதுதான் பள்ளு ;

என்னடா இவன் தீடீர்னு சாதியப் பத்தி பேசுறான்னு பாக்குறிங்கள ? என்ன பண்ணுறது ? நம்ம அந்த மாதிரி ஆக்கி வைச்சுருக்காங்க ;

இது விவசாயி பாடுற பாட்டுங்க ;

உழவன் & உழத்தி ; பள்ளம் = பள்ளு ; பள்ளத்தில் வேலை செய்யும் உழவன் & உழத்தி = பள்ளன் & பள்ளத்தி ; that's all ;

ஆழமா உழுதுட்டே இருந்தா நிலம் பள்ளமாத்தானே ஆகும் ; வரப்புதான் மேடா இருக்கும் ; விவசாய வேலை செய்யற இடம் பள்ளமாத்தான் இருக்கும் ; இப்பப் புரியுதுல ;  அப்பிடி பள்ளமான விவசாய நிலத்துல உழவனும், உழத்தியும் சந்தம் போட்டு இசையோட பாடுற பாட்டுதான் பள்ளு ; இதத்தான் ரொம்பக் காலமா பாடுறாங்களே , ஆனா ஏன் முக்கூடற் பள்ளுதான் முதல் பள்ளுனு சொல்லுறோம் ? பாடுறாங்க ; ஆனா யாரும் எழுதி வைக்கலையே ; 16௦௦+ ஆண்டுகளில் மூவேந்தர்களின் ஆதிக்கம் குறைந்தது போய்டுச்சு ; சங்கம் வைச்சு தமிழ் வளர்க்கலாம் ஆளும் இல்ல இடமும் இல்ல ; அதுவுமில்லாம பிற மொழிக் கலப்பு வேற ; காப்பியம் , பெருங் காவியம் எழுதுற மாதிரி சூழலும் இல்ல ; அப்பத்தான் இந்த மாதிரி  சிற்றிலக்கியங்கள் பாடப்பட்டன ; இது மாதிரி ஏகப்பட்ட இலக்கியங்கள் காணாமப் போய்டுச்சு ;

சரிப்பா ; இதுல என்ன விசேசம் ? அப்பிடி தேடித் போய் படிக்குறதுல என்ன இருக்குது  ?

1. ரொம்ப ரொம்ப எளிமையான பாடல்கள் ; விளக்கமே வேண்டாம் ;
2. இசை ; முழுக்க முழுக்க இசையோட இருக்கும் பாடல்கள் ; சந்தம்லாம் யோசிக்க வேணாம் ; பாடுனா அதுவா வந்துரும் ;
3. ஒரு அருமையானக் குட்டி கதை ;
4. வேளாண்மைப் பத்தித் தெரியனுமா , இது முழுவதும் அது பத்திதான் ;
5. ஒன்பதுவகை உணர்வுகளால் பிறக்கும் கவிதைகளின் ஒரு பேரின்பத்தை முற்றுந் தருகிறது; அதப் கொஞ்சம் பின்னால பாப்போம் ;

one mark question: முக்கூடற் பள்ளு ஆசிரியர் யார்? ஒரு பய இதுக்கு விடை எழுத முடியாது ; ஏன்னா யாருக்கும் தெரியாது ;  இவ்வளவு அருமையாப் பாட்டு எழுதிட்டு பேரு சொல்லாமப் போய்ட்டான் :(((

அருமையானக் குட்டி கதைனு சொன்னேன்ல ; அத இப்பவே பாத்துருவோம் ; overview மாதிரி ;

கதை நடக்கும் இடம்: முக்கூடல் ; திருநெல்வேலிக்குப் பக்கத்துல ; இன்னும் ரெண்டு ஊர் தெரியனும் நமக்கு : திருநெல்வேலில ஓடுற பொருநை ஆற்றின் வடக்கோட்டுல இருக்க ஊரு ஆசூர் வடகரை ; தெக்கொட்டுல இருக்க ஊரு சீவலமங்கைத் தென்கரைநாடு. சீவல்லபன்’ என்ற பாண்டியனால் வெட்டப் பெற்ற ஏரி = ‘சீ வல்லபன் பேரேரி’ ==> சீவலப்பேரி == இதுதான் முக்கூடலின் இப்போதைய பெயர் ;

கதைல வர நாயகன் = வடிவழகன் (அழகன்) ; ஒரு உழவன் ; அந்த ஊரு பண்ணையார் நிலத்துல வேளாண்மை பண்ணுறதுதான் அவனோட வேல ;

நாயகி = முக்கூடற்பள்ளி , ஆசூர் வடகரை ஊர்க்காரி ; ஆனாப் பாருங்க நம்ம அழகன் ரெண்டு பொண்டாட்டிக்காரன் :))

மூத்தபள்ளி முக்கூடற்பள்ளி இருக்கும் போதே ஒரு இளையபள்ளி = மருதூர்ப்பள்ளியைக் கட்டிக்குறான் ; இவ ஊரு = சீவலமங்கைத் தென்கரைநாடு. கட்டினவன் புது பொண்டாட்டி மோகத்துலேயே மருதூர்ப்பள்ளி வீட்டுலேயே இருந்துறான் ; மூத்தபள்ளி வந்து வந்து கூப்பிட்டுப் பாக்குறா ; அவன் வருவனான்னு இளையபள்ளி கூடவே இருக்கிறான் ;

மழை காலம் வரப் போகுது ; பண்ணியார் நிலத்துலத் தண்ணி ஊத்தி வேளாண்மை பண்னுடானா , இவன் இளையபள்ளி கூட ...... சரி விடுங்க :))))

பொறுத்து பொறுத்துப் பாத்த மூத்தபள்ளி பண்ணையார்ட்ட போய் புகார் சொல்லுறா ; பண்ணையாரும் சரி நான் போய்க் கேக்குறேன்னு இளையபள்ளி வீட்டுக்கு வந்து வடிவழகன கூப்பிடுகிறார்; அழகன வீட்டுக்குள்ள ஒளிச்சு வைச்சுட்டு அவன் போய்ட்டான் இங்க வரவே இல்லன்னு சொல்லுறா இளையபள்ளி ; பண்ணையார் அழகனைக் கண்டிச்சு ஒழுக்கமா அவர் நிலத்துல(யும்) கொஞ்சம்  வேளாண்மை பண்ணச் சொல்லுறார் ;


இதுல இன்னொரு பிரச்சனை என்னான ? இளையபள்ளி = சைவ சமயம் ;  மூத்தபள்ளி = வைணவம் ; இது போதாதா ? ஒரு பெரிய தசாவாதாரப் போரே நடக்குது :)

அழகன் பண்ணியார் சொன்ன வேலையை செய்யல ; கோவக்காரப் பண்ணையார் அவனுக்கு தண்டனை கொடுக்க மூத்தபள்ளி வந்து அவனைக் காப்பாற்றுகிறாள் ; அதுல இருந்து இளையபள்ளி/மூத்தபள்ளி ரெண்டு பேரும் ஒற்றுமையாகி பள்ளனோட சந்தோசமா இருக்காங்க !!!!!!!!!!!!!(????)

இன்னிலேஇருந்தது "முக்கூடற் பள்ளு"தான் ; எனக்குப் பிடிச்ச பாட்டா போட்டுத் தாக்கப் போறேன் ;

இன்னிக்கு நிறைய introduction கொடுத்ததால கொஞ்சம் பின்னால போய் ஒரு பாட்டைப் பாக்கலாம் ; என்னோட ஆசைக்கு  :))

நிலத்த நல்லா உழுது, தண்ணி விட்டாச்சு ; நாத்து நடத்தனும் ; நாத்து நட நிறைய பள்ளியர் வாரங்க ;

பள்ளியர் வருகை:

"சின்னி குருந்தி அருதி மருதி
செல்லி இருவி எல்லி கலிச்சி
திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி
செம்பி வம்பி தம்பிச்சாள்
நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி
நல்லி பூலி ஆலி வேலி
நாச்சி பேச்சி சுந்தி எழுவி
நாகி போகி லாள்
பொன்னி அழகி நூவி சேவி
பூவி சாத்தி காத்தி அம்மச்சி
பூமி காமி வேம்பி கரும்பி
புலிச்சி அங்காளி
கன்னி பொதுவி அன்னம் பாலி
கள்ளியுங் கலந் தொருவர்க் கொருவர்
கைவிரசலாய் நடுகைச் சமர்த்தைக்
காட்டும் பள்ளீரே."

நாத்து நட்டு பாத்து இருக்கிங்களா ? ஒரு leader இருப்பாரு ; அவர் சொல்லுர மாதிரி மத்தவங்க follow பண்ணுவாங்க ; இங்கேயும் அதேதான் ; இதுலாம் நாத்து நட வந்திருக்குற பள்ளியர்களோட பேரு ; அவங்கப் பாத்து நடுகைத் தலைவி எல்லாரும் உங்க கைவரிசையை காட்டுங்கன்னு சொல்லுறா ;

சின்னியும் குருந்தியும் அருதியும் மருதியும் செல்லியும் இருவியும் எல்லியும் கலிச்சியும் திருவியும் அணைஞ்சியும் வெழுதியும் பெரிச்சியும் செம்பியும், வம்பியும் தம்பிச் சாளும் நன்னியும் உடைச்சியும் சடைச்சியும் மூக்கியும், நல்லியும், பூலியும், ஆலியும் வேலியும் நாச்சியும் பேச்சியும் சுந்தியும் எழுவியும் நாகியும் போகிலாளும், பொன்னியும் அழகியும் நூவியும் சேவியும் பூவியும் சாத்தியும், காத்தியும் அம்மச்சியும் பூமியும் காமியும், வேம்பியும் கரும்பியும் புலிச்சியும் அங்காளியும் கன்னியும் பொதுவியும் அன்னம் பாலியும் கள்ளியும் ஆகிய எல்லீருங்கூடி ஒருவர்க் கொருவர் கைவிரசலாய் நீங்கள் நடுகை நடுகின்ற திறமையைக் காட்டுங்கள் பள்ளியர்களே..

இதுல "குருந்தி" ஒரு பேரு சொல்லி இருக்கேன் பாருங்க ; அவளைப் பத்தித்தான் அடுத்த பாட்டு ; in fact இந்தப் பாட்டைச் சொல்லத்தான் மேல இருக்கும் பாட்டைச் சொன்னேன்;

"வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படம் பாத்து இருக்கிங்களா ? அத கொஞ்சம் நியாபகம் பண்ணிக்கங்க ; அதுல லதாபாண்டி uniform போட்டுட்டு school போகும் போதெலாம் போஸ் பாண்டி கண்டுக்கவே மாட்டாரு ; ஆனா அப்புறாம ஒரு changeover வரும்; அதுதான் இங்கயும் ; (அப்பாட பதிவுக்கு தலைப்பு கிடைச்சாச்சு )

படம் பாக்காதவங்க இந்தப் படக் காட்சியைப் பாருங்க ;



இந்தப் பொண்ணு குருந்தி போன வருசம் கூட நாத்து நட வந்துச்சு ; ஆனா அப்பா சின்னப் பொண்ணு; யாருமே கண்டுக்கல ; ஆனா பாருங்க இந்த வருசம் பெரிய பொண்ணா இருக்கு ;பாக்குறவன்லாம் அட நம்ம "குருந்தி"யா இதுன்னு வாயைத் துறக்குறான் :))

"படைகொண் டேவருங் கரனையும்-பொரு
விடையஞ்சேர் திரி சிரனையும்
பண்டு முடித்த கணையினார்-குகன்
கண்டு பிடித்த துணைவனார்
குடைகுன் றாய்ப்பசுக் கிடைநின்றார்-முக்
கூடலழகர் வயலுள்ளே
கொண்டாடிக் கொண்டு நடச்செய்தே-  இன்று


கண்டோ மிதென்ன புதுமையோ
தொடையென் றால்வாழைத் தண்டைப்போல்-விழிக்
கடையென் றால்கணை ரெண்டைப் போல்
சொருக்கென் றால்மேக படத்தைப்போல்-முலை
நெருக்கென் றால்இணைக் குடத்தைப்போல்
இடையென் றால்வஞ்சிக் கொடியைப் போல்-வரும்
நடையென் றால்இளம் பிடியைப் போல்
இருந்த சாயலுக் கிப்பாற்-குருந்தி
திருந்தி னாளடி பள்ளீரே."


முதல் பகுதி ஒன்னுமே இல்ல ; பாட்டு பாடிட்டே நாத்து நட்டோம் ; என்ன பாட்டு ? திருமாலப் பத்தி ;

படைதிரட்டிக் கொண்டு வந்த கரன் என்பவனையும், போர் செய்யுந் தொழிற்றிறம் மிகுந்த திரிசிரன் என்பவனையும் முன்பு எய்து கொன்ற அம்பு உடையவரும், குகன் தனக்குப் பற்றுகோடாக ஆராய்ந்து பற்றிக் கொள்ளப்பட்ட தோழரும், மலையைத் தூக்கிக் குடையாய்ப் பிடித்துக்கொண்டு பசுக்கிடையின் கூட்டங்களுக்கு இடையில் நின்ற கல் மழையைத் தடுத்துக் காத்தவரும் ஆகிய அழகரைக் கொண்டாடி வழிபாடு செய்துகொண்டு நடுகை நடும்போது..

அடுத்த வரிகள்தான் "குருந்தி" எப்பிடி மாறி போயிட்டான்னு சொல்லுறாரு:

என்னடா இது "குருந்தி" இன்னிக்கு ரொம்ப புதுசாத் தெரியுறாலே ; அவளோட தொடை ரெண்டும் வாழைத் தண்டுகள் போலிருக்கின்றன ; ரெண்டு கண்ணும் ரெண்டு அம்பு மாதிரி இருக்கு ; அடர்த்தியா இருக்கும் அவளோட கூந்தல் மேகக் கூட்டம் மாதிரி இருக்கு ; ஒன்றோடொன்று நெருக்கிக் கொண்டிருக்கின்ற மார்புகள் இணையா (ஒரே அளவான ) ரெண்டு குடம் மாதிரி இருக்கு ; இடுப்பப் பாரு,  வஞ்சிக் கொடியைப்போல் இருக்கு ; அவள் நடந்து வரும் நடையப் பாத்தா, இளம் பெண் யானையின் நடையைப் போலிருக்கின்றது;முன்ன ரொம்ப மென்மையாக இருந்தா ; இப்ப ஆளே மாறிட்டா ;

இப்பிடிலாம் சொன்னது யாரு ? கூட நாத்து நட்ட பொண்ணுங்கதான் ; (கண்ணு வைக்கதீங்காமா :)) )

இப்போதைக்கு இங்க நிறுத்திக்குவோம் ; முதல இருந்தது நல்ல நல்ல பாட்டாப் பாத்துட்டு வருவோம் ; உங்களுக்கு பிடிச்சுருந்தா கருத்து சொல்லிட்டுப் போங்க :)


நன்றி
ஆசிப்

Sunday, December 28, 2014

எப்பிடி இருக்கா புதுப் பொண்ணு ??

வணக்கம் நண்பர்களே !!

மருதம், குறிஞ்சித் திணைப் பாடல்கள் கொஞ்சம் பார்த்தோம். இன்றைக்கு முல்லைத் திணைல ஒரு பாட்டு பார்க்கலாம். இன்னிக்கும் குறுந்தொகைல இருந்ததுதான் இந்த பாட்ட எடுத்துட்டு வரேன் ; குறுந்தொகை மட்டுமில்லை எந்த சங்க இலக்கியம் படித்தாலும் அதிலுள்ள கதை மாந்தர்கள் நம் கண் முன் வந்து போவர்கள் ; அதாவது பாட்டில் கூறப்படும் ஒரு நிகழ்வையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும் ; யதார்த்தமில்லாத எந்த நிகழ்வையும் சங்கப் பாடல்கள் கூறுவதில்லை ;

சங்கப் பாடல்களில் தலைவன், தலைவி, தோழன், தோழி, பாணன் போன்ற கதை மாந்தர்கள் வருவார்கள் ; உங்களுக்கும் இவர்கள் யார் என்று எளிதாகப் புரிந்ததுவிடும்.. செவிலித்தாய், நற்றாய் அப்பிடின்னு இரண்டு கதை மாந்தர்கள் அடிக்கடி வருவார்கள் ; யார் இவர்கள்? ஒரு வீட்டில் அப்பா, அம்மா, ஒரு பொண்ணு , பக்கத்து வீட்டுல அந்த பொண்ணோட தோழி அவளோட அம்மா இருக்காங்கனு கற்பனை பண்ணிக்கங்க ;

பொண்ணு = தலைவி ; பக்கத்து வீடு பெண் =தோழி ;
அம்மா =  நற்றாய் ; தோழியின் தாய் = செவிலித்தாய் ;

ஏன் செவிலித்தாய் ? இவதான் தலைவியை வளர்ப்பா; அதவாது செவிலித்தாய் = தலைவியின் வளர்ப்புத் தாய் ; நற்றாய் = தலைவியின் பெற்ற தாய் ;

தலைவியின் காதல் , திருமணம் இரண்டிலும் தோழி & செவிலித்தாயின் பங்கு மிகப் பெரியது ; இவர்களுக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது ; சரி ; இதலாம் இங்கயே விட்டுட்டு நம்ம பாட்டுக்கு வருவோம் ;

சூழல் :
தலைவி திருமணம் முடித்து தலைவன் வீட்டுக்கு சென்று விடுகிறாள். அவள் வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண் ;புகுந்த வீட்டில் என்ன செய்கிறாளோ என நற்றாய்க்கு ஒரே கவலை; போய் பார்த்துட்டு வரவும் முடியல ?? (புகுந்த வீட்டுக்காரங்க கூட எதுவும் பிரச்சனையான்னு தெரியல).. அப்ப, செவிலித்தாய், நீ ஏன்மா கவலைப்படுற ? அவ நான் வளர்த்த பொண்ணு ? அருமையா குடும்பம் நடத்துவா ; நானே நேர்ல போய் பார்த்துட்டு வந்து உனக்கு சொல்லுரேனு சொல்லிட்டு தலைவி வீட்டுக்குப் போய் அவளைக் கண்டுவந்து சொல்லவதாக இந்தப் பாடல் உள்ளது.

பாடல்: 

"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்    
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்     
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்     
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் 
இனிதெனக் கணவ னுண்டலின்     
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே."

குறுந்தொகை (#167)
பாடியவர் : கூடலூர் கிழார்
கடிநகர்ச் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது
திணை : முல்லை
(கடிநகர் = தலைவனும் தலைவியும் மணம்புரிந்து கொண்டு இல்லறம் நடத்தும் வீடு)

ரொம்ப எளிமையான பாட்டுதான். என்ன சொல்லுறாரு ? தலைவி தலைவனுக்கு சோறு, புளிக்குழம்பு  சமைத்துப் பரிமாறுகிறாள் ;
அவன் சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்குதுன்னு சொல்லுறான் ; அவளுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்குது ; இதுதான் பாட்டு சொல்லுது;

முளிதயிர் பிசைந்த= முற்றிய தயிரைப் பிசைந்த ; கழுவுறு கலிங்கம் = துடைத்துக் கொண்ட ஆடையை ; கழாஅது உடீஇ= துவையாமல் உடுத்துக் கொண்டு;குய் புகை கமழ=தாளிப்பினது புகை மணப்ப ;
தான் துழந்து அட்ட=தானே துழாவிச் சமைத்த; தீ புளி பாகர் = இனிய புளிப்பையுடைய குழம்பை.

கொஞ்சம் விரிவாப் பாக்கலாம் : 

தலைவி வீட்டுல தயிர் கடைஞ்சுட்டு இருக்கா ; கடையிர அவ விரல் எப்பிடி இருக்குனா , காந்தள் மலர் மாதிரி இருக்குதாம். வெளிய போய்ட்டு தலைவன் நல்ல பசியோட வீட்டுக்கு வரான் ; வீட்டுக்குள்ள வரும்போதே தாளிச்ச வாசனை பசியைக் கிளப்புது ; தலைவியோட கண்ணு குவளை மலர் மாதிரி இருக்கு , அதுல கண் மை வேற போட்டு இருக்கா ; அவளப் பார்த்து போதும் தயிர் கடைஞ்சது ; சாப்பிடலாம்னு சொல்லுறான் ; இவ தயிர் கடைஞ்சுடே சமையல் பண்ணிருக்கா ; அப்ப தயிர் கொஞ்சம் கைல படும்போதுலாம் அவளோட சேலைலத் துடைச்சுடே வேலையப் பாத்திருக்கா ; இப்ப இவன் பசிக்குதுன்னு சொல்லும் போது சேலையை மாத்திட்டு வாரேன்னு சொல்ல முடியுமா ? அதே தயிர் துடைத்த ஆடையுடன் தான் சமைத்த புளிக் குழம்பை
பரிமாருகிறாள் ; அவன் சாப்பிட்டுட்டு , சும்மா சொல்லக் கூடாது ; சாப்பாடு அருமைனு சொல்ல, அவ முகம் சந்தோசத்துல அப்பிடியே மலருது ;



நம்ம செவிலித்தாயை விட்டுட்டோமே ; அவ தலைவியைப் பார்க்க வந்தாள்ல , வந்து சமையல் அறைல இருந்தது மேல சொன்ன காட்சியைலாம் பாக்குறா ; அட அட , நம்ம பொண்ணா இதுன்னு சந்தோசமா கிளம்பி நற்றாய்க்கு வந்து சொல்லுறா ; நீ என்னமோ நினைச்சியே , என் பொண்ணு என்னமா குடும்பம் நடுத்துறா தெரியுமா ? வீட்டை நல்லாப் பாத்துக்குரா , விட்டுக்காரருக்கு என்ன வேணுமோ அத அவன் சந்தோசப்ப்படும்படி செய்ய்கிறாள் ; அதுனால அவளைப் பத்தின கவலையை நீ விட்டுறு.

இது நம் எல்லோர் வாழ்விலும் நடக்கும் / நடந்து இருக்கும் ; திருமணம் முடிந்த பிறகு மனைவியின் சித்தியோ, அத்தையோ நம் வீட்டிற்கு வந்து போவார்கள் ; நிறைய விசாரணைகள் நடக்கும் ; status report தாயிடம் சேர்க்கப்படும் :)) இதுதான் மேல கூடலூர் கிழார் பாடியுள்ள காட்சி..


ஒரு படக் காட்சியை இணைத்துள்ளேன் ; இதில் வரும் ஜெய் கணேசு கதாப்பாத்திரம்தான் செவிலித்தாய் எனக் கொண்டால் இப்பாடல் இன்னும் இலகுவாகப் புரியும்.



நன்றி
ஆசிப் 

Friday, December 26, 2014

ஈருடல் ஓருடல் ஆனது !!

வணக்கம் நண்பர்களே !!

சங்க இல்லக்கியப் பாடல்கள் அனைத்தும் திணை வாரியாகப் பிரிக்கப்பட்டவை. திணைகள் ஐந்து வகைப்படும் . நெய்தல், முல்லை, மருதம், குறிஞ்சி, பாலை. இவை தவிர கைகிளை மற்றும் பெருந்திணை என்ற இரண்டும் உண்டு. முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும். இவைகள் நிலம்  சார்ந்து பிரிகப்பட்டவை என்றாலும் இவற்றின் உரி பொருட்கள் இதன் தன்மைகளை கூறும்.

குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் - தலைவனும் தலைவியும் கூடி இருப்பது. 
பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்  - தலைவன் பொருள் தேடும் பொருட்டு தலைவியைப் பிரிந்து இருப்பது.
முல்லை -  (காத்து)  இருத்தலும் இருத்தல் நிமித்தமும்  - பிரிவை ஆற்றி இருத்தல்
நெய்தல் - (துன்பத்தில்) இரங்குதலும் இரங்குதல் நிமித்தமும்  - பிரிவை எண்ணி இரங்கி இருத்தல்.
மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்  - தலைவன் தலைவிக்கிடையே ஊடல்.

எனக்குக் குறிஞ்சித் திணையை விட மருதம் ரொம்பப் பிடிக்கும் ; மருதம்னா ஊடல்னு சொல்லிட்டோம் ; simpleல சொன்ன புருசன் - பொண்டாட்டி சண்டை ;பொண்டாட்டி எதுக்கு சண்டை போடுறா ? புருசன்காரன் அவள விட்டுட்டு வேற ஒருத்திக் கிட்ட போய்டான் ; அவன் அங்க போய்ட்டானு அவன  பப்ளிக்கா திட்டுவா ; இல்லனா அந்த பொண்ணப் பாத்த அவகிட்ட சண்டை போடுவா ; இல்ல புருசன் திருந்தி வந்தா அவன்ன வாசப்படியிலேயே நிக்க வைச்சு நாக்கப் புடிங்கிக்கற மாதிரி கேள்வி கேட்டு சண்டை போடுவா ; இதலாம் பாட்டுல வந்தா அதுதான் மருதத் திணைப்பாடல்கள் ; so, இந்தத் திணைப்பாடல புதுசா ஒரு பாத்திரம் வருது ; இந்த சண்டைக்கெல்லாம் காரணமா ; அவதான் "பரத்தை" ;

பரத்தைக்களில் "இல்-பரத்தை" , "நயப்புப் பரத்தை", "காமக் கிழத்தி" அப்பிடினுலாம் type இருக்குது ; அத அப்புறம் பாக்கலாம் ; இன்னிக்கு ஒரு பாட்டு பாக்கலாம் குறுந்தொகைல இருந்தது.

"பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இருமருங்கினமே, கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி, அவன்
நல் அகம் சேரின், ஒருமருங்கினமே"

குறுந்தொகை (#370)
பாடியவர்: வில்லக விரலினார்
திணை: மருதத் திணை
சூழல்: கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டபரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. ( ஒரு கணவன், தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தி(பரத்தை)யுடன் வாழ்கிறான். இதனால், அவனுடைய மனைவி அந்தப் பரத்தையை இழிவுபடுத்திப் பேசுகிறாள், இதைக் கேட்டுக் கோபமுற்ற பரத்தை இப்படிச் சொல்வதாகப் பாடப்பட்ட பாட்டு ).

ஐந்தே வரிகள்தான் ; ஆனால் ஆழமானக் கருத்துகள் ; இந்த மாதிரியான அருமையானப் பாட்டை எழுதியது யாருன்னு தெரியல ; அதுனால பாட்டுல வரும் ஒரு நல்ல வார்த்தையைக் கொண்டு பாடியவர் பெயர் வைச்சாச்சு ; அதுதான் வில்லக விரலினார்.

பொய்கை=இயற்கையாய் உருவான நீர்நிலை (வெட்டிய குளம் இல்லை) ; ஆம்பல்=அல்லிப் பூ ; கொழு  = நல்ல செழிப்பான;  முகை=அரும்பு ;மருங்கு=உடல், பக்கம்

Direct Meaning: 

குளத்தில் ஆம்பல் அரும்பியுள்ளது. அழகான நிறத்தைக் கொண்ட அந்தக் கொழுத்த அரும்புகளை வண்டுகள் ஊதித் திறந்து மலரவைக்கின்றன. அப்படிப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துறைகளைக் கொண்டவன் என் காதலன். அவனோடு வாழும்போது, நாங்கள் ஈருடல், ஓருயிர் ஆனோம். அவனோடு இணையும்போது, வில்லை அழுத்திப் பிடிக்கும் விரல்களைப் போல் ஒருவரோடு ஒருவர் இறுகப் பொருந்தி, ஒரே உடலாகவும் மாறிவிடுகிறோம்.

Indirect Meaning: 

ஆம்பல் மலரை வண்டு தேடிச் செல்வது பரத்தையைத் தேடிச் செல்லும் தலைவனுக்கு  உவமை ஆகிறது. ( ஆம்பல் =>அல்லிப் பூ = பரத்தை ; வண்டு = தலைவன் ) ; இவன்தான் அவளைத் தேடித் போறான் ; அவ மேல எந்தத் தப்பும் இல்ல ; எப்பிடின்னு கேக்குறிங்களா ?? அடுத்த வரியைப் பாருங்க ; 
வண்டு வாய் திறக்கும் ;  அந்த செழிப்பான அல்லிப் பூ அரும்பு இயற்கையா விரிவதற்கு முன்னால இந்த வண்டு வந்து சூடேத்தி செயற்கையா முன்கூட்டியே விரிக்கப் பாக்குது. அதுதான்  "வண்டு வாய் திறக்கும்".. புரிஞ்சுதா :))

இதுதான் first ballலேயே சிக்ஸ் அடிக்குறது ; அடுத்த வரியைப் பாருங்க இன்னொரு  சிக்ஸர் ; 

அவனும் நானும் என்னோட வீட்டுல சும்மா இருக்கும் பொது இரண்டு உடல்களாக இருப்போம் ; அவனோடு கூடும் போது , வில்லை வளைத்து அம்பை விடும் பொது எப்பிடி கட்டை விரலும் , ஆட்காட்டி விரலும் ஒன்றோடு ஒன்று இறுக்கமாக இறுக்கி இருக்கோமோ அந்த மாதிரி ஒன்னாகி ஒரே உடலாக மாறிடுவோம்.. :)))

அது சரி, இங்க ஏன் வில்லை உவமையாகச் சொல்லுறார் ?? ஒரு வில்/அம்பு எடுத்து விட்டுப் பாருங்க உங்களுக்கே தெரிஞ்சிடும் ; 


வில்லை நல்லா வளைத்துத்தான் நாண் எத்தனும் ; ஒரு கை வில்லோட வளைவைப் பிடிச்சு இருக்கணும் ; இன்னொரு கை நாணனை இழுக்கணும் ; அவளை வளைக்கனும் ; உணர்ச்சி நரம்பை சுண்டி இழுக்கணும் ; ஒரே நேரத்துல ; அதே நேரத்துல விட்ட அம்பும் குறித் தவறக் கூடாது ; :))))) நான் இங்கயே நிறுத்திக்கிறேன் ... இதுக்கும் மேல போனா அடி விழும் ; 




பாட்டோட கடைசி வரி ; இப்பிடி இருக்கிற என்னை அவன் விட்டுட்டு நல் அகம் (உன்னோட வீட்டுக்கு ) போயிட்டானா நான் ஏக்கத்துல ஒரு உடல் ஆகிடுவேன் ; 

என்னத்தான் தலைவி பரத்தையைத் திட்டினாலும் அவ தலைவி வீட்டை நல அகம் அப்பிடின்னு சொல்லுறா ; அவன் அங்க போயிடாலும் அவனையே நினைச்சுட்டே வாழ்ந்துருவேன் அப்பிடின்னு 
சொல்லுறா ; 


இதுல யாரு நல்லவங்க ?? தலைவியா ? பரத்தையா ??நீங்களே முடிவு பண்ணிக்கங்க !! 

நன்றி
ஆசிப் 

Thursday, December 25, 2014

சங்க கால Horror Story - Part III

வணக்கம் நண்பர்களே !!

போர் பாடியது , களம் பாடியது பார்த்தோம் ; களம் பாடியதில் கடைசி பகுதி கூழ் அடுதல் == பேய்கள் காளிக்குக் கூழிட்டுப் படைத்து வழிபடுதல். Part Iல கலிங்கத்துப்பரணில இருக்குற வெவேறு பகுதிகளின் பெயர்களைப் பார்த்தோம்ல ; அதுல ஒண்ணு, பேய் முறைப்பாடு == காளியிடம் பேய்கள், பசியில் வாடும் எங்களை யார் காப்பார் என முறையிடுதல், சங்கடம் உரைத்தல். எங்கள் பசி போக்கிக் கொலை இறங்க வேண்டும் என இரத்தல்.
So, காளி இங்க ஒரு பெரிய போர் நடக்கப் போகுது , அங்க போனா நமக்கு நேரிய சாப்பாடு கிடைக்கும்னு சொல்லித்தான் பேய்களைக் கூட்டிட்டு வந்து போர், களம்லாம் காட்டுறாங்க ; அடுத்து என்ன ?? சாப்பாடுதான் ;


காளி பேய்களைக் கூழடுமாறு மொழிந்தது: 

"களமடையக் காட்டுதற்கு முடிவ தன்று
கவிழுமதக் கரிசொரியக் குமிழி விட்டுக்
குளமடைபட் டதுபோலும் குருதி யாடிக்
கூழடுமின் என்றருளக் கும்பிட் டாங்கே."

காளி பேய்களைப் பார்த்து , இந்தக் களம் முழவதும் பார்ப்பது என்பது முடியாத காரியம் ; இங்கு இறந்தது கிடக்கும் யானைகளின் குருதி ஆறு போல ஓடுகிறது ; அந்தக் குருதியில் குளித்து , கும்பிட்டு, சமைக்க ஆரம்பியுங்கள் என்று கூறியது.

பேய்கள் ஒன்றனை ஒன்று அழைத்தல்:

"குறுமோ டீநெடு நிணமா லாய்குடை கலதீ கூர்எயி றீநீலி
மறிமா டீகுதிர் வயிறீ கூழட வாரீர் கூழட வாரீரே."

மோடீ,  நிணமாலாய்,  கலதீ,  கூர்எயிறீ,  நீலி,  மறிமாடீ, குதிர்வயிறீ == வேறு வேறு பேய்களின் பெயர்கள் ; சமைக்க வாருங்கள் ,  சமைக்க வாருங்கள் என்று அப்பேய்களை கூப்பிட்டன.

பேய்கள் பல் துலக்கம்: 

என்னதான் பேய் என்றாலும் பல் விளக்கிடுத்தான் சாப்பிடும் போல :)))

"பறிந்த மருப்பின் வெண்கோலால்
பல்லை விளக்கிக் கொள்ளீரே 
மறிந்த களிற்றின் பழுஎலும்பை 
வாங்கி நாக்கை வழியீரே."

மருப்பு = தந்தம் ; பழுஎலும்பு = விலா எலும்பு ; தந்ததைப் பறித்து பல்லை விளக்கிக் கொள்ளுங்கள் ; யானையின் விலா எலும்பை எடுத்து நாக்கு வழித்துக் கொள்ளுங்கள் !! வாட்டே மனேர்ஸ் :))

நகம் திருத்தலும் எண்ணெய் இடலும்:

"வாயம் புகளாம் உகிர்கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே
பாயுங் களிற்றின் மதத்தயிலம் பாயப் பாய வாரீரே."

கூரிய அம்புகளைக் கொண்டு நகம் களைந்து கொள்ளுங்கள் ; வழிந்து ஓடும் யானையின் மத நீரை எண்ணெய்யாகக் கொண்டு தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். (Oil Bath)

எண்ணெய் தேய்த்தபின் முழுகல்:

"எண்ணெய்போக வெண்மூளை
என்னுங் களியான் மயிர் குழப்பிப்
பண்ணையாகக் குருதிமடுப்
பாய்ந்து நீந்தி யாடீரே."

எண்ணெய் தெய்ச்சாச்சு , குளிக்க shampoo வேணுமே ; எண்ணெய் போக, வெண்மையான மூளையை எடுத்து சேறு குழப்பி அதைத் தேய்த்து ஆறாக ஓடும் குருதியினுள் கூட்டமாக நீந்தி குளியுங்கள்.

"குருதிக் குட்ட மித்தனையுங் கோலும் வேலும் குந்தமுமே
கருவிக்கட்டு மாட்டாதீர் கரைக்கே இருந்து குளியீரே."

ஒரு warning கொடுக்குது ; ஆறு மாதிரி குருதி ஓடுது , ஆனா ஈட்டியும், எறிகோலும் நிரம்ப மூழ்கிக் கிடக்கும் ; அது தெரியாமல் அதில் அகப்பட்டுக் கொள்ளாதீர்.. கரையில் இருந்தே குளியுங்கள்...

உடை உடுத்தல்: 

"ஆழ்ந்த குருதி மடுநீந்தி
அங்கே இனையா திங்கேறி
வீழ்ந்த கலிங்கர் நிணக்கலிங்கம்
விரித்து விரித்துப் புனையீரே."

குளிச்சாச்சு ; புது உடை வேணுமே ; பேய்க்கு என்ன உடை ? கொழுப்புதான்.. நல்லக் குளிச்சுட்டு, போரில் வீழ்ந்தது இறந்தது கிடக்கும் கலிங்க நாட்டு வீர்களின் கொழுப்பை விரித்து விரித்து (பெரியதாக்கி) அணிந்தது கொள்ளுங்கள் ;

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போய்டல ; பிடிக்காதவர்கள் இங்கயே நிறுத்துக் கொள்ளுங்கள் ; மேலும் படிக்க வேண்டாம்.

கைவளையும் காலணியும் புனைதல்:

"மதங்கொள் கரியின் கோளகையை
மணிச்சூ டகமாச் செறியீரே
பதங்கொள் புரவிப் படிதரளப்
பொற்பா டகமாப் புனையீரே."

மத யானையின் கோளகை (தந்ததில் அணிவிக்கப்படும் ஆபரணம்) எடுத்து கைவளையாக அணிந்தது கொள்ளுங்கள் ;குதிரை வீரர்கள் குதிரை மீது சேணம் இட்டு அதில் அமர்ந்தது வருவர் ; கால் வைப்பதற்கு இரண்டு புறமும் ஒரு வளையம் மாதிரி இருக்கும்ல அதுதான் (பதங்கொள் புரவிப் படி) காலணி ; அணிந்தது கொள்ளுங்கள். 

காதணி புனைதல்:

"பணைத்த பனைவெங் கரிக்கரத்தால்
பரிய கருநாண் கட்டீரே
இணைத்த முரசம் வாள்காம்பிட்
டிரட்டை வாளி ஏற்றீரே."

பருத்த யானையின் துதிக்கைகளை வெட்டி ஒன்று சேர்த்து பெரிய நாண் கொண்டு கட்டி அதில் முரசை (போர் முரசு) பூட்டி காதணியாக அணிந்தது கொள்ளுங்கள்.

இது இப்பிடியே கொஞ்சம் போகுது ; makeup பண்ணுறத இதோட நிறுத்திட்டு மேல போலாம் ;

அடுக்களை அமைத்தல்:

"மாகாய மதமலையின் பிணமலைமேல்
வன்கழுகின் சிறகால் செய்த
ஆகாய மேற்கட்டி யதன்கீழே
அடுக்களைகொண்டு அடுமி னம்மா."

காயம் = உடல் ; மதமலை = யானை ; மலை போன்று குவிந்து கிடக்கும் பிணங்களைச் சுற்றி யானையின் உடல் ,கழுகின் சிறகு கொண்டு கழுகு , பருந்த்தின் இடையூறு இல்லாமல் நெருக்கமாக பந்தல் அமைத்து சமையல் அறை கட்டியாச்சு..

பானையை அடுப்பேற்றுதல்:

"கொற்றவாள் மறவர் ஓச்சக் குடரோடு தலையுங் காலும்
அற்றுவீழ் ஆனைப் பானை அடுப்பினில் ஏற்று மம்மா."

அடுப்பு ready, சமைக்கப் பானை ?? தலையும் , காலும் இல்லமால் இறந்தது கிடக்கும் யானையின் உடல்தான் அந்தப் பானை ; 
(கொஞ்சம் கற்பனை செய்தது பாருங்கள் இதை !!!)

உலைவைத்தல்:

"கொலையினுட் படுகரிக் குழிசியுட் கூழினுக்
குலையெனக் குதிரையின் உதிரமே சொரிமினோ"

பானையை அடுப்புல வைச்சு உலை வைக்கணும் ; உலை வைக்க தண்ணி ?? யானை/குதிரை குருதிதான்.

காயமும் உப்பும் இடுதல்: (காயம் = வெங்காயம்)

"துள்ளிவெங் களனில்வீழ் துரகவெண் பல்லெனும்
உள்ளியுங் கிள்ளியிட் டுகிரினுப்பு இடுமினோ."

உலை கொதிக்க ஆரம்பிக்குது , வெங்காயம், உப்பு சேக்கணும் அடுத்து ; வெங்காயம்=குதிரையின் பற்கள் , உப்பு = நகங்கள் ;

அடுத்து விறகு நிறையக் கொண்டு வந்து நெருப்பை அதிகமாக்குகிறார்கள் ; 

அரிசி கொணர்தல்:

"கல்லைக் கறித்துப் பல்முறிந்து
தவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர்தம்
பல்லைத் தகர்த்துப் பழஅரிசி
ஆகப் பண்ணிக் கொள்ளீரே."

அடுத்து அரிசி போடனும்ல ; சோழ வீரர்களின் தாக்குதலால் ஓடிப் போய் குப்புற விழுந்து அடிப்பட்டு உடைந்து போய்கிடக்கும் கலிங்க வீர்களின் பற்களை பழைய அரிசியாக எடுத்து வாருங்கள். 

அரிசி குற்றும் உரல்:

"சுவைக்கும் முடிவில் கூழினுக்குச்
சொரியும் அரிசி வரிஎயிறா
அவைக்கும் உரல்கள் எனக்குரல்கள் 
அவிந்த முரசம் கொள்ளீரே."

போர்களத்தில்   தோல்கள்   கிழிந்து   சிதைந்து கிடக்கும்  முரசங்கள் அதுதான் உரல் ; அதுல அந்த கலிங்க வீர்களின் பற்களை போட்டு குத்துறாங்க ; குத்த உலக்கை வேணும்ல ; அது என்னனு அடுத்த பாட்டு சொல்லுவார்; நான் இங்கயே சொல்லிறன் . யானை தந்தம்தான் அது ; சும்மா ஒன்னும் குத்தல ; குத்தும் போது காளியையும் , குலோத்துங்கச் சோழனையும் வாழ்த்திப் பாடிட்டே அரசி குத்துதுங்க அந்தப் பேய்கள்; அதுலேயே ஒரு 25 பாட்டு அடுத்து வரிசையா வருது ; அதுலாம் நாம விட்டுரலாம் ;

அடுத்து குத்திய அரிசியை புடைத்து , அதை அளந்து (நான்கு மரக்கால் கொண்ட பெரிய படி) உலையில் போடுதுங்க பேய்கள்.

உலையிலிட்ட அரசிக்குத் துடுப்பும் அகப்பையும்: 

"களப்பரணிக் கூழ்பொங்கி வழியாமல் கைதுடுப்பா
அளப்பரிய குளப்புக்கால் அகப்பைகளாக் கொள்ளீரே."

உலையில் போட்டு கொதிக்கும் அரிசியைக் கிண்ட துடுப்பு, அகப்பை வேணுமே ; அது  வீரர்களின் "கை", குதிரையின் கால்

அடுத்து , அதை பதம் பார்த்து, இறக்கி , சுவை பார்த்து வைச்சாச்சு ; சாப்பிட வேணுமே, அதுக்கு யானை வாலைக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்கின்றன ; உணவு பரிமாற தட்டு வேணும்.. வீரர்களின் தலை/மண்டை உண்கலமாயிற்று ;இன்னும் கொஞ்சம் வேணும் ; தட்டு பத்தல ; கேடயம், வெண்கொற்றக் குடை இதுலாம் தட்டாகிடுச்சு ; பரிமாற கரண்டி ??இருக்கவே இருக்கு யானையோட காது ; 

யானை, குதிரை, வீரர் பிணங்கள், மூளை, குடல், குருதி, பற்கள, நகங்கள்… கலிங்க வீரர்களுடைய பற்களைத் தகர்த்து எடுத்ததுதான் பழைய அரிசி. கொல்லப்பட்ட யானைகளின் தந்தங்கள் உலக்கை. வீரர்களின் மூளை குளிர்ந்த தயிர் இதுலாம் போட்டு பண்ணிய அந்த சாப்பாட்டை சாப்பிட பேய்களை கூப்பிடுது அந்த சமையல்காரப் பேய் :) 

பார்ப்பனப் பேய், சமணப் பேய், புத்தப் பேய், கங்காணிப் பேய், குருட்டுப் பேய், ஊமைப் பேய், கருவுற்ற பேய், மூடப் பேய், நோக்கப் பேய், கூத்திப் பேய், விருந்துப் பேய், ஊர்ப் பேய், கனாக்கண்டு உரைத்த பேய், கணக்குப் பேய் 
அப்பிடின்னு ஏகப்பட்ட பேய்களுக்கு பந்தி பரிமாறப் படுகிறது ; 

என்னடா தீடீர்னு உரைநடைக்கு போயுட்டானுதானே கேக்க வாரிங்க ; பாட்டப் படிச்சு அத விளங்கிக் கொண்டு அப்புறம் எழுதும் போது எனக்கு அது கற்பனைல வரது ; அதுதான் நேர உரைநடைக்குப் போய்டேன் ; 

கூழ் உண்டு முடிந்தபின் வெற்றிலை போடுகின்றன பேய்கள். குதிரைகளின் காதுகள் வெற்றிலை, கணைக்கால் குளம்பு பாக்கு, கலிங்க வீரர் கண்கள் சுண்ணாம்பு.

அப்பிடி செம சாப்பாட்டு சாப்பிட்டு , வெற்றிலை போட்டுட்டு சந்தோசத்துல dance ஆடுதுங்க பேய்கலெல்லாம். கொஞ்சம் dance ஓவராப் போய் அணிந்து இருந்த ஆடைகளைக் கழற்றி வீசி விட்டு ஆடுதுங்க :))

கடைசியா ஒரு பாட்டு.

"பெருக்கத் தின்றீர் தாம்பூலம்
பிழைக்கச் செய்தீர் பிழைப்பீரே
செருக்கும் பேய்காள் பூதத்தின்
சிரத்தின் மயிரை மோவீரே."

சாப்பிட்டு உடனே இப்பிடி ஆடுனா புரை ஏறுமா ? புறையேறினால் பூதத்தின் சிரசு மயிரை மோந்து பாருங்க சரி ஆகிடும் :))

இப்பிடிலாம் பண்ணிட்டு மறுபடியும் சோழ மன்னனுக்கு நன்றி சொல்லிட்டு முடிகிறார் செயங்கொண்டார்..நானும் முடிச்சுக்குறேன்..

இந்த மூணு பார்ட்ல நான் சொன்னது கலிங்கத்துப்பரணியின் கடைசி மூணு பகுதிதான்.. அதுவும் தமிழ் இலக்கியத்தில் இது போல  ஆகச்சிறந்த அருவருப்பும் அருசியும் அதிபயங்கரமும் நிறைந்த இலக்கியம் தமிழில் வேறு இல்லை என்று நான் கருதியதால் அந்தக் கருத்தோடு இணைத்து எழுதப்பட்டது . 

நான் முன்பே கூறியது போல இதில் நிறைய குற்றங்கள் இருக்கலாம்.. என்னைப் பொருத்தவரை இது உங்களுக்கான ஒரு அறிமுகமேத் தவிர பொருளுறையோ / விளக்க உரையோ கிடையாது.. பரணிக்கு உரை எழுதும் அளவிற்கு எனக்கு அறிவும் இல்லை..

part-I ல ; கடை திறப்புனா என்னன்னு கடைசில சொல்லுரனு சொல்லி இருந்தேன் ; இத்தனை வன்முறையை சொல்லப் போவதால், முதல் பகுதியான் கடைத்திறப்பு முழுக்க அகம் பேசுகிறார் செயங்கொண்டார் ; மொத்தம் 54 பாடல்கள் ; அத்தனை பாட்டுகளும் "adults Only".. பெருமை மிகு சோழன் வீதியில் போகிறான் கதவைத் திறந்து பாருங்கள் என்பது போன்ற பாடல்கள் ; தமிழ் இலக்கிய வளங்களின் உச்சங்களில் ஒன்று கடை திறப்பு. போருக்குச் சென்று, வெற்றிக் களிப்பில் வீடு திரும்புவர் வீரர்கள். நாட்டு மக்கள் வழி நெடுக அவ்வீரர்களைக் கொண்டாடுவர். ஆனால் பிரிவுத் துயர் உழன்ற இல்லக் கிழத்திகள், உள்ளே ஆர்வத்தோடும் வெளியே சினத்தோடும் வீட்டுக் கதவுகளைத் தாழிட்டுக் கொள்கின்றனர். அவர்கள் ஊடலைத் தீர்க்கவும் அடித்த கதவங்களைத் திறக்க வேண்டுவதுமான பாடல்கள் கொண்ட பகுதிதான் கடை திறப்பு.

நான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை தமிழ் படிக்கும் போது சிற்றிலக்கியங்கள் ஒரு தாள் ; அதுல கலிங்கத்துப் பரணி முழுக்க இருந்தது ;
போர் பாடியது / களம் பாடியது எப்பப் படிச்சாலும் நேரா கடைத் திறக்க போய்டுவேன் ; இல்லைனா மனசு பூர பேய்கள் ஓடிட்டு இருக்கும் :)) ;

இதலாம் சொல்லுறியே , நீ அதைத்தானே முதல இங்க எழுதிருக்கணும் ?? கூடிய விரைவில் கொஞ்சம் விளக்கமாகவே எழுதுறேன்..

மறுமடியும் நன்றி நண்பர்களே ; படிச்சுட்டு எப்பிடி இருந்த்துசுனு commentsல சொல்லுங்க.. கேள்விகள் , குறைகள் , குற்றங்கள் வரவேற்கப்படுகின்றன.


நன்றி,
ஆசிப் 

Tuesday, December 23, 2014

சங்க கால Horror Story - Part II

வணக்கம் நண்பர்களே !!

நேற்று "போர் பாடியது" பார்த்தோம் ; இன்னிக்கு "களம் பாடியது".. நேத்து நீ கொடுத்த "ஓவர் பில்ட்-அப்க்கு" ஒன்னும் worth இல்லையே இந்த கலிங்கத்துப் பரணி அப்பிடினுதானே கேக்குறிங்க ; இன்னிக்குப்  பாக்கலாம் :) 

களம் பாடியது: 
போரைப் பற்றிச் சொல்லி முடித்த கூளிப் பேய் காளியைப் போர்க்களம் காணுமாறு அழைக்க காளி வந்து களத்தைக் கண்டு, அக்காட்சிகளைப் பேய்களுக்குக் காட்டுமாறு அமைந்துள்ளது. போர் முடிந்து போச்சு ; முடித்த பின்னால அந்த இடம் எப்பிடி இருக்குனு பாக்க வாரங்க ; கொஞ்சம் பாட்டுக்களை மட்டும் பாத்தா நமக்கு புரியும் போரின் வீரியம் ;

போர்க்களப் பெருமை: 

"தேவாசுரம் ராமாயணம் மாபாரதம் உளவென்று
ஓவாஉரை ஓயும்படி உளதப்பொரு களமே."

கருணாகரன் வெற்றிகண்ட அந்தக் களம்,  தேவாசுரம்=சூரபதுமன் (காவியத்தலைவன் ராஜபார்ட் நியாபகம் இருக்குல ?), ராமாயணம்  மாபாரதம் போர்கள் நடைப்பெற்ற களம் போல இருக்குது.

காளி போர்க்களங்கண்டு வியந்துமொழிந்தது:

"என்னேஒரு செருவெங்களம்
எனவேயதி சயமுற்று
அந்நேரிழை அலகைக்கண
மவைகண்டிட மொழியும்."

(நேரிழை=காளி ; அலகை= பேய் ; கணம்=கூட்டம்).. பாட்டை பிரிச்சு படிச்சு பாத்திங்கனா எளிமையாப் புரியும் ; 
"என்னே ஒரு செரு வெங்களம்
எனவே அதிசயமுற்று
அந்நேரிழை அலகைக்
கணமவை கண்டிட மொழியும்."

பேய்களும் , காளியும் என்ன ஒரு போர்க்களம் , எப்பிடியான போர் இங்க நடந்து இருக்கு அப்பிடின்னு அதிசியப்பட்டு பாத்தார்கள்.

குருதி வெள்ளத்தில் யானை மிதந்து சென்றமை: 

"உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால்
உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லுங்
கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்"

குருதி ஆற்று வெள்ளம் மாதிரி ஓடுது ; அதுல போரில் இறந்து போன யானைகள் மிதந்து கொண்டு வந்தன ;அது எது மாதிரி இருந்துச்சுனா , கடல்ல போற படகுகள் கவிழ்ந்து போய் ஒன்றன் பின் ஒன்றாகப் போவது போல இருந்தது; 

குதிரைகள் அடிபெயர்க்கலாற்றாது நின்றமை:

"நெடுங்குதிரை மிசைக் கலணை சரியப் பாய்ந்து
நிணச்சேற்றிற் கால்குளிப்ப நிரையே நின்று
படுங்குருதிக் கடும்புனலை அடைக்கப் பாய்ந்த
பலகுதிரைத் தறிபோன்ற பரிசு காண்மின்."

குருதி ஆற்று வெள்ளம் மாதிரி ஓடுது ; அதோட இறந்தவர்களின் கொழுப்பு அங்க அங்க குருதில கலந்தது இருக்கு. குதிரைகளாம் அந்த கொழ்ப்பில் கால் வைத்து மாட்டிக் கொண்டு நகர முடியாம நிக்குது ;
அதப் பாத்தா வெள்ளத்திற்கு போட்ட மரத் தடுப்பு மாதிரி இருக்கு ;

வீரர் முகமலர்ந்து கிடந்தமை:

"விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப்
பருந்தினமும் கழுகினமும் தாமே யுண்ணப்
பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின்."

இந்தப் பாட்டை பாருங்க ; செமையா இருக்கு ; இறந்து கிடந்த வீரர்களாம் முக மலர்ச்சியோடு (சிரிச்சுட்டே) செத்துப் போய்இருக்காங்கா. வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தாவோ , இல்ல ஏழை வந்தாவோ எப்பிடி நல்ல படியா சாப்பாடு போட்டு அவங்க சாப்பிடறதப் பாத்து சந்தோச படுவமோ ; அந்த மாதிரி சந்தோசத்தோடு செத்து போயிருக்கன் !!!!

குற்றுயிராய்க் கிடந்த வீரரை நரி சூழ்ந்திருந்தமை:

"சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்
சாருநர்போல் வீரருடல் தரிக்கும் ஆவி
போமளவும் அவரருகே இருந்து விட்டுப்
போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்."

கொஞ்சம் வீரர்கள் சாகாம குற்றுயிராய்க் கிடக்காங்க ; அவங்க எப்ப சாவாங்கனு நரிக் கூட்டம் பக்கத்துலயேசுத்திட்டு இருக்குங்க.

களத்தே வீழ்ந்து கிடக்கும் யானை இயல்பு:

"மாமழைபோல் பொழிகின்ற தானவாரி
மறுத்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானோர்
பூமழைமேல் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு
பொருட்பெண்டிர் போன்றமையும் காண்மின் காண்மின்."

போர் முடிஞ்சுருச்சு ; நல்லா சண்டை போட்டிங்க ; வீர சொர்க்கம் வருகன்னு மேல உள்ள தேவர்கள் எல்லாம் பூத் தூவறாங்க ; உயிரோடு இருக்கும் வரை மத நீர் கொட்ட சண்டை போட்ட யானைகளின் மத நீர் குடிக்க சுத்திட்டு இருந்த வண்டுகள் எல்லாம் யானைகள் இறந்த பிறகு அந்த மத நீரை விட்டு தேவர்க்க தூவும் பூவில் உள்ள தேனைக் குடிக்க செல்வதை பாருங்க !! பாருங்க !! (காண்மின் காண்மின்)

மத நீர். அப்பிடினா என்ன? 
மதநீர் (Musth) என்பது ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்று கூறுவார்கள். இவ்வாறாக மதநீர் வழியும் காலத்தில் யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது.


கணவரைத் தேடிய மனைவியர் செயல்: 

"தங்கணவ ருடன்தாமும் போக வென்றே
சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்
எங்கணவர் கிடந்தவிடம் எங்கே யென்றென்று
இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்."

போர் முடிஞ்சு போசுசுனு தகவல் ஊருக்குள்ள போய்டுச்சு ; மனைவியர் எல்லாம் என்னோட கணவர் இன்னும் வரலையே ; என்ன ஆச்சோனு போர்க்களம் வந்து தேடுறாங்க; சாதகர் = காளியின் மெய்காப்பாளர் ; இடாகினி = பிணம்  தின்னும்  பேய். தன் கணவன் எங்கே என்று சாதகர், இடாகினி இடம் 
கேட்க்கும் மனைவியரைப் பாருங்கள் !! பாருங்கள் !!


கணவனைத் தழுவி உயிர்விட்ட பெண்டிர் இயல்பு: 

"தரைமகள்தன் கொழுநன்றன் உடலந் தன்னைத்
தாங்காமல் தன்னுடலாற் றாங்கி விண்ணாட்
டரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்."

தனது கணவனின் இறந்த உடலை நிலமகள் தாங்க அனுமதிக்காமல், தன் கரத்தால் தாங்கி, உயிர் விட்ட கணவன் உயிரைத் தேவ மகளிர் புணர்வதற்கு முன்பே, தன் உயிரையும் உடனே விடும் மனையாளைக் காண்மின், காண்மின்! 


கணவன் தலை பெற்ற மனைவியின் செயல்:

"பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோளெங்கே எங்கே யென்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்."

போர்க்களத்தில் வீர மரணமுற்றுக் கிடக்கிறான் வீரன். அவனைத் தேடி வருகிறாள் மனையாள். தலை மட்டும் கிடக்கிறது. பைரவி எனும் பெண் தெய்வம் ஒன்று போர்க்களத்தில் இருந்தது. அவளைப் பார்த்து மனைவி கேட்கிறாள்...பொரு தடக்கை (போர்செய்கின்ற  நீண்ட  கை) வாள் எங்கே? அழகிய மார்பு எங்கே? போர் முகத்தில் எவர் வரினும் புறம் கொடாத பருவயிரத் தோள் எங்கே? அதாவது அவனது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது :((

காகங்களின் இயல்பு:

"நெருங்குஆக வச்செங்க ளத்தேத
யங்குந்நி ணப்போர்வை மூடிக்கொளக்
கருங்காகம் வெண்காக மாய்நின்ற
வாமுன்பு காணாத காண்மின்களோ." 

குருதி ஆற்று வெள்ளம் மாதிரி ஓடுது ; அதுல கிடக்கும் வீரர்களின் உடலை காகங்கள் கொத்தி கொத்தி தின்கின்றன ; அப்பிடி பண்ணும் போது வரும் கொழுப்பு அதன் மேல முழுக்க பட்டு வெள்ளை காகமாக மாறி இருக்கிறது :((

வேல் தைத்து நிலத்துவிழா வீரர்நிலை:

"வெயில்தாரை வேல்சூழ வும்தைக்க
மண்மேல் விழாவீரர் வேழம்பர்தங்
கயிற்றா லிழுப்புண்டு சாயாது
நிற்கும் கழாய்ஒத்தல் காண்மின்களோ."

கூரிய வேல் ஒரு வீரனின் உடலில் புகுந்து மறு பக்கம் வந்து நிலத்தில் குத்தி நிற்க , அந்த வீரன் கயிற்றைக் கட்டிக் கொண்டு நிலத்தில் நில்லாமல் இருக்கும் கழைக் கூத்தர் போல நிலத்தில் வீழாமல் நின்றவாறே இறந்துபட்டு இருக்கிறான்.

இதுக்கு மேல வர பாட்டு எல்லாம் இன்னும் ரொம்ப கொடுமையா இருக்கும் ; அதனால இங்க நாம நின்னுருவோம்..கலிங்கத்துப்பரணி - புலியூர் கேசிகன் உரை கிடைச்சா வாங்கி படிங்க ; இத எப்பிடி நீங்க படிக்கனும்னா , காட்ச்சிகளை கற்பனை செய்து கொண்டே படியுங்கள் ; அப்பத்தான் அந்த பீலிங்ஸ் வரும்.

நாளை கடைசி பகுதியைப் பாக்கலாம்.

நன்றி !!

ஆசிப் 


Monday, December 22, 2014

சங்க கால Horror Story - Part I

வணக்கம் !!

நீங்க பாத்ததிலேயே ரொம்ப பயங்கரமான பேய் படம் எது ? இல்ல, படித்ததிலேயே ரொம்ப ரொம்ப பயந்து போன திகில் கதை எது ? உங்க நினைவுக்கு எதுனா வந்துச்சுனா அத அப்பிடியே தூக்கி போட்டுருங்க ; கலிங்கத்துப்பரணினு ஒண்ணு கேள்விப்பட்டதுண்டா ?? அட தெரியுமே ; எதோ ஒரு கலிங்க நாட்டு ராசாவ நம்ம குலோத்துங்கச் சோழன் படையெடுத்துச் சென்று வென்றதைப் பத்தி பாடினது ; எனக்குத்தான் தெரியுமே ; அப்பிடினா நான் முதல கேட்ட கேள்விக்கு அதுதான் சரியான பதில் ; எனக்கு தெரிந்து அப்பிடி ஒரு கொடூரமான , பயங்கரமான வர்ணனைகள் நிறைந்த கதையே கிடையாது ; (அப்பிடி எதுனா இருந்தா படிச்சவங்க சொல்லுங்க please) ; என்னடா எது நான் பத்தாவது படிக்கும் போது இது இருந்துச்சே ஆனா அப்பிடி ஒண்ணும் பயந்த மாதிரி இல்லையே ??? இப்ப கொஞ்சமா பாக்கலாம் ; எனக்கும் night ரொம்ப late ஆகிடுச்சு..பயமா இருக்கு  :)

first things first ; பரணி = போரில் ஆயிரம் யானைகளைக் கொண்ட எதிரியை வீழ்த்திய மன்னனை வாழ்த்துப் பாடுவது. (ஆயிரம் யானைகளைக் கொன்றவன் இல்லை ; ஒருத்தனே ஆயிரம் யானைகளைலாம் கொல்ல முடியாது ). அதே மாதிரி தோத்துப் போன மன்னனின் பேரில்தான் பேர் வைக்கணும் ; So கலிங்கத்து பரணினா , கலிங்க நாட்டு மன்னன் இங்க தோத்துப் போய்டானு அர்த்தம் ; பாடினது ஜெயங்கொண்டார் ; போரில் வென்றது (முதலாம்) குலோத்துங்கச் சோழன் ; அவனோட படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் ; அவர்தான் படை எடுத்துட்டு போனது (சோழன் இல்ல). இவங்களத் தவிர இன்னும் கொஞ்சம் முக்கியப் பாத்திரங்கள் இருக்காங்க ; 1. காளி தேவி 2. பேய்கள் (நிறைய) 3. கூளி (கலிங்க நாட்டு பேய்) ;
இந்தக் கதைல  இத்தன part இருக்கு

கடை திறப்பு   == கடைசில சொல்லுறேன் ;

காடு பாடியது  == காளி தேவியின் இடமாகிய பாலை நிலத்தைச் சார்ந்த காட்டின் இயல்பைப் பற்றியது
ஒரு sample:

தீயின் வாயின் நீர் பெறினும் உண்பதோர்
சிந்தை கூர, வாய் வெந்து உலர்ந்து செந்
நாயின் வாயின் நீர் தன்னை, நீர் எனா
நக்கி நாவினால் நக்கி விக்குமே

மான், செந் நாய் (wolf like); காட்டுல ரொம்ப பயங்கரமான வெப்பம் ; தீயின் வாயில் இருந்து நீர் இருந்தாக்கூட குடிச்சுரனும்னு நினைக்குது மான். அவ்வளவு கொடுந் தாகம். அந்நிலையில், வாய் வெப்பத்தினால் வெந்து, உலர்ந்த செந்நாயின் வாயில் இருந்து வடியும் எச்சிலை, நீர் என எண்ணி, மான் நாக்கினால் நக்கி பாக்கும்.


கோயில் பாடியது  == காளி தேவியின் கோவில் பற்றியது ;
ஒரு sample :

கொள்ளி வாய்ப் பேய் காக்கும்
கோபுரமும் நெடுமதிலும்
வெள்ளியால் சமைத்த தென்
வெள்ளெலும்பினால் சமைத்தே!

புரியுதா ? கோவிலோட காவல் தெய்வம் = கொள்ளி வாய்ப் பேய். கோபுரமும், பெரிய சுவரும் வெள்ளியால் செஞ்ச மாதிரிஇருக்கு. ஆனா அது போரில் இறந்தவர்களின் எலும்புல செஞ்சது



தேவியைப் பாடியது == காளி தேவியின் சிறப்புகள், ஆற்றல், அணிகள் பற்றிய பாடல்கள்

பேய்களைப் பாடியது == பேய்களின் உருவம், ஆற்றொணாப் பசி, பேய்களின் வகைகள் (நொண்டிப் பேய், கை ஒடிந்த பேய், குருட்டுப் பேய், ஊமைப் பேய், செவிட்டுப் பேய், கூன்பேய் ) பற்றிய பாடல்கள்

இந்திரசாலம் == இதில் காளி வழிபாடு, பேய்கள் காளிக்குச் செய்யும் சேவைகள் விவரிக்கப்படுகின்றன.

இராசபாரம்பரியம் == இதில் சோழர்களின் குலவரலாறு பாடப் படுகிறது

பேய் முறைப்பாடு == காளியிடம் பேய்கள், பசியில் வாடும் எங்களை யார் காப்பார் என முறையிடுதல், சங்கடம் உரைத்தல். எங்கள் பசி போக்கிக் கொலை இறங்க வேண்டும் என இரத்தல். (கொஞ்சம் ஓவர்தான் இல்ல ?)



அவதாரம் == All About குலோத்துங்கச் சோழன் ; கண்ணனே குலோத்துங்கனாய் பிறந்தான் என விவரிப்பது

காளிக்குக்கூளி கூறியது == கலிங்க நாட்டில் இருந்து வந்த கூளிப்பேய், போரின் கொடுமையைக் காளி தேவிக்குக் கூறுவதான பாடல்கள்

போர் பாடியது == யானைப் படை, குதிரைப் படை, விற்போர், இரத்த ஆறு, யானைப் போர், என்பன குறித்தது.

களம் பாடியது. == காளி தேவி போர்க்களத்தைப் பார்வை இடுதல்.

கூழ் அடுதல் == பேய்கள் காளிக்கு கூழிட்டுப் படைத்து வழிபடுதல்.

நமக்கு இப்ப last 3 பகுதிதான் வேணும் ; கொஞ்சமா sample பாக்கலாம் ;


போர் பாடியது: 



இருபடைகளும் கைகலந்தமை:

"எறிகட லொடுகடல் கிடைத்தபோல்
இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல்
வருபரி யொடுபரி மலைக்கவே."

இரு நாட்டுப் படைகளும் கடலும் கடலும் மோதுவது போலவும் , இரு நாட்டு குதிரைப் படைகளும் அலையோடு , அலை மோதுவது போல மோதிக் கொள்கின்றன ; (மலைக்கவே = போர் செய்தல் )

"கனவரை யொடுவரை முனைத்தபோல்
கடகரி யொடுகரி முனைக்கவே
இனமுகில் முகிலொடு மெதிர்த்தபோல்
இரதமொ டிரதமும் எதிர்க்கவே."

யானையும் , யானையும் இரண்டு மலைகள் மோதுவது போல மோதிக் கொள்கின்றன ; தேரோடு , தேர் மேகங்கள் முட்டிக் கொள்ளவது (இடி இடிப்பது போல) மோதிக் கொள்கின்றன ;

"பொருபுலி புலியொடு சிலைத்தபோல்
பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினொ டரியினம் அடர்ப்பபோல்
அரசரும் அரசரும் அடர்க்கவே."

யானைப் படை , குதிரைப் படை , தேர்ப் படை சொல்லியாச்சு ; கடைசில தரைப் படை ; போர் வீரர்கள் புலியோடு புலி மோதுவது போல சண்டை இடுகின்றனர் ; அரசரோடு அரசர் சிங்கம் போல சண்டை இடுகின்றனர் ;

மலைத்த, முனைத்த, எதிர்த்த, சிலைத்த, அடர்ப்ப ==> சண்டை / போர் புரிதல் ; ஒரு பொருள் ; எத்தனை விதமான சொற்கள்; சூப்பர்ல :))

"விளைகனல் விழிகளின் முளைக்கவே
மினலொளி கனலிடை எறிக்கவே
வளைசிலை யுருமென இடிக்கவே
வடிகணை நெடுமழை படைக்கவே."

வீர்களின் கண்ணில் கோபத்தீ மின்னல் மாதிரி மின்னுது ; அதே கோவத்தோட வில்லை வளைத்து அம்பு விடுறான் ;எப்பிடி இடி இடிச்சு மழை பேயிற மாதிரி அம்பு மழை பொழியுறான் ;

"குருதியின் நதிவெளி பரக்கவே
குடையினம் நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுடல் அடுக்கியே
கரைஎன இருபுடை கிடக்கவே."

இவ்வளவு நேரம் சண்டை போட்டு ரத்தம் பாக்காம இருந்தா எப்பிடி ? கலிங்கப் போரில் குருதி ஆறுபோல் வெளி பரந்து பாய்ந்தது. பகையரசர்களின் குடைகள் வெண்மையான நுரைகள் போல் மிதந்தன. வெட்டுப்பட்ட யானைகளின் உடல்கள், குருதியாற்றின் கரைகள் போலக் கிடந்தன.

try to imagine these scenes ....

"மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை
எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே
நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி
தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே."

நீங்களே மெதுவா படிங்க புரியும் ;
மருப்பு = யானைத்தந்தம் ; பொருப்பு=மலை ; கரி= யானை. கொடி = கொடிச்சீலைகள் ; தழல்-தீ ; கதுவ= பற்றிக்கொள்ள

குருதி தோய்ந்த தந்தங்களை உடைய மலை போன்ற யானைகள் தந்தத்தோடு தந்தம் மோதிக் கொள்ளுவதால் ஏற்படும் தீப் பொறி பட்டு கொடிச்சீலைகள் எரிந்தன..

"இடத்திடை வலத்திடை இருத்திய
துணைக்கரம் நிகர்த்தன அடுத்த கரியின்
கடத்தெழு மதத்திடை மடுத்தன
சிறப்பொடு கறுத்தன அவற்றின் எயிறே."

அந்த யானைகள் எப்பிடி இருந்துச்சுனா ரெண்டு தந்தமும் மத நீர் வடிந்து வடிந்து கருப்பாக ரெண்டு கை மாதிரி இருந்துச்சாம்.


சரி ; யானை சண்டை போதும் ; குதிரைக்கு வருவோம் ..

"முடுகிய பவனப தத்திலு கக்கடை
முடிவினில் உலகமு ணச்சுடர் விட்டெழு
கடுகிய வடஅன லத்தினை வைத்தது
களமுறு துரகக ணத்தின்மு கத்திலே."

இதுல எங்கடா குதிரை வருதுன்னு கேக்குறிங்களா ? துரகம்= குதிரை ; கணம் = கூட்டம் துரகக ணத்தின் = குதிரைக் கூட்டம் ; காற்றைப் போல் வேகமாய் பாயும் குதிரைகளின் கண்ணில் கனலை வைத்து கட்டியது போல் இருந்தன ;

குதிரைவீரர் யானைப்படையை அழித்தமை:

"சயமகள் களபமு லைக்கணி யத்தகு
தனிவடம் இவையென மத்தக முத்தினை
அயம்எதிர் கடவிம தக்கரி வெட்டினர்
அலைபடை திரைகள்க ளத்துநி ரைக்கவே."

வெற்றி தேவி மார்பில் அணிந்துருக்கும் முத்து மாலையைப் போல,  குதிரையை வேகமாகச் செலுத்தி யானையின் மத்தகத்தினை வெட்டி வரிசையாக போட்டனர். அந்த வரிசையைப் பாக்கும் போது முத்து மாலை மாதிரி இருந்துச்சு.

போர்க்களம் தீயில் மூழ்கியது:

"அலைபடை நிரைகணி ரைத்தசெ ருக்களம்
அழல்புரி களமென ஒப்பில விற்படை
தலைபொர எரியநெ ருப்பினின் மற்றது
தழல்படு கழைவனம் ஒக்கினு மொக்குமே."

அம்பு எய்து எதிரியின் தலையை கொய்ய , அப்ப வந்த நெருப்பால் தலைகள் எரிய , போர்களமே பத்தி எரியுது, அது தீப்பற்றிய மூங்கிற்காடு மாதிரி இருந்துச்சு.

விற்போர்:

"அடுசிலை பகழிதொ டுத்துவி டப்புகும்
அளவினில் அயமெதிர் விட்டவர் வெட்டின
உடல்சில இருதுணி பட்டன பட்டபின்
ஒருதுணி கருதுமி லக்கைய ழிக்குமே."

வில் வீரன் ஒருவன் அம்பை விடுகிறான் எதிரியை நோக்கி ; அதற்குள் இன்னொரு எதிரி அவன் அவன் கையை வெட்டி விடுகிறான். ஆனாலும் அவன் அம்பு யாரை நோக்கி விட்டானோ அவனை குறி தவறாது வீழ்த்தி விடுகிறது.

"ஒருதுணி கருதுமி லக்கைய ழித்தன
உருவிய பிறைமுக அப்பக ழித்தலை
அரிதரி திதுவுமெ னப்பரி யுய்ப்பவர்
அடியொடு முடிகள் துணித்துவி ழுத்துமே."

இவன் அம்பு விடுகிரான் ; அதற்க்குள் ஒரு குதிரை வீரன் இவனை வெட்டி விடுகிறான் ; ஆனாலும் அந்த குதிரை வீரனின் கால்களையும்  தலைகளையும் வெட்டி விடுகிறது இவன் எய்த பிறை போன்ற அம்பு.

இப்பிடியே போய்டே இருக்கு இந்த சண்டை ; அது தீவிரமாகும்போது கவிதையின் சந்தமும் மாறுது...பாட்டு மாதிரி பாடிப் பாருங்க .. பொருள் புரியலனா commentல சொல்லுங்கோ .. சொல்லுறேன் ...

"இட்ட வட்டணங்கள் மேல் 
எறிந்த வேல் திறந்த வாய் 
வட்டம் இட்ட நீள் மதிற்கு 
வைத்த பூழை ஒக்குமே! 

கலக்கம் அற்ற வீரர் வாள் 
கலந்த சூரர் கைத்தலத்து 
உலக்கை உச்சி தைத்த போது 
உழும் கலப்பை ஒக்குமே!

மத்த யானையின் கரம் 
சுருண்டு வீழ, வன்சரம் 
தைத்த போழ்தின், அக்கரங்கள் 
சக்கரங்கள் ஒக்குமே! 

வெங்களிற்றின் மத்தகத்தின் 
வீழும் முது, வீரமா 
மன்கயர்க்கு மங்கலப் 
பொறி சொரிந்தது ஒக்குமே! "


கடைசில கலிங்க மன்னன் ஈடு கொடுக்க முடியாம ஓடி ஒளிஞ்சுக்குறான்.. அவன் வீரர்கள் மாறு வேடம் அணிந்து கொண்டு ஒளிஞ்சுகுறாங்க.. நம்ம hero கருணாகரன் அத்தனை பேரையும் வென்று கலிங்க மன்னன் அனந்த வர்மனை கொன்று நாடு திரும்புகிறான் !!!

நாளைக்கு நெக்ஸ்ட் பார்ட் "களம் பாடியது" பாக்கலாம் !!

நன்றி.
ஆசிப்