Wednesday, July 15, 2015

பாகுபலியும் சங்க கால அரசர்களின் போர் முறையும்

பாகுபலியும் சங்க கால அரசர்களின் போர் முறையும் 

பாகுபலி பார்த்தாயிற்று (இரண்டு முறை). இணையப் பெருவெளி எங்கும் அதனைப் பற்றிய மதிப்பீடும், ஒப்பீடல்களும் நிறைந்துள்ளன. எனவே நான் சங்கர்/ராஜமௌலி பற்றியோ, படத்தின் காட்சியாக்கம் பற்றியோ இங்கே எழுதபோவதில்லை. இது திரை விமர்சனமும் இல்லை. என்னுடைய கேள்வி எல்லாம் அப்படத்தில் வரும் அந்த மிகப் பெரும் போர்க்காட்சி பற்றி மட்டுமே. நம் சங்க கால அரசர்கள் அவ்வாறுதான் போர் புரிந்தனரா ? போர் சொல்லும்முன் மந்திரம் ஓதி  பலி கொடுக்கப்பட்டதா ?

எந்த கேள்வி வந்தாலும் நம் தொல்காப்பியம் அதற்கு விடையளிக்கும். உலகம் கண்ட இலக்கணங்களிலே மக்கள் வாழ்விற்கு இலக்கணம் கண்ட ஒரே நூல் தொல்காப்பியம் மட்டுமே. தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் அதைத்தான் சொல்லுகிறது. பொருளதிகாரத்தின் இரண்டாம் இயலான "புறத்திணையியல்" நம்முடைய வினாக்களுக்கு விடைதரும். அகத்திணையியல் மக்களின் அக வாழ்வைப் பற்றிக் கூறுகிறது. அதே போல இந்தப் பகுதி பேசுவது புறவாழ்வான வீரம் மற்றும் கொடை பற்றி. ஒவ்வொரு அகத்திணைக்கும் பொருத்தமான புறத்தினையைக் கூறுகிறார் இங்கே.

வெட்சிதானே குறிஞ்சியது புறனே;
வஞ்சிதானே முல்லையது புறனே;
உழிஞைதானே மருதத்துப் புறனே;
தும்பைதானே நெய்தலது புறனே;
வாகைதானே பாலையது புறனே;
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே;
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே;

வெட்சி=அடுத்த நாட்டு அரசனின் எல்லைக்குள் புகுந்து அவனது ஆநிரைகளைக் கவர்ந்து வருதல். சும்மா எப்பிடி சண்டைக்கு வருவான்? எதுனா பண்ணி தூண்டி விடுறதுதான் இது.

வஞ்சி= கால்நடைகளைத் தூக்கிச் சென்றால் சும்மா இருப்பானா அரசன். தன் படைகளை அனுப்பி அந்த ஆநிரைகளை மீட்டு வரச் செய்தல். கார்கிலில் நுழைந்த பாகிஸ்தானை விரட்டிவிட்டு கொஞ்சம் POK நிலத்தை பிடித்தது போல இங்கும் நடக்கும். எனவே ஆநிரை மீட்டல் + நிலம் பிடித்தல் என இரண்டும் நடக்கும்.

உழிஞை=பெரும் படையுடன் சென்று எதிரி அரசனின் நாட்டை முற்றுகை இடலும், அதனை முறியடித்தாலும்.

தும்பை= இரு அரசர்களும் எதிர் எதிரே நின்று போர் செய்வது.

வாகை= போரிட்ட இருவருள் ஒருவர் வெற்றி வாகை சூடுவது.

காஞ்சி= செல்வம்,யாக்கை,இளமை  போன்ற நிலையாமையைப்  பாடுவது
பாடாண்=வீரம், கொடை, வள்ளல் தன்மை ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது

ஆக, வெட்சி முதல் வாகை உள்ள திணைகள் மட்டுமே நமக்குத் தேவை.

வெட்சி:

வெட்சி என்றால் ஆநிரை கவர்வது என்று சொல்லியாச்சு. வெட்சிதானே குறிஞ்சியது புறனே எனவும் சொல்லியாச்சு. ஏன் ? குறிஞ்சி மலையும், மலை சார்ந்த பகுதி. அங்குதான் கால்நடைகள் மிகுந்து காணப்படும். அடுத்த நாட்டு அரசனின் குறிஞ்சிப் பகுதிக்குள் சென்று ஆநிரை கவர்ந்து தனது குறிஞ்சிப் பகுதிக்குள் வைத்து பாதுகாப்பதால் இது குறிஞ்சிக்குப் புறனாகச் சொல்லப்பட்டது. சரி? ஏன் ஆநிரை கவர வேண்டும்?

ஆநிரைகள் அக்காலச் செல்வ இருப்பு. அதனால்தான் மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருள் எழுந்தது. பெற்றம் (கால்நடைக்கூட்டம்) என்ற சொல் செல்வத்தைப் பெறுதல் என்ற சொல்லின் அடிப்படையாக அமைந்தது. எனவே ஆநிரைகவர்தல் என்பது இன்னொருவனுடைய செல்வத்தைத் திருடும் செயலே ஆகும். பசுக்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கைவிட, எதிரியின் பசுக்கூட்டமாகிய செல்வத்தைக் கொள்ளையடித்தலே ஆநிரை கவர்தலின் நோக்கமாக இருந்தது. இது எதிரி அரசனுக்கு இந்த அரசன் படையெடுப்பதைக் குறிக்கும் சூசகமாகவும் அமைந்திருக்கலாம். ஆனால் அரசனுக்காக அன்றி, தனிமனித நிலையிலும் ஆநிரை கவர்தல் (கால்நடைத் திருட்டு) நடைபெற்றதைப் பிற்கால நூல்கள் காட்டுகின்றன.

களவு மேற்கொள்ளுதல் (ஆநிரை கவர்தல்) வெட்சி என்றால் அதற்கான அற அடிப்படை என்ன? அரசன் படையெடுக்கப்போகிறான், அதனால் அதற்கு முன் னோடியாக ஆநிரைகளை இன்னொரு நாட்டிற்குள் புகுந்து திருடுகிறான் என்பது அறவொழுக்கத்தின் பாற்பட்டதாகுமா?


தொல்காப்பியமோ சங்க இலக்கியங்களோ போர்ச்சம்பவங்களுக்கு அடிப்ப டையான விதிகளையும் கூறியிருக்கலாம். சான்றாக, வெட்சித்திணை என்பது வேற்றுப்புல அரசனின் ஆநிரை கவர்தல் பற்றியது என்பது புலனாகிறதே அன்றி, எந்தச் சந்தர்ப்பத்தில் அதை மேற்கொள்ளவேண்டும், எந்த விதிகளைப் பின்பற்றி வெட்சிப்படைகள் செல்ல வேண்டும், ஆநிரை மேய்ப்பவர்களை அவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் விதிகள் இல்லை. சேர சோழ பாண்டிய அரசுகள் தோன்றுவதற்குமுன்பு, அக்கால அரசுகள் சிற்றரசுகள் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு சிற்றரசின் சுற்றளவு நூறுமைல் வரை இருக்கலாம். குறுக்கு நெடுக்காக 20-25 மைல்கள் இருக்கலாம். சில நூறு கிராமங்கள் அப்பகுதியில் இருக்கக்கூடும். அவ்வாறாயின் ஆநிரை கவர வருபவர்கள் எல்லையிலே கண்ணில் படும் ஆநிரைகளைக் கவர்வார்களா, அல்லது அரசனைத் தேடிச்சென்று அவனுக்குரிய ஆநிரைகளைக் கவர்வார்களா என்பதும் தெரியவில்லை.

அதே போல் இது ஒன்றும் நினைத்தும் நடைபெறுவது இல்லை. "எதைச் செய்தாலும் பிளான் பண்ணிப் பண்ணனும்" என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. வெட்சித் திணை என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாலும் அதிலுள்ள செயல்பாடுகள் நிறைய. ஒரு அரசன் ஆநிரை கவர நினைத்து விட்டால் இவையனைத்தும் நடைபெற வேண்டும்.

படை இயங்கு அரவம், பாக்கத்து விரிச்சி,
புடை கெடப் போகிய செலவே, புடை கெட
ஒற்றின் ஆகிய வேயே, வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்து இறை, முற்றிய
ஊர் கொலை, ஆ கோள், பூசல் மாற்றே,
நோய் இன்று உய்த்தல், நுவல்வழித் தோற்றம்,
தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, என
வந்த ஈர்-ஏழ் வகையிற்று ஆகும்

படை இயங்கு அரவம்= போய் ஆநிரைகளைக் கவர்ந்து வருக என அரசன் படை வீரர்கள் ஒன்று சேர்ந்து உற்சாகமாய் எழுப்பும் ஒலி. (ஸ்பார்டன்ஸ் நீங்க யாரு???)

பாக்கத்து விரிச்சி = குறி கேட்டல். 300 படத்தில் ஸ்பார்டன் நாட்டு மன்னனே ஆனாலும் குறிக் கேட்கச் செல்லுவான், அதே போல வெற்றிக்கான அறிகுறிகள் தெரிகிறதா என குறி கேட்டல்.

புடை கெடப் போகிய செலவே = ஒரு நாட்டிற்க்குள் நுழைவது என்பது எளிது அல்லவே. அந்நாட்டு வீரர்கள் இருப்பர், ஒற்றர்கள் இருப்பர். அந்த நாட்டு ஒற்றர்களின் கண்ணில் படாமல் ஒருவனை உளவு பார்க்க அனுப்புவது.

புடை கெட ஒற்றின் ஆகிய வேயே = அவ்வாறு சென்ற ஒற்றன் யார் கண்ணிலும்/கையிலும் சிக்காமல் திரும்பி வந்து செய்திகளைக் கொடுப்பது. (மகிழ்மதியின் போர் ரகசியங்களை காளகேயனுக்குக் கொடுப்பது போல)

வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்து இறை = உளவாளி செய்தி கொண்டுவந்து கொடுத்துவிட்டான். அதைப் பயன்படுத்தி அந்த ஊரை சுற்றி முற்றுகை இடல்.

முற்றிய ஊர் கொலை = போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல்.

ஆ கோள் = ஊரின் பசுக்கூட்டத்தை கவர்தல்

பூசல் மாற்றே = கொஞ்சம் தாமதமாக விடயம் அறிந்து பாதுகாப்பிற்கு வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல்.

நோய் இன்று உய்த்தல்= கவர்ந்த பசுக்கூட்டங்களை அவை நோகாதவாறு ஓட்டி வருதல். கவர்தலின் மூலம் போருக்கான செய்தி மட்டுமே சொல்லப்படுகிறது. கவரப்பட்ட ஆநிரைகளுக்கு எவ்வித அபாயமும் இல்லை.

நுவல்வழித் தோற்றம் = போருக்குச் சென்றவர் திரும்புவரோ எனத் தம் சுற்றத்தார் கவலையுடன் நிற்கும் இடத்துக்கு (பொதுவாய் ஊரின் வெளிப்பக்கம்) வந்து சேருதல்.

தந்து நிறை = கவர்ந்து வந்த ஆ நிரைகளை தம் ஊரில் கொண்டுவந்து நிறுத்துதல். (ஏய் பார்த்தேல, யாரு நாங்க?)

பாதீடு = வீரர்கள் அப்பசுக்களை தம்முள் பகிர்ந்து கொளல்

 உண்டாட்டு = வெற்றி களிப்பில் கள் உண்டு ஆடுதல்.

கொடை= தாம்பெற்ற பசுக்களை பிறருக்கும் கொடையளித்து மகிழ்தல்.

பக்கத்து ஊர்க்குச் சென்று மாடுகளை பிடித்து வருவதற்கு இத்தனை நடைமுறைகள் இருந்தன. இதுதான் போருக்கான ஆரம்பம்.

வெட்சித்திணையில் வரும் ஒரு புறநானூறு பாடலைப் பார்த்தால் தொல்காப்பியம் கூறுவது பொருந்தி வருவது தெரியும்.

பாடல் : 262. பாடியவர் : மதுரை பேராலவாயார் ; திணை : வெட்சி

நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையொடு வரூஉ மென்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

போராற்றி வரும் வெட்சித் தலைவனுக்கும் அவன் வீர்ரகளுக்கும் உண்டாட்டடுச் செய்யுங்கள் என வரும் பாடல் இது.

பகைவர் தூசிப்படையை முறியடித்து முன்னேறும் தன் படைக்குப் பின்னே, அவர் நிறையினைக் கவர்ந்து வருகிறான் என் தலைவன். நிரை கொண்டு வருவதால் அவனினும் அவன் படைமறவர் மிகவும் களைத்திருக்கின்றனர். அவர் களைப்பினைப் போக்க மதுவைப் பிழியுங்கள், ஆட்டுக் கடாக்களை வெட்டுங்கள் ; தழை வேய்ந்த பூங்காற் பந்தலின் கீழ் அவர் இருந்து உண்டு மகிழ, நீரோடு வந்து கிடக்கும் இளமணலை நிறையப் பரப்புங்கள்.

என்னடா இது, தொல்காப்பியர் தண்ணி அடிக்கச் சொல்லுகிறார், அசைவம் உண்ணச் சொல்ல்கிறார், ரொம்பத் தப்பான ஆளா ? அப்பிடிலாம் இல்லைங்க. அவர் காலத்தில் கள் உண்ணுதல் பழக்கமாய் இருந்தது. அதற்குப் பின் கொஞ்சம் அதிகமாய் போனதால திருவள்ளுவர் காலத்தில் அவர் கள் உண்ணாமைனு  ஒரு அதிகாரம் வைத்தார். புலால் மறுப்பு எழுதினார். அவரவர் காலத்தில் எது நடைமுறைக்குத் தேவையோ அதை வலியுறுத்தினர்.





இன்னும் நான்கு திணைகள் மீதம் உள்ளன. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.



நன்றி,
ஆசிப்.







Monday, June 15, 2015

என்னவளே..அடி என்னவளே

என்னவளே..அடி என்னவளே...

இன்றோடு எங்கள் திருமண வாழ்வின் ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டு தொடங்குகிறது. திரும்பிப் பார்த்தால் எங்கே/எப்படிப் போனது என்ற கேள்விதான் வருகிறது. 2008 மார்ச்சில் பார்த்து, ஏப்ரலில் நிச்சயிக்கப்பட்டு, ஜூன் 15 அன்று கோவையில் நடந்தது எங்கள் திருமணம். அன்று முதல் இன்று வரை சிறிய/பெரிய பகிர்வுகள், மகிழ்ச்சியான பல நிகழ்வுகள், அனீக் & அயான், ஊர் சுற்றல்கள், கோபம் கொப்பளிக்கும் பல சண்டைகள் மற்றும் அதன் பிறகான குரலை மௌனித்துக் கொண்டு செய்யும் சமாதான முயற்சிகள் எனச்  சொல்லிக்கொண்டே போகலாம்.


இங்க இதை நான் சொல்லியே ஆகனும் (ஆமா, சூரியாவேதான் )..
எங்கள் இருவர்க்கும் ஒத்த ரசனைகள் என்பதெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறன். ஆனாலும் மகிழ்ச்சியாய் போய்க் கொண்டிருக்கிறது வாழ்கை..

நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன், எதுக்கு புக் வாங்கி இடத்தை அடைக்கிற -> இது அவள். (திருமணத்திற்கு முன் நான் கொடுத்த Message In a Bottle  இன்னும் படிக்கவில்லையெனக் கேள்வி ), நான் மெலடி , அவள் டங்கா மாரி ; எனக்கு ஹோட்டல் சென்று வித விதமாய் சாப்பிடப் பிடிக்கும் அவள் -> I only eat Indian food ; எனக்கு தமிழ் சினிமா, அவளுக்கு ஹிந்தி சினிமா ;எதுவும் perfect-ஆக இருக்க வேண்டும் அவளுக்கு, எனக்கு எங்கயாவது இருந்தால் சரி (கொஞ்சம் சோம்பேறி நான்) ; கிடைக்கும் நேரத்தில் தூங்கலாமா நான்? அப்போ வேற பண்ணலாம் அவள் ; சிறிய பயணமோ, இந்தியா பயணமோ ஒரு மாதத் திட்டமிடல், ஷாப்பிங், packing  என checklist போட்டு மிகச் சரியாய் செய்பவள் அவள். நான்லாம் ஆபீஸ் போயிட்டு ஹி..ஹி மொபைல வீட்டுல வைச்சுட்டேன் என்பேன், டிபன் பாக்சை ஆபீஸிலோ/ ட்ரைனிலோ விட்டு விட்டு வந்து வாங்கிக் கட்டிக் கொள்வேன் ; ஓவ்வொரு முறையும் வெளியூர் பயணத்தின் போது ஹோட்டல் அறைக்கு தலைவலியுடன் திரும்பி வரும் போது, எனக்குத் தெரியும் அதுதான் மாத்திரை எடுத்து வைத்தேன் உன்னோட பெட்டில என்பாள். சிறிய பிரச்சனை - சளி பிடித்துக் கொண்டு விக்ஸ் தேடிக்கொண்டு இருப்பேன் இந்தியாவில் இருந்து அந்த செல்பில் கிரே டப்பாவில் இருக்கு எடுத்துக்கோ என்று கேசுவலாகச் சொல்வாள். அப்பிடி ஒரு பெர்பெக்ட்..பசங்க விசயத்தில் ரொம்பக் காறார் , நான் நிறைய செல்லம் கொடுப்பேன். உன்னால்தான் பசங்க கேட்டுப் போறாங்க என்பது எனக்கு அடிக்கொருமுறை கிடைக்கும் பாராட்டு.

அனீக்கின் படிப்பு, குமான், நீச்சல் இன்னபிற முயற்சிகளுக்கும்/வெற்றிக்கும் நிச்சயம் ஷபனாதான் காரணம்.  வாரநாட்களில் பசங்களைத் தயார் செய்து பள்ளியில் விட்டு என்னை மெட்ரோ ஸ்டேஷனில் விட்டு மாலை வகுப்புக்கு அழைத்துச் சென்று, என பல நூறு வேலைகளைச்  செய்தாலும் வாக்கிங், ஜிம் என ஆரோயோக்கியசாமியாக இருப்பாள் (நான் நாள் முழுவதும் உட்கார்ந்துவிட்டு ரொம்ப tired என அலுத்துக் கொள்வேன்.). வார இறுதியில் பாஸ்கெட்பால் விளையாடக் கூட்டிப் போவது மட்டுமே எனக்கு ஒதுக்கப்பட்டது.

பல்வேறு ஆசைகள், கனவுகள் உண்டு அவளுக்கு..ஆனாலும் அது வேண்டும், இதை வாங்கு என்றேல்லாம்  கேட்பது இல்லை..ஆசையாய் ஏதேனும் வாங்குவாள், இரண்டு நாள் போனதும், இல்லை எனக்கு வேண்டாம் எனத் திருப்பிக்கொடுத்து விடுவாள். சரியான பட்ஜெட் பத்மாவதி :)). பசங்க விசயத்தில் மட்டும் சமரசம் கிடையாது.

ஆபீசிலிருந்து பேசும் போது ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க என்ற கேள்விக்கு,  அங்க இருந்து என் முகம் உனக்கு எப்பிடித் தெரியும் எனக் கேட்டால் அதுதான் உன் குரலே சொல்லுதே என பதில் வரும். ஏதேனும் யோசித்துக் கொண்டிருத்தால் என்ன யோசிச்சிட்டே இருக்க? எதுனா பிரச்னையா ? என்ன ஹெல்ப் வேணும் ? என வரிசையாக் கேள்வி வரும். எப்பிடித்தான் கண்டுபிடித்து விடுகிறார்களோ !!

தி.மு பல்வேறு கனவுகளுடன் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது கொண்டு இருந்தவளை இங்கே கூட்டி வந்து கூட்டுக்குள் அடைத்து விட்டேனோ என அடிக்கடி நினைப்பதுண்டு. அவள் அது பற்றிலாம் கவலை இல்லாமல் தனக்கென்று நண்பர் குழு அமைத்துக் கொண்டு சுகந்திராமய் இருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே  சொல்லுவாள். Surely she is an independent..நான்தான் ரொம்ப dependent.. அவளின்றி ஒரு வேலையும் ஓடாது என்றே நினைக்கிறேன். வாழ்க்கையின் இறுதியில் நான் அவளுக்கு முன்னே போய் விடவேண்டும் என்ற சுயநலச் சிந்தனையும் உண்டு.

இன்னும் ஒரு பத்து வருடம் கழித்து  இந்தப் பதிவைப் பார்க்கும் போதாவது நான் கொஞ்சம் மாறி இன்னும் equal partner ஆகவேண்டும் என்பதே என் ஆசை. அவள் கெட்டிக்காரி, சரியான திசையில்தான் போய்க்கொண்டு இருக்கிறாள். நாங்கள் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்போம் வரும் காலங்களில்...

அன்புடன்,
ஆசிப்.

Wednesday, June 3, 2015

ஒர் பாடலும் 99 பூக்களும்

                        ஒர் பாடலும் 99 பூக்களும்

சங்க இலக்கியம் என்றாலே பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும்தான். எட்டுத் தொகை என்பது தொகை நூல் (அ) தொகுக்கப்பட்ட நூல். பத்துப் பாட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பாடப்பட்டது. அது ஆற்றுப்படையோ, மதுரைக் காஞ்சியோ, இல்லை பட்டினப் பாலையோ. ஆனால் இந்தக் குறிஞ்சிப் பாட்டு மட்டும் தமிழ் மொழியின் சிறப்பைக் காட்டுவதற்காகப் பாடப்பட்டது. குறிஞ்சிப் பாட்டுன்னு தலைப்பிலேயே இருப்பது போல இது குறிஞ்சித் திணையில் பாடப்பட்டது. குறிஞ்சித் திணை என்றால் தலைவன், தலைவி கூடி காதல் இன்பம் கொள்வது. இதைப் பாடியவர் "குறிஞ்சிக்கோர் கபிலர்" என்ற சிறப்பு பெயருடைய கபிலர்.

ஏன் பாடினார் என்றால், பிரகத்தன் என்னும் ஒரு ஆரிய மன்னன். சங்கத் தமிழ் வாழ்வியல் பற்றி அவனுக்கு ஏதும் தெரியாமல் தமிழர் வாழ்வில் நிகழும் களவு ஒழுக்கம் இலக்கணம் கூறியவாறு பின்பற்றப்படுவதில்லை. பெயர்தான் களவு ஒழுக்கம் ஆனால் அது வெறும் திருட்டு வாழ்க்கை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான். அவனின் எண்ணத்தை மாற்றவும், தமிழரின் களவு வாழ்க்கை கற்பில்தான் (திருமண வாழ்க்கை) முடியும் எனக் காட்டவும் கபிலர் பாடியதே குறிஞ்சிப் பாட்டு.


"பூவெல்லாம் கேட்டுப் பார்" படத்தில் சூரியா ஜோதிகாவிடம் நூறு வகையான பூக்களின் பெயரைச் சொல்வாரே அது போன்று இதில் கபிலர் 99 வகையான பூக்களின் பெயர்களை 35 அடிகளில் சொல்கிறார். இதுவே மிகப் பெரிய சாதனைதான். அந்தப் பாட்டைத்தான் நான் இங்கே காட்ட உள்ளேன். ஜோதிகாவும் (தலைவி), தோழிகளும் நெல்லைக் கொத்திக் கொண்டு போகாமலிருக்க பறவைகளை விரட்டிக் கொண்டிருகின்றனர். நல்ல மழை வேறு பெய்திருக்கிறது. அருகில் தெளிந்த நீரைக் கொட்டிக் கொண்டிருக்கிறது ஓர் அருவி. மேகம் கருக்குது, மின்னல் சிரிக்குது, சாரல் அடிக்குது என்று பாடியவாறே அருவியில் குளித்த அவர்கள் அடுத்து பூக்களைச் சேகரித்து விளையாடுகிறார்கள். இதைச் சொல்ல வரும்போதுத்தான் அவர்கள் 99 வகையான பூக்களைச் சேகரித்ததாக கபிலர் பாடுகிறார்.



அந்தப் பாடல்:

வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,                     (3)
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,                       (6)
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,                      (9)
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,         (11)

எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம்,                             (14)
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,                        (17)
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,           (20)
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,                            (23)
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,                       (26)
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,                             (29)
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,                             (31)
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,                   (34)
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,                      (37)
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,                  (40)
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,                          (43)
தில்லை, பாலை கல்லிவர் முல்லை                         (46)
குல்லை பிடவம், சிறுமாரோடம்,                               (49)
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,                            (52)
தாழை, தளவம், முள் தாள் தாமரை,                         (55)

ஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி,                    (58)
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,                               (61)
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,           (64)
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,           (67)
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,                         (70)

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,           (73)
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,            (76)
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,                          (79)
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,                                    (82)
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,                     (85)

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,                                 (88)
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,                                   (91)
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,                         (94)
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,                                (96)
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,             (98)

அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,                 (99)
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.

பாடலை ரசித்துக் கொண்டே இன்னொரு முறை பாடல் பாடப்பட்ட களத்தை நினைத்துப் பாருங்கள். அருவியில் குளித்து முடித்தவர்கள் இத்தனை வகையானப் பூக்களைச் சேகரிக்கிறனர் எனில் அத்தனை வகையான மரங்களும், செடிகளும் அருகருகே நிறைந்த இயற்கைச் சூழலாக இருந்திருக்கிறது குறிஞ்சி நிலம். இன்றைய நிலையில் நாம் நூறு கிலோ மீட்டர் சுற்றினாலும் இத்தனை வகையான பூக்கள் கிடைக்குமா? எப்பேர்ப்பட்ட சூழலை நாம் இழந்திருக்கிறோம்/ அழித்திருக்கிறோம். “மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்” என்ற வைரமுத்துவின் கவிதையை மெய்யாக்காமல்  வரும் தலைமுறை மிச்சம் இருக்கும் இயற்கைச் சூழலையும் அழிக்காமல் பாதுகாக்க உறுதி கொண்டு, இயற்கைச் சூழலைக் காப்போம்.               

நன்றி, 
ஆசிப்                      

Tuesday, June 2, 2015

பதிப்புச் செம்மல் சி.வை. தா - மறக்கப்பட்ட தமிழ்த்தாத்தா

பதிப்புச் செம்மல் சி.வை. தா - மறக்கப்பட்ட தமிழ்த்தாத்தா 

வணக்கம் நண்பர்களே !!

பொதுவாய் ஒருவரைத் தாத்தா என்று அழைத்தால் அவர் தாய் வழித் தாத்தாவாகவோ இல்லை தந்தை வழித் தாத்தாவாகவோ இருப்பார். அப்பிடித் தாய்வழித் தாத்தாவான உ.வே.சா அவர்களை நாம் நன்கு அறிவோம். தந்தை வழித் தாத்தாவாய் இன்னொருவர் இருந்தார் அவரை நாம் யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்திற்காக மறந்து விட்டோம். அவர்தாம் சி.வை. தாமோதரம் பிள்ளை.


இவரும் உ.வே.சா அவர்களைப் போலவே சுவடித் திரட்டி உ.வே.சாவிற்கு  முன்னவே அதனைப் பதிப்பித்தவர். பதிப்புச் செம்மல் என அழைக்கபடுபவர். இன்னும் சொல்லப் போனால்உ.வே.சா அவர்கள் சிந்தாமணியைப் பதிப்பில் கொண்டுவர ஊக்குவித்து அவர்க்குப் பதிப்புத் துறையை அறிமுகப் படுத்தியவர் சி.வை.தா அவர்கள்.இதை உ.வே.சாவே, ""இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம்பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887-இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

தாமோதரனார் யாழ்ப்பாணம் அருகேயுள்ள சிறுப்பிட்டி எனும் ஊரில் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு செப்டம்பர் 12, 1832 அன்று மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தமிழ், ஆங்கிலம், அறிவியல் ஆகியன கற்று பின்  கோப்பாய் எனும் ஊரில் இருந்த போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். அவரின் 21 வயதில் (1853 ஆம் ஆண்டு) நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார்.அதன்பின் சென்னை வந்த இவர் சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கானத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார். பிறகு சட்டம் படித்து வக்கீல், நீதிபதி போன்ற பதவிகளை வகித்தார்.

நாம் அன்னாரின் பதிப்புச் சாதனைக்கு வருவோம். அதே நேரத்தில் ஆறுமுக நாவலர் 1868-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைஆய்வுசெய்து கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து அவருடன் இணைந்து தொல்காப்பியம் சொல்லதிகாரத்தை ஆராய்ந்து அதனைப் பதிப்பித்தார். ஆங்கில மோகத்தின் காரணாமாய் தமிழ் நூல்கள் அருகி வருவதைக் கண்டு மனம் வெதும்பி தொல்காப்பியம் முழுக்க பதிப்பிக்க முனைந்தார்.

நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரம் அர்ப்பணிப்புடனான அவரது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சிட்டு தமிழ் நாட்டின் பட்டினங்கள் தோறும் அந்நூலை அவர் பவனி வரச் செய்தார். சொல்லும், பொருளும் பதித்த பிறகு தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரையைப் பதிப்பித்தார்.

அத்தோடு நில்லாமல்  வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), போன்ற பண்டைய இலக்கண நூல்களை உரையோடு பதிபித்தார்.

தொல்காப்பியத்தை (சொல், எழுத்து, பொருள்) முழுக்க பதிப்பித்து மக்களிடையே சேர்த்தது சி.வை.தா அவர்கள்தாம். அத்தோடு நில்லாமல் இன்னும் பல இலக்கண நூல்களைத் தேடிப் பதிப்பித்தார்.

அவர் பதிப்பித்த நூல்கள் :


  • நீதிநெறி விளக்கம் (1953)
  • தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
  • வீரசோழியம் (1881)
  • திருத்தணிகைப் புராணம்
  • இறையனார் அகப்பொருள்
  • தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
  • கலித்தொகை
  • இலக்கண விளக்கம்
  • சூளாமணி
  • தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை


அன்னார் இயற்றிய நூல்கள்


  • கட்டளைக் கலித்துறை
  • சைவ மகத்துவம்
  • வசன சூளாமணி
  • நட்சத்திர மாலை
  • ஆறாம் வாசகப் புத்தகம்
  • ஏழாம் வாசகப் புத்தகம்
  • ஆதியாகம கீர்த்தனம்
  • விவிலிய விரோதம்
  • காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)


அந்தத் தாத்தா பழம் பெரும் இலக்கியங்களைத் தேடி பதிப்பித்தார் அதே போல இந்தத் தாத்தா தமிழரின் அடையாளமான பழம் பெரும் இலக்கணங்களைத் தேடி, ஆராய்ந்து பதிப்பித்தார். இது உ.வே.சாவின் சாதனைக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி,
ஆசிப்

Wednesday, April 22, 2015

உலகப் புத்தக தின குறும் பதிவு

வணக்கம் நண்பர்களே,

புத்தக தினமாம் இன்று. நானும் புத்தகங்களும் எப்பிடி இணைந்தோம் என்ற பதிவுதான் இது. என் பால்யம் புத்தகங்களாலேயே நிரம்பிக் கிடந்தது. அப்போது நான் இருந்தது ஈரோடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. மொத்தமும் என் வயதையொத்த நண்பர்களே. முதலில் ஆரம்பித்தது சிறுவர் மலர்தான் என நினைக்கேறேன். "பல முக மன்னன் ஜோ" அப்போதைய  பிரபலம். அதே சிறுவர் மலரில் தொடர் கதையாக வந்தது "உயிரைத் தேடி". கிட்டத்தட்ட இப்போதைய "Resident Evil" மாதிரியான கதை.

என் ஐந்து வயதில் "பூந்தளிர்" முதல் காமிக்ஸ் புத்தகமாக அறிமுகமானது. பூந்தளிர் என்றதும் வேற என்ன நினைவிற்கு வரும் ?? மந்திர வால் குரங்கு கபிஷ் :))))). கபிஷின் நண்பர்கள் கரடி பபூச்சா, மான் பிந்து, கழுகு பஞ்சா, யானை பந்திலா மற்றும் வில்லனாக ஒரு நரி (பெயர் நினைவில்லை), புலி (பீலு ??), வேட்டைக்காரன் தோப்பையா. இவர்களிடம் இருந்து வன நண்பர்களைக் காப்பதுத்தான் கபிஷின் வேலை; விலை 2 ரூபாய். வாண்டுமாமா கதைகள்  அருமையாக இருக்கும் (அவர்தான் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார் என்பதெல்லாம் அப்போ தெரியாது). பூந்தளிரின் இன்னொரு மிகப் பெரிய நாயகன் காக்கை காளி (இன்னொரு நரி, முதலை பாத்திரங்கள் வரும். பெயர்கள் நினைவு இல்லை). ஒவ்வொரு மாதமும் விடாமல் படித்துக் கொண்டிருந்தேன்.கூடவே அம்புலிமாமா, பாலமித்திரா, இரத்னபாலா அறிமுகம் ஆகின. அம்புலிமாமா = விக்கிரமாதித்தன் கதைகள். வேதாளம் போல என் முதுகிலும் புத்தகங்கள் எறிக் கொண்டன.

நான்காவது/ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் போது எதிர் வீட்டில் மாலை மலர் நிருபர் குடும்பம் குடி வந்தது. அவர் பெயர் திருமால்துரை. ராஜா, ராஜி என்று என்னை விட வயது குறைந்த இரு குழந்தைகள் அவர்களுக்கு. அதே நேரத்தில் இந்த காமிக்ஸ் எனப்படும் படக்கதை படிப்பதில் அடுத்த படிக்குச் சென்றிருந்தேன். என்னையும், என் நண்பர்களையும் வேறு ஒரு உலகத்திற்கு கூடிச் செல்ல வந்தது "லயன் காமிக்ஸ்", "முத்து காமிக்ஸ்", "மினி லயன் காமிக்ஸ்". லயன் காமிக்ஸ்தான் முதலில்.. அப்பப்பா... குற்றச் சக்கரவர்த்தி சிலந்தி மனிதன் (Spider man), இரும்புக் கை மாயாவி, ஆர்ச்சி ரோபோ. நீங்கள் எண்பதுகளில் பிறந்தவர் என்றால் தெரியும் லயன் காமிக்ஸ் அருமை. மாலை மலர் நிருபர் என்று சொன்னேன் அல்லவா, அது ஏன் என்றால் மாலை மலர் தினத் தந்தி நிறுவனத்தில் ஒன்று. அதே நிறுவனம் "ராணி காமிக்ஸை" அப்போது அறிமுகப் படுத்தியது. ராணி காமிக்ஸ் புத்தகம் கடைக்கு வரும் இரண்டு நாட்கள் முன்னே என் கைக்கு வந்துவிடும். அவர் வீட்டிலும் என்னை விட சிறிய குழந்தைகள் எனவே ஒரு காலத்தில் நான்தான் ராணி காமிக்ஸின் ஒவ்வொரு பதிப்பையும் முதலில் படித்தது நான்தான். :)) ராணி காமிக்ஸில் யார் வருவார் ? ஜேம்ஸ் பாண்ட் :)). பிறகு, மாடாஸ்தி பிளைசி (பெண் புலி) மற்றும் அவர் நண்பர் வில்லி கார்வின் (கத்தி வீச்சு ஸ்பெஷலிஸ்ட்), மந்திரவாதி மாண்ட்ரேக் இன்னும் பலர்.

ஒரு  வருடம் கழித்து காமிக்ஸ் உலகின் மாபெரும் நாயகன் எனக்கு அறிமுகம் ஆனார். "டெக்ஸ் வில்லர்". நவஜோ இனத் தலைவர், ரேஞ்சர்,
குறிதவறாமல் சுடுவதில் வல்லவர். காமிக்ஸ் உலகின் ரஜினிகாந்த் டெக்ஸ் வில்லர் எனச் சொல்லலாம். அந்த அளவிற்கு வெறி பிடித்துப் போய் படித்துக் கொண்டு இருந்தேன். மினி லயன் வண்ண அச்சில் வேறு மாதிரியான கலவையாக வரும். கேட்கவே வேண்டாம். லக்கி லுக்தான் என் கனவு கண்ணன் :)) லக்கி லுக்கும் அவன் குதிரை ஜாலியும் செய்யம் சாகசங்கள் ஒவ்வொன்றும் ரண களம் :) வருடம் ஒருமுறை ஆண்டு மலர், தீபாவளி மலர்
என கலந்து கட்டி படித்துக் கொண்டுருந்த நான் ஈரோட்டில் இருந்து தாராபுரம் சென்றது விதியின் விளையாட்டு. ஈரோடு போல இல்லாமல் அது ஒரு சிறு நகரம். புத்தகம் கிடப்பது இல்லை அது போல; தேடி தேடி கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே அடுத்த படிக்குச் சென்றேன்.

வீட்டில் குமுதம் (கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் - தொடர்), ஆனந்த விகடன், நக்கீரன், ஜூனியர் விகடன் என் தந்தையார் படிக்க. சிலது புரியாது இருந்ததாலும் படித்து வைத்துக் கொண்டேன்.

அப்போது கோவையில் இருந்து அசோகன் என்ற மனிதர் நாவல்களை பிரசுரம் செய்து கொண்டு இருந்தார். பாக்கெட் நாவல், கிரைம் நாவல் என்ற பெயரில்.  அதுவரை எனக்கு படக் கதை மட்டுமே. நாவல்களில் படம் இருக்காது :( அனால் ராஜேஷ் குமார் என்பவர் எனக்கு இன்னொரு நாயகனைக் காட்டினார்
விவேக் என்ற பெயரில். விவேக், ரூபாலா, இன்ஸ்பெக்டர் கோகுல்நாத், துப்பறியும் கதைகள் இயல்பாகவே வசீகரித்தன. போத குறைக்கு பட்டுக் கோட்டை பிரபாகரரின் நரேன், வைஜயந்தி.. அம்மாவின் சில சென்சார்களுடன் படிக்க கிடைத்தது.

கெட்ட நண்பர்களின் சக வாசம் நூலகத்தை வேறு காட்டியது.
துப்பறியும் கதைகளை அங்கே தேடியதில் "தேவன்" கிடைத்தார். "துப்பறியும் சாம்பு" விவேக்/நரேன் போல இல்லாமல் காமெடி detective. எட்டாவது வரும் போது அடுத்த அதிர்ச்சி தமிழ்வாணன் என்ற மனிதரால். "இன்னொரு செருப்பு எங்கே" எனப் பார்க்கப் போய் "சங்கர்லால் துப்பறியும்" கதைகளைத் திகட்ட படித்தேன். அப்போது எனக்கு ஷெர்லாக் ஹோம்ஸ்லாம் தெரியாது. அனால் தமிழ்நாட்டின் ஷெர்லாக் சங்கர்லாலாய்த்தான் இருந்த்திருக்க முடியும்.

கெட்ட நண்பர்கள் சகவாசம் என்றேன் அல்லவா :))) ஒன்பதாவது படிக்கும்போது "கியூபா - புரட்ச்சிகர யுத்தத்தில் கதை" சே குவாராவின் வரலாறு. பாதிக்கும் மேல் புரியவில்லை; ஆனாலும் நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் பக்கம் அடிக்கடி போக வைத்தது. அப்போதெல்லாம் ஒரு பஸ் போன்ற வண்டியில் நடமாடும் புத்தகக் கடைதான் இருக்கும். சும்மாவது எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். "இவான்" படித்து முடித்ததும் ஒரு சோக மனநிலைக்கு கொண்டு சென்ற முதல் புத்தகம். சோவியத் புத்தகங்கள் சிலவற்றை இன்னும் வைத்திருக்கிறேன்.

கல்லூரி விடுதி வேறு ஒரு புத்தக உலகையும் காமித்தது. இரண்டாம் ஆண்டு தமிழ் ஆசிரியர் "இரா.இரகுபதி" பாரதிதாசனை அறிமுகப் படுத்தினார்.
சட்டென்று மனதில் ஒட்டியர் கவிஞர் புரட்சி கவிஞர்தான். பாரதி, பாரதிதாசன், வள்ளுவர் மூன்றும் இரண்டாம் ஆண்டு முழுக்க. சிலப்பதிகாரம் கூட
படித்தேன் அனால் சரியான் உரை கிடைக்கவில்லை நூலகத்தில். இதைத் தவிர நான் இயற்பியல் படிக்கவே இல்லை. நண்பர்களுக்குத்தான் தெரியும் அது :))

மூன்றாம் ஆண்டு = மிக முக்கியமான ஆண்டு. கொஞ்சம் திமிர் வேற. கல்லூரியின் எதிரில் பெரியார் திடல். பெரியார் நூலகம், தி.க கூட்டங்கள். நான் ஒருவன் மட்டுமே பெரியார் நூலகத்திற்கு போகும் விடுதி மாணவன். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு சின்ன புத்தகங்கள் விற்பார்கள். வார விடுமுறையின் போது ஊர்க்குச் செல்ல பஸ் ஏறும் போது வாங்குவேன் ஊரில் இறங்கும் போது கிழித்துப் போட்டுவிட்டு வந்து விடுவேன். வீட்டில் ஒரு முறை பார்த்து திட்டும் வாங்கினேன் :)

முதுகலை படிக்கும் போது ஒரு பயத்தோடு படித்தேன் (வேலை பயம்) பாலகுருசாமி, RS அகர்வால்தான் படித்தேன் இரண்டு வருடமும்.

வேலைக்காக சென்னை திருவைல்லிக்கேணி விடுதியில் தங்கியதுதான் நான் செய்த பாக்கியம். பழையப் புத்தகக் கடைகள், புத்தகக் கடைகள்,
மூர் மார்கெட் புத்தகக் கடைகள் (நாவல்கள்). 1. சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்சேர், ஹாரி பாட்டர் அனைத்தும் மூர் மார்க்கெட்தான். ஒரு புத்தகம் பத்து ரூபாய். அதே புத்தகம் லேன்ட் மார்க்கில் 15௦ - 2௦௦ ருபாய். பொன்னியின் செல்வன், சாரு நிவேதா, ஜெய காந்தன், லாசாரா, புலியூர் கேசிகன், ஊ.வே.சா, கலிங்கத்துப் பரணி என அனைத்தும் கிடைத்தது. போதாகுறைக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் முது கலை தமிழ் சேர்ந்து விட்டேன். தொல் காப்பியமும், சங்க இலக்கியமும் எப்பவும் ஒட்டிக் கொண்டது (இன்று வரை), சென்னை புத்தக கண்காட்சி அறிமுகமானது. வேலை வேறு கிடைத்திருந்ததால் மிகப் பெரும் சுகந்திரம் கண்ணா பிண்ணனு புத்தகம் வாங்கினேன். கவிதைகள் அறிமுகமானதும் அப்போதுத்தான்.. அறிவு மதி, தபு சங்கர், பழனி பாரதி, (வைரமுத்து கல்லூரிக் காலம் இருந்தே).

ஒருவாறு படிக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது வேறு வேறு எல்லைகளில். புது புது அறிமுகங்கள், புத்தகங்கள். எல்லாம் எழுதத் தேவையில்லை. அமெரிக்க வந்து இழந்தது இது ஒன்றுதான். நினைக்கும் போதேலெல்லாம் கிடைப்பதில்லை/வாங்க முடியவில்லை. ஆனாலும் இணையம் உதவுகிறது.

கேட்பது ஒன்றே ஒன்றுதான். நிறையப் படியுங்கள். எதை வேண்டுமானாலும் ஆர்வம் வந்ததும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.


நன்றி,
ஆசிப்



Saturday, April 18, 2015

ஓ காதல் கண்ணகி !!

வணக்கம் நண்பர்களே !!

நேத்து ஓ காதல் கண்மணி பார்த்தது முதல் ஒரே காதல் mood. அதே பீலிங்ஸ்லேயே ஆபீஸ் போனா என்னத்த வேலை ஓடும் ?
நான் பாட்டுக்கு சிலப்பதிகாரம் படிக்க ஆரம்பித்துவிட்டேன். சிலம்போட ஆரம்பமே கோவலன், கண்ணகி திருமணம்தான். அதுக்கு அடுத்த அதிகாரத்தைத்தான் இங்க பகிரப் போகிறேன். அதிகாரத்தோட பேரு "மனையறம் படுத்த காதை". அதாவது நாம இப்ப கோவலன், கண்ணகி முதல் இரவில் என்ன நடந்துச்சுன்னு பாக்கப் போறோம். என்னது first night சீனான்னு ஆர்வமாகிட்டிங்களா? இளங்கோ அடிகள் சமணத் துறவி. அதுனால நீங்க எதிர்பார்க்குறது இங்க இருக்காது :). பின்ன என்ன "வா வா பக்கம் வா, பக்கம் வர வெட்கமா " பாட்டையா பாடி இருப்பாரு? நீ போங்கு ஆட்டம் ஆடுறனு நினைச்சு கோவபட்டுறாதிங்க. அழகன் படத்துல மம்முட்டி பானுப்ப்ரியாவுக்கு பாரதிதாசனோடகுடும்ப விளக்குல வர ஒரு கவிதை மாதிரி ஒண்ணு எழுதி பாடி காமிப்பாரே (சாதி மல்லி பூச்சரமே) கிட்டத்தட்ட் அந்த மாதிரி ஒரு காட்சிதான் இப்ப..


ஒரு சின்ன முன்னுரை..ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. தனிக் குடித்தனம் வைச்சுட்டாங்க. ஒரு தனி மாளிகை,கண்ணகிக்கு உதவியாகப் பனிப் பெண்கள் பலர். அதுக்கு பேரு இன்ப மாளிகை :). அது ஒரு இரண்டு அடுக்கு மாளிகை; அதுக்கும் மேல ஒரு தளம் (open Terrace). நிலாக் காலங்களில் பொழுது போக்க அருமையான இடம் அது; இரண்டு பேரும் சந்தோசாமா இருக்குறாங்க அங்க.

சரி, மேட்டர்க்கு (என்னது ???) வருவோம். கோவலன் அருகில் இருக்கும் கண்ணகியைப் பார்க்கிறான். இவள்தான் என் கண்மணி எனத் தோன்றுகிறது அவனுக்கு. அவளின் நாணத்தைப் போக்க வேண்டும். என்ன பண்ணலாம் ? சரி மானே, தேனேனு கவிதை சொல்லலாம் அவள் அழகைக் கொண்டுனு முடிவு செய்றான்.

குழவித் திங்கள் இமையவர் ஏத்த,
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னொடு பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகு என

குழவித் திங்கள் = குழந்தை நிலா (பிறை நிலா) ; இமையவர் = இமய மலையின் மீது இருக்கும் சிவன் ;

இரவுப் பொழுது. அறைக்குள் ஒளி குறைவாத்தான் இருக்கு. சின்ன விளக்கு மட்டுமே இருக்குது அங்க. உள்ளே வரும் கண்ணகியைப் பார்க்கிறான். முதலில் அவள் நெற்றியைப் பார்க்கிறான். சிவனின் சடையில் அழகாகப் பொலிந்து இருக்கும் நிலா நிச்சயம் உன்னோடதான் பிறந்து இருக்க முடியும் என எண்ணி அவன் அந்த பிறை நிலவை உன் நெற்றியாகத் தந்தான். அதாவது நிலா, பாற்கடலில் திருமகளான (கண்ணகி) உன்னோடு கூடப் பிறந்தது. ஆகவே, சிவன் தனது பிறை நிலாவை உன்னுடைய நெற்றியாகக் கொடுத்துவிட்டான்.

அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டாகலின்
உருவு இலன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவமாக ஈக்க

அடையார் முனை= போர் முனை ; உருவு இலன் = உருவம் இல்லாதவன். ;

நெத்தியைப் பாத்தானா, அடுத்து புருவம். எல்லா கவிஞரும் சொன்னதுதான். புருவம் வில் மாதிரி இருக்குனு சொல்லுறான். அதக் கொஞ்சம் ரொமாண்டிக்கா சொல்லுறான். போரில் கலந்துகொள்ளும் வீரர்களுக்குப் படைக்கருவிள் வேண்டும். என்னோடு காதல் போர் செய்ய வரும் உனக்குத் தன்னுடைய பெரிய கரும்பு வில்லை இரண்டு கருத்த புருவங்களாகச் செய்து கொடுத்தான் உருவம் இல்லாத மன்மதன். அது என்ன உருவம் இல்லாத மன்மதன் ? பழைய கதைதான். சிவன் கோவப்பட்டு மன்மதனை
எரித்து விடுகிறார். ரதியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவள் மட்டும் கானும்  மாறும் மற்றவர் கண்ணிருக்கு தெரியாமல் இருக்குமாறு ஒரு உருவம் கொடுக்கிறார் சிவன்.அந்த மன்மதனைத்தான் உருவம் இல்லாத மன்மதன் எனச் சொல்ல்கிறார்.


மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படை நினக்கு அளிக்க அதனை நினக்கு இடையென

மூவா மருந்து = அமுதம் ;

புருவத்துக்கு அப்புறம் கண்ணைப் பார்ப்பான்னு நினைப்பிங்க ; அவன் கொஞ்சம் வேகமா கீழ வந்தது இடுப்பப் பாக்குறான். (கெட்ட பையன் சார்)..
இந்த தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த கதை தெரியும்ல. அப்பிடி பண்ணும் போது அந்த அமுதம் வருவதற்கு முன்னால பல வேறு பொருட்கள் வந்தனவாம். அப்பிடி வந்து இந்திரனுக்கு கிடைத்தது வச்சிரம் எனும் ஆயுதம். அதோட கைப் பிடி சிறுத்திருக்கிறது.
அத இந்திரன் கண்ணகிக்கு கொடுத்துவிட்டான். அதை அவள் மெலிந்த இடையாகச் செய்துகொண்டு விட்டாள். (உஸ்ஸ்ஸ்.. சின்ன இடை, அதைத்தான் சுத்தி சுத்தி எழுதிருக்கான். :))) )


அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்
இறு முறை காணும் இயல்பினின் அன்றே
அம்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது

அறுமுக ஒருவன் = ஆறுமுகன் / முருகன் ; இறுமுறை காணும் = இறுதி பண்ணிப் பார்க்க (முடித்து கட்டிவிடப் பார்க்கும் )

இடையைப் பார்த்தவன் கொஞ்சம் மேல பார்க்குறான். இருங்க இருங்க. அவன் இப்பத்தான் கண்ணைப் பார்க்கிறான்.

இந்த ஆறுமுகன் இருக்கானே அவனுக்கு என் மேல என்ன கோவமோத் தெரியல. ஆறு முகம் = 12 கண்கள். ஆனா ஒன்றில் கூட அவனுக்கு என் துன்பம் தெரியல ; என்ன துன்பம் கோவலனுக்கு ?? முருகன் அவனுடைய அழகிய சுடர் மிகுந்த நெடுவேலை இரண்டாக்கி ஒன்றை கண்ணகியின் குளிர்ச்சியான இரண்டு கண்களாக மாறும்படி செய்துவிட்டான். இப்போது அந்த வேல் போன்ற உன் கண்கள் என்னைக் குத்திக் கொல்கின்றன..


மா இரும் பீலி மணிநிற மஞ்சை நின்
சாயல் குடைந்து தண்காண் அடையவும்
அன்னம் நன்னுதல் மென் நடை கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்

மா இரும் பீலி மணிநிற மஞ்சை = கருத்த பெரிய தோகையையும் நீலமணி போன்ற நிறத்தையும் உடைய மயில்

நீல நிற மயில் ஒன்று தன் பெரிய கருத்த தோகையை விரித்து ஆடும் போது எப்பிடி இருக்கும் ? ரொம்ப அழகா இருக்கும்ல.. அப்பிடிப்பட்ட மயில்களாம்
உன் அழகிற்கு முன் தோற்று காட்டிற்குள் ஓடிப் போய் விட்டன. மயில்கள் மட்டுமில்லை இந்த அன்னப் பறவைகள் நீ நடப்பதைப் பார்த்து விட்டு உன்னோட போட்டியிடமுடியாது என்று நல்ல நீரை உடைய வயல்களில் நிறைந்திருக்கும் மலர்களுக்கு நடுவே சென்று பதுங்கிக்கொண்டன.


அளிய தாமே சிறு பசும் கிளியே,
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்
மடநடை நின் மலர்க்கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின

இந்த மயில்கள், அன்னப் பறவைகள் இதுக கூட பராவாயில்லை. ஆனா இந்த பச்சைக் கிளிகள்தான் ரொம்பப் பாவம். குழலும் யாழும் அமுதமும்
சேர்ந்து குழைத்த உன்னுடைய மழலைப் பேச்சுக்குமுன்னால் அந்தக் கிளிகளின் பேச்சு எடுபடவில்லை. ஆனாலும் உன்னைவிட்டுட்டு போக அவைகளுக்கு மனம் இல்லை. மலர் போன்ற உன் கையிலேயே தங்கியிருந்து உன்னுடைய பேச்சைக் கேட்டுப் பழகிக்கொள்ளலாம் என்று திட்டமிடுகின்றன


நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர்
மறுவில் மங்கல அணியே அன்றியும்
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்!

நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர் = மணம் மிகுந்த மலர்களை அணிந்த கோதையே, உனக்கு அலங்காரம் செய்கிற பெண்கள்

இது முதல் இரவு. எனவே கண்ணகிக்கு பணிப் பெண்கள் அலங்காரம் செய்து இருக்கிறனர். கோவலனுக்கு அதைப் பார்த்ததும் கோவம் வருகிறது. நல்ல மணம் மிகுந்த பூக்களை அணிதிருக்கும் கண்ணகியே, யார் உனக்கு இவ்வளவு அலங்காரம் செய்தார்கள்? உன்னுடைய இயற்க்கை அழகே ஏதும் குற்றம் சொல்ல முடியாததது. அதன் மேல் எதுக்கு செயற்கை அழகு கூட்ட இந்த நகைகளை அணிவிக்கிறார்கள் ? அதனால் ஒரு பயனும் கிடையாது.


பல்லிரும் கூந்தல் சின்மலர் அன்றியும்
எல் அவிழ் மாலையொடு என்னுற்றனர் கொல்!

அடர்த்தியான உன்னுடைய கூந்தலில் ஒன்றிரண்டு மலர்களைச் சூடினால் போதாதா? இத்தனை பெரிய மாலையைச் சுமத்தவேண்டுமா?

நானம் நல் அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்!

உன் கூந்தலுக்கு மணம் நிறைந்த நல்ல அகில் புகையை ஊட்டினார்கள். சரி. அதற்குமேல் கஸ்தூரிச் சாந்து பூசியது எதற்காக?

திருமுலைத் தடத்து இடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்!
திங்கள் முத்து அரும்பவும் சிறு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர் என்னுற்றனர் கொல்!

அழகிய உன் மார்புகளில் தொய்யில் (சந்தனக் கோலம்) வரைந்தார்கள். சரி. அதற்குமேல் ஓர் ஒற்றை வட முத்துமாலையை அணிவித்திருப்பது எதற்காக?
அவர்கள் இத்தனை நகைகளையும் உனக்கு அணிவித்துவிட்டதால், உன்னுடைய சிறு இடை பாரம் தாங்காமல் நோகிறது. நிலா போன்ற உன் முகத்தில் முத்துபோல் வியர்வை அரும்புகிறது. இப்படி உன்னை வருந்தச் செய்த அவர்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது!. கண்ணகியின் இடை அவ்வளவு மேல்லியது. நகைகளின் பாரம் தாங்காமல் இடை நோகிறதாம்.


மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலைஇடைப் பிறவா மணியே என்கோ!
அலைஇடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழ்இடைப் பிறவா இசையே என்கோ!

குற்றம் இல்லாத பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே,
என் உயிரைப் பிடித்துவைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே! உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில்
பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா?

முக்கியாம ஒன்ன சொல்ல மறந்துட்டேன். அந்த மாளிகையில் நிறைய ஓவியங்கள் மாட்டப்பட்டு இருந்தன. இதன் பின் அதுல ஒரு ஓவியத்தை
மிக அருகில் காட்டுகிறோம்...A Close up shot..Cut !!!