Sunday, February 15, 2015

காதல் !! காதல் !! காதல் !!

வணக்கம் நண்பர்களே !!

உலகெங்கும் காதலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது !! தமிழ் காதலர்கள் தபு சங்கரை பதிவுயிறக்கியோ , புத்தகமாகவோ காதலர்தின பரிசாகக் கொடுத்திருப்பார்கள்..இன்னும் சில பல கவிதை புத்தகங்கள்  விற்பனை ஆகி இருக்கும்.. வாழ்த்து அட்டைகள் , பரிசு பொருள்கள் இன்னும் பல விற்று தீர்ந்திருக்கும் !! யாரேனும் திருக்குறள் பரிசளித்தீர்களா ? என்னது ? காதலர் தினத்திற்கு திருக்குறளா ?? இது என்ன லூசுத்தனமா இருக்கு ..       குறள் = அறம் + பொருள் + இன்பம் ; அதுல இருக்க அந்த மூணாவது மேட்டர் முழுக்கக் காதல்தான் !! இப்போத்தான் காதல் , காமம் இரண்டும் வேற வேற அர்த்தம் ; காமம் என்பது கெட்ட வார்த்தை ; ஆனா அப்ப காமம் = விருப்பம் ; thats all !!

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! = கற்றவரைத்தான் கற்றவர் விரும்புவர் ; சரியா ? இல்லையே , அப்ப காமத்துப் பால் ?? மலரினும் மெல்லிது காமம் ; அதுல வர காமம் ? அதுவும் விருப்பம்தான் ; காதலில் விளையும் உடல் விருப்பம் ; மெய்யுறு புணர்ச்சின்னு பேரு ; உள்ளத்தால் கலந்து பின் உடலால் கலப்பது ; இவ்வளவு இருக்குற திருக்குறளை ஏன் காதலர்தின பரிசாக் கொடுக்கக்கூடாது ?

மறைந்த பெரியார்தாசன் அவர்கள் கவிதை வடிவில் காமத்துப்பாலுக்கு மட்டும் உரை எழுதி உள்ளார் ; கிடைத்தால் வாங்கிப் பாருங்கள்.
அடுத்த வருடம் பரிசாகக் கொடுக்கலாம் ;

காமத்துப் பால் = களவியல் + கற்ப்பியல் ; களவியல் = அவனும், அவளும் கண்டு காதல் கொள்வது முதல் திருமணத்திற்கு முன் வரை ;அதில் இருந்து எனக்கு பிடித்தப் பத்துக் குறள்களை இங்கே கொடுத்துள்ளேன் ;

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம் - என பாரதி கூறியது போல காதல் செய்வோம் வாருங்கள் !!



அணங்குகொல்! ஆய் மயில்கொல்லோ!- கனங்குழை-
மாதர்கொல்! மாலும், என் நெஞ்சு.

ஒரு சோலை, அவன் மட்டும் தனியே வந்து கொண்டு இருக்கிறான். அப்போது அங்கே ஒரு அழகிய பெண் ; பார்த்ததும் அவனுக்கு ஒரே ஆச்சரியம் ! யாரடா இது ? வானத்தில் இருந்து வந்த தேவதைப் பெண்ணோ ? அவ்வளவு அழகாய் இருக்காளே..நம்ம ஊர்லலாம் இந்த மாதிரி பொண்ணு இல்லையே .. ஒரு வேலை அழகு நிறைந்த மயிலோ ? இல்லையே !! காதுல தோடுலாம் போட்டு இருக்காளே ..யாரா இருந்தா என்ன ? பார்த்ததும் என்னோடு மனசு என்கிட்டே இல்ல ; அவகிட்டயே போய்டுச்சு !!


கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான், பெண் தகைப்
பேதைக்கு, அமர்த்தன கண்.

முதல் பாட்டுல அந்தப் பெண்ணை கொஞ்சம் தூரத்தில பார்த்துட்டு யாருன்னு குழம்பியவன் பக்கத்துல போய் அவளைப் பார்க்கிறான். அவளே செம அழகு ; பார்த்ததும் மனசு அவகிட்ட போய்டுச்சு. ஆனா அவ கண்ணு இருக்கு பாருங்க, அது எப்பிடி இருக்குனா பார்த்ததும் நம்மோட உயிரை எடுக்கிற மாதிரி இருக்காம்.. அவளோட பெண்மையின் அழகுக்கு எப்பிடி உயிரை எடுக்கும் கண்கள் இருக்க முடியும் ?


யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால்,
தான் நோக்கி, மெல்ல நகும்.

அவளைப் பார்த்ததும் இருந்த ஐயமெல்லாம் இப்போப் போய்டுச்சு ; அவளுக்கும் அவன் மேல காதல் வந்த மாதிரி சில குறிப்புகள் தெரியது அவகிட்ட; நான் அவளைப் பார்க்கும் போது வெட்கப்பட்டுத் தலையைக் கீழ போட்டுட்டு கால் விரலால் கோலம் போடுறா..சரினு அந்தப் பக்கம் பார்த்தா என்னை நிமிர்ந்து பார்த்துட்டு சின்னதாச் சிரிச்சுட்டே வெட்கப்படுறா.. அப்ப அதுதானே ??


கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல.

இப்போ உறுதி ஆகிடுச்சு !! "கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்றே அர்த்தம்", இது வைரமுத்து புதுசா எழுதினது இல்ல ; அவனோட கண்ணும் , அவளோட கண்ணனும் சேர்ந்தது கண்களால் காதல் பேச ஆரம்பித்தால் வாயினால் பேசப்படும் சொற்களால் ஒரு பயனும் இல்லை ;அவை வெறும் நேரம் கடத்தவே ; அந்த கண்களே காதல் ஆயிரம் பேசுகின்றன..


பிணிக்கு மருந்து பிறம னணியிழை 
தன்னோய்க்குத் தானே மருந்து.

அவன் அவளுடன் சேர்ந்து காதல் இன்பத்தில் மூழ்கி இருக்கிறான் ; எதுவும் அளவுக்கு அதிகமானால் என்ன ஆகும்? அவளின் சிறிய பிரிவு கூட அவனுக்கு பெரிய நோயைத் தருகிறது ; பொதுவாக ஒரு நோய்க்கு மருந்தாக அந்த நோய்க்கு எதிரான மருந்துதான் கொடுக்கப்படும். ஆனால் அவள் எனக்கு கொடுக்கும் காதல் நோய்க்கு அவளேதான் மருந்தாவாள் ; அவளுடன் கூடுவதே அவள் தரும் காதல் நோய்க்கு மருந்தாகும் ;


தாம் வீழ்வார் மென் தோள்-துயிலின் இனிதுகொல்-
தாமரைக்கண்ணான் உலகு?.

அவள் வந்துவிட்டாள் அவன் நோய்க்கு மருந்தாகி விட்டாள் ; இந்த தேவலோகம் , சொர்க்கம் என்றெல்லாம் சொல்லுறாங்களே ; அங்கெல்லாம் போனா பெரிய இன்பம் கிடைக்குமுனு சொல்லுறாங்களே ; இவள் தோளில் சாய்ந்து கண் மூடி இருக்கும் அந்த இன்பத்தை விடவா அதுலாம் பெரிய இன்பம் ; அடப் போங்கப்பா !! எனக்கு இதுவே போதும் ;


வீழும் இருவர்க்கு இனிதே-வளி இடை
போழப் படாஅ முயக்கு.

அட , சொர்கத்தை விட என்ன பெரிய இன்பம் கிடைக்கப் போகுது ? அப்பிடி என்ன இருக்கு ? அவனும், அவளும் இறுக கட்டி அணைத்து , அதுவும் காற்று கூட போகும் இடைவெளி இல்லாமல் இறுகி கட்டி அணைத்து இருப்பதே அந்த இன்பம் ஆகும் ? அதற்கு முன் சொர்காமாவது ஒன்னாவது ..நாம கட்டிப்பிடி வைத்தியமே பார்ப்போம் !!


அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல
மறு உண்டோ, மாதர் முகத்து!.

அவன் அவளுடன் காதல் கொண்டிருப்பதைக் கண்ட அவனின் நண்பன், ரொம்ப மகிழ்ச்சி நண்பா ! உன் காதலி வெண்ணிலாவைப் போல இருக்கிறாள்,  அப்பிடி சொன்னத்தும் அவனுக்கு செம கோவம் வந்துருச்சு ; என்ன சொன்ன நீ ? அவ நிலா மாதிரியா இருக்கா ? நிலாவைப் பார்த்திருக்கியா நீ ?அதன் முகத்தில் ஏகப்பட்ட மருக்கள் (நிலவில் இருக்கும் மலைகள் இங்கிருத்து பார்க்கும் போதும் ) இருக்கும் ; அவளின் முகம் அப்பிடியா இருக்கு ?எந்த குற்றமும் இல்லாதா எந்த மருவும் இல்லாத மாசாற்ற அழகிய முகம் அது ; நிலவை அதனுடன் பொருத்திக் கூறாதே !! அப்பிடின்னு கோவமாச் சொல்லிட்டான் ;


பாலொடு தேன் கலந்தற்றே-பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்!.

அவன் அப்பிடிச் சொன்னதும் அவளுக்கு வெக்கமும் , மகிழ்ச்சியும் பொங்கி வருகிறது ; அதனால் அவனை இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுக்கிறாள் ;அதுவும் சாதா உம்மா இல்லை ; A french Kiss ; அந்த மயக்கத்திலேயே அவன் சொல்லுறான் , என்பா , இந்த இனிய பாலில் தேனைக் கலந்து கொடுத்தால் ஒரு இனிய சுவையான உணர்வு கிடைக்குமே அத விட சுவையானது அவள் முத்துப் பற்களுக்கு இடையில் இருந்து வரும் அவள் உமிழ் நீர் !!


வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல் 
அதற்கன்னள் நீங்கு மிடத்து.


காதல் கை கூடி விட்டது ; ஆனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்பிடி யாரும் அறியாமல் சிறிது நேரம் மட்டும் கூடி இருப்பது ; நீ இல்லாமல் இருப்பது ஒன்றும் சிறிய விசயம் இல்லையே ; உயர்ந்த பண்புகளை உடையவள் நீ ; அப்பிடிப்பட்ட உன்னோடு கூடும் போதுதான் நான் உயிர் உடலோடு கூடுவது போல உணர்கிறேன் ; உன்னை விட்டு விலகி இருக்கும் போது உயிர் உடலை விட்டு பிரிந்து இருப்பது போல நான் இருக்கிறேன் ; சீக்கரம் சொல்லு ?நாம் எப்போது திருமணம் செய்து கொண்டு உன்னைவிட்டு நான் விலகாதிருப்பது ?


உலகக் காதலர்க்கு காதலர்தின வாழ்த்துக்கள் !!

நன்றி
ஆசிப்

1 comment:

  1. Thanks a lot for sharing this Asif.
    Where can I get the Periyardasan urai?

    ReplyDelete