Tuesday, March 3, 2015

மீனு வாங்கலையோ மீனு !!

வணக்கம் நண்பர்களே !!

நான் ஒரு மீன் பிரியன் ; குழம்போ, பொறித்தோ, வறுத்தோ எப்பிடி இருந்தாலும் "நான் அப்பிடியே சாப்பிடுவேன்" :).  தாராபுரத்தில் இருக்கும் வரை மீன் மிக அரிதாகத்தான் கிடைக்கும் ; அதும் ஆற்று மீனோ , அணைக்கட்டு மீனோ மட்டுமே கிடைக்கும் ; ஜிலேபி கெண்டைனு ஒரு மீன் , ஏகப்பட்ட முள் இருக்கும். பெரும்பாலும்அதுதான் ; அம்மா மீன் குழம்பு, மீன் வறுவல் இரண்டும் செய்வாங்க. சாப்பாடு ஆகும் முன்னமே சில பல மீன் வறுவல்கள் தனியா வயித்துக்குள உள்ள போகும் :). சென்னை வந்தப் பின் தங்கி இருந்தது திருவல்லிக்கேணி. எட்டுற தூரத்துல கடல், பொடி நடையா நடந்து போய் வித விதமான கடல் மீன்களை சாப்பிடலாம். நம் கண் முன்னவே மசாலாத் தடவி வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொடுப்பார்கள் ; வஞ்சிரம் , பாறை , இறால் , இன்னும் பல.. நானும் என் தோழி சுபாவும் அங்கு சாப்பிட்டக் கணக்கைப் பார்த்தால் யாரவாது ஒரு கடைக்காரர் இலட்சாதிபதி ஆகி இருப்பார் ; நாங்கள் இருவரும் சேர்ந்தது கடற்கரையில் மீன் மற்றும்
சென்னையின் அனேக இடங்களில் பிரியாணி சாப்பிட்டதை "வேலை தேடிய பொழுதுகள்" அப்பிடின்னு ஒரு படமே எடுக்கலாம் ; உணவுப் பிரியர்கள் நூறு நாட்கள் ஓட வைப்பார்கள் :)  அட, அமெரிக்கா வந்துத்தான் விட்டேனா நானு ? இங்க சென்னைய விட செம ஜோர் ; எதோ இன்னிக்கு வரை வீட்டம்மா புண்ணியத்துல அடிக்கடி நானும் மீனும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்குது ;

இப்ப எதுக்கு இந்தக் கதைனா , சங்க இலக்கியத்துல என்ன என்ன மீன்கள் வருதுன்னு தேடிட்டு இருக்கும் போது தோன்றியதே மேற்கூறிய மலரும் நினைவுகள். எட்டுத் தொகையில் ஒண்ணு ஐங்குறுநூறு, மூன்று முதல் ஆறு அடி வரையிலுள்ள நானூறு பாடல்களைக் கொண்டது. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை, என்ற வரிசையில் இதன் ஐந்து பகுதிகளும் உள்ளன. இவற்றைப் பாடியவர்கள் முறையே ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார், என்னும் ஐவராவர். எல்லா சங்க இலக்கியப் பாடல்களும் முதல் , கருப் பொருள், உரி பொருள்களை அடிப்படையாக் கொண்டுப் பாடப்பட்டவையே. மீன் ஒரு உரி பொருள். அத ஐங்குறுநூறுல யார் யார், எந்த எந்த மீன்களை எப்பிடிலாம் பாடி இருக்காங்க சொல்லத்தான் இந்தப் பதிவு.

முதல்ல என்ன என்ன மீன்கள் ஐங்குறுநூறுல வருது அப்பிடின்னு பாத்துருவோம்.

அயிரை: ஆத்து மீனு , குளத்து மீனு அப்பிடின்னு யாரவது சொன்னா அது அயிரை மீனுதான் ; ரொம்ப பொடியா இருக்கும் ; சாப்பிட ரொம்ப வசதி ; முள் எடுக்கலாம் வேணாம் ; அப்பிடியே சாபிட்டுரலாம் ; சமையலும் சுலபம்தான் ; உப்பு போட்டு ரெண்டு தேய் தேய்ச்சு அப்பிடியே குழம்புல போட்டுறலாம் (மதுரை சாரதா மெஸ் ஸ்பெஷல் ).


இறால்: இறால் , இறவு, சேயிறா என்ற பெயர்களில் குறிக்கப்பட்டுள்ளது.
பெரிய மீசை, பெரிய கண், நல்ல நீர், கடல் நீர் இரண்டிலும் இருக்கும் ; சுத்தம் செய்ய கொஞ்சம் மெனக்கெடனும் ; முதல்ல தோல் நீக்கி, பின்னே முதுகில் இருக்கும் நரம்பை எடுக்க வேண்டும் ; அப்புறம் தொக்கு செய்து சாப்பிட வேண்டியதுதான் ;




வரால் / விரால் மீன் (Channa striata): நன்னீரில் வாழும் மீன் வகை. அயிரை போல இல்லாமல் பெரிய அளவு மீன். கெண்டை மீன்களை விட, முள் குறைந்த, சுவை மிகுந்தது. இம்மீன்கள் நீர்பாசி மற்றும் தாவரங்கள் நிறைந்த உள்நாட்டு நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை போன்றவவைகளில் காணப்படும். விரால் மீனின் தோற்றம் உருண்டை வடிவமாக நீண்ட உடலைப் பெற்றிருக்கும். தலை பாம்பின் தலையைப் போன்று இருக்கும்.

கெளுத்தி மீன் (கெடிற்று மீன்) (Cat Fish): நீரின் அடித்தளத்தில் வாழும் நன்னீர் மீன் வகை . இதைக் கெளுத்தி மீன் என்று பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. வாய்கிட்ட பெரிய மீசை இருக்கும் ; அமெரிக்காவில் அதிகம் உண்ணப்படும் மீன் இது. சில இடங்களில் மிகப் பெரியதாக வளரும் ;

கெண்டை மீன் : தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படும் கெண்டை மீன்களில் பல வகைகள் [கட்லா (தோப்பா மீன், கங்கைக் கெண்டை), வெள்ளிக்கெண்டை,புற்கெண்டை,மிர்கால்,ரோகு] உண்டு. 'கிண்டு' என்பதற்கு புரட்டிப்போடு, ஒரு வகை ஒலி என்ற பொருட்கள் உண்டு. இக்குடும்பத்தில் அடங்கும் மீன்கள் ஒவ்வொன்றின் கீழ்வாயிலும், கிண்டுவதற்கு ஏற்ப, கீழ்பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுபகுதிகள் உள்ளன. அதனால் கெண்டை (கிண்டு+ஐ)என்ற சொல் உருவானது என்பர். கெண்டைமீன் தனது மேலுதட்டின் மீதுள்ள, இரண்டு இணை குட்டைமீசைகளின் உதவியால், ஆற்றின் வண்டல் அடித்தளத்தின் மேல், இரை தேடியவாறு, அவசரமின்றி மெதுவாக நீந்தி கொண்டு இருக்கும்.

வாளை மீன் : அறிமுகம் ஏதும் தேவை இல்லை ; மாளவிகா ஆடின அதே வாள மீனுதான் ; நீளமா இருக்கும் ; கடல் மீன் ; சுத்தம் செய்து சமைக்குறது ரொம்ப கஷ்டம் ; மற்ற மீன்களைப் போல இல்லாமல் இது சிறிய மீன்களை உண்டு வாழும் மீனாகும்.

கயல் மீன் (Grey Mullet) : வயலில் வாழும் மீன் ; காவிரி நீருக்கு எந்தத் தடையும் இல்லாத காரணத்தால் சோழ நாட்டு வயல்களில் நீர் எப்போதும் நிறைந்த நிலையிலேயே இருந்தன. அதனால் ஆற்று மீனும், குளத்து மீனும் வாழ்ந்து செழித்த இடம் நீர் நிறைந்த வயல்களேயாகும். பெண்களின் கண்கள் பற்றி பாடல் வரும் போதெல்லாம் அங்கு கயல் மீன்களே வரும்.

மீன் சமையல் குறிப்பைத் தவிர மத்த எல்லாத்தையும் பாத்தாச்சு ; கொஞ்சம் ஐங்குறுநூறு பாட்டையும் பார்ப்போம் ; முதல்ல வாளை மீன் ; ஒரே ஒரு பாட்டுலதான் வாளை மீன் வருது ;

ஐங்குறுநூறுல இருக்கு "கிழத்திகூற்றுப் பத்துல" இருக்க பாட்டு இது:

"பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊர!
எந்நலம் தொலைவது ஆயினும்,
துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே!"

துறை: பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது. அதாவது , பரத்தையோடு மகிழ்ந்திருந்தபின் வீடு திரும்புகின்ற தலைவன், ஆர்வத்தோடு தலைவியை அணைப்பதற்கு நெருக்க, அவள் கோவித்துக் கொண்டு கூறுவதாக அமைந்த செய்யுள் இது. தலைவியின் உள்ளக்கொதிப்பை நன்கு காட்டுவதும் இதுவாகும்.

பள்ளி = வாழும் இடம் ; நாளிரை = அந்நாளுக்கான இரை ; துன்னல்= பொருந்தத் தழுவல். பிறர் = உரிமையற்றவரான பரத்தையர்.

பெருமானே! பொய்கையாகிய இடத்திலே வாழ்கின்றதும், மீன் நாற்றத்தைக் கொண்டதுமான நீர்நாயானது, வாளைமீனைத் தன் அன்றைய இரையாகப் பெறுகின்ற ஊரின் தலைவனே! எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து போவதேயானாலும், பிறரைத் தழுவிய எச்சிலுற்ற நின்மார்பினை யாம் பெருந்தவே (தழுவி அணைக்க) மாட்டோம்!

நீர்நாய் (Otter) என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு பழக்கிக் கொண்ட ஒருவகைப் விலங்கு. (இப்போது உயிர்க் காட்சிச் சாலைகளில் மட்டுமே காணமுடிகின்றது). வாளைமீன் இதற்கு விருப்புணவு.

நீர்நாய் அன்றன்றைக்கான இரைதேடிச் சென்று வாளைமீனைப் பற்றியுண்டல் போல, ஊரனாகிய நீயும், அன்றன்றைக்கு எழும் நின் ஆசை தீரும்பொருட்டுப் புதிய புதிய பரத்தையரைத் தேடிச் செல்கிறாய். காதல் செய்யும் போது உனக்கு இருந்த அக்கறை திருமணத்திற்கு பின் நான் என்ன ஆனால் என்ன (எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து) என்பதாக மாறி விட்டது.

இதுல சில நுட்ப்பமான கருத்துக்கள் உண்டு ; கொஞ்சம் மெதுவா இரண்டு முறை படித்தால் புரியும்.

பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் => ஒரு நீர் நாய், அது குளத்திற்கு அருகில் வசித்து வருகிறது ; முதல்ல நல்லாத்தான் இருக்கு ; ஆனா ஒரு நாள் ஒரு வாளை மீனைச் சாப்பிட்டதும், அந்த மீன் நாற்றம் பிடித்துப் போய், தினம் தினம் அந்த நாற்றத்தையே தேடிப் போய் உண்கிறது; அது போல தலைவன் முதல்நாள் கூடிய பரத்தையின் சுவடு கலையாமலே தினம் ஒரு பரத்தையைத் தேடிச் செல்கிறான்.

நாலே வரில எப்பிடிப் போட்டு வாங்குறாங்க பாருங்க ;
அதுதான் சங்கப் பாட்டு ;

மற்ற மீன்களை நாளைப் பார்க்கலாம் ; உங்கள் கருத்துக்களை கமெண்ட்டிடு போங்க ;

நன்றி,
ஆசிப்











5 comments:

  1. ஆசிஃப் வழக்கம் போல அசத்திட்டீங்க!!

    ReplyDelete
  2. அருமையா பதிவுகள்

    ReplyDelete
  3. அருமை தோழர்

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    அக்பர் சார்ஜா

    ReplyDelete