Monday, July 20, 2015

பாகுபலியும் சங்க கால அரசர்களின் போர் முறையும் - II

பாகுபலியும் சங்க கால அரசர்களின் போர் முறையும் - II

வணக்கம் நண்பர்களே !

நேற்று வெட்சித் திணையில் ஆநிரை கவர்தலைப்  பார்த்தோம். ஆநிரையை பறி கொடுத்தவனுக்கும் , கவர்ந்தவனுக்கும் ஒரே ஆசை இதன் மூலம் அந்த நாட்டினைப்  பிடிக்க வேண்டும் என்பதே. நாட்டை விரிவாக்கும் நோக்கோடு வேந்தன் போர் தொடுக்கும் செயல்களைத் தொல்காப்பியம் வஞ்சித்திணை எனக் குறிப்பிடுகிறது. இது அகத்திணையில் ஒன்றான முல்லைத் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது. வஞ்சித் திணை என்பது, அடங்காத மண்ணாசையினாலோ அல்லது தன்னை மதியாத பகையரசனின் செருக்கை அடக்கவோ ஒரு மன்னன் மற்றொருவன் மேல் போர் தொடுப்பது ஆகும். போர்தொடுத்துச் செல்பவர் வஞ்சிப் பூவை சூடிச்சென்றதால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது.

தொல்காப்பியத்திற்குப் பின் வந்த புறப் பொருள் வெண்பாமாலை ஆநிரை மீட்பதை மட்டுமே ஒரு தனித் திணையாக் கூறுகிறது. அதுவே கரந்தைத் திணை.தொல்காப்பியத்தில் கரந்தைத் திணை தனியே கிடையாது. ஆனாலும் கரந்தையும் வஞ்சியும் ஒன்றல்ல. கரந்தை = ஆநிரை மீட்பது மட்டுமே ; வஞ்சி = நிலம்/நாட்டினைப் பிடிப்பது. 

ஆநிரை கவர்வதையே பல்வேறு திட்டங்களுக்குப்பின் செய்வார்கள் எனும் போது நாட்டைப் பிடிக்க என்னென்ன செய்வார்கள். தொல்காப்பியர் வஞ்சிப் போர்க்களக் காட்சிகளைப் பதின்மூன்று துறைகளாகத் தருகிறார்.



"இயங்கு படை அரவம், எரி பரந்து எடுத்தல்,
வயங்கல் எய்திய பெருமையானும்,
கொடுத்தல் எய்திய கொடைமையானும்,
அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்,
மாராயம் பெற்ற நெடுமொழியானும்,
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்,
வரு விசைப் புனலைக் கற் சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்,
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்,
வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும்
,குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்,
அழி படை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ,
கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே"


1. ‘இயங்கு படை அரவம்’ – வலுவான பெரும் படை புறப்படலும் அதனால் எழும் ஓசையும்.

2. ‘எரி பரந்து எடுத்தல் ’ – பகைவரின் ஊர்களைத் தீ வைத்து எரித்தல்.

3.‘வயங்கல் எய்திய பெருமை’ – தனக்குத் துணையாக வரும் வேறு அரசர்களால் போரிடும் அரசன் பெருமை கொள்ளல்.

4.‘கொடுத்தல் எய்திய கொடைமை’ – வீரர்களுக்கு அரசன் பலவிதமான கொடைகளைத் தரல்.

5. ‘அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம்’ – பகைவரை வென்று அழித்த வெற்றியில் மகிழ்தல்.

6. ‘மாராயம் பெற்ற நெடுமொழி’ – அரசன் வீரர்களுக்குப் பட்டங்கள் தந்து சிறப்புச் செய்தல்.(நெடு மொழி – புகழ் மொழி மாராயம் – சிறப்பு )

7. ‘ பொருளின்று உய்த்த பேராண் பக்கம் ’ – பகைவரை ஒரு பொருட்டாக நினையாது அவர்களை அடக்கிய பேராண்மை பேசப்படுதல்.

8. வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை – வெள்ளத்தைத் தடுக்கும் கல்லணை போல தனி ஒருவனாக நின்று பகைப் படையைத் தடுத்தல்.

9. ‘பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை’ - படைஞர்களுக்குப் பேருணவு வழங்குதல்.
(பாரதப் போரில் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தவன் ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனும் தமிழ் மன்னன்’ என்று எழுதியுள்ளார்கள் )

10 . ‘வென்றோர் விளக்கம் ’- வெற்றி பெற்ற வீரர்கள் ஒளியுடன் கொண்டாடுதல்.(இதுவே வாண வேடிக்கை , ‘பட்டாசு’ வெடித்தலுக்கு தொன்மைச் சான்று.)

11. ‘தோற்றோர் தேய்வு ’- தோற்றவர்கள் களையிழந்து சோர்தல்.

12. ‘குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளை ’ – போர் வெற்றியைக் கொண்டாடும் ‘வள்ளைப் பாட்டு’ப் பாடுதல். (வள்ளைப் பாட்டு – உலக்கைப் பாட்டு ; உரல் பாட்டு .)

13. ‘அழிபடை தட்டோர் தழிஞ்சி’ – பகைவர் ஏவிய ஆயுதங்களைத் தடுத்ததால் புண்பட்டுப்போன வீரர்களைப் பார்த்து நலம் கேட்டல்.

இத்தனையும் ஒரு அரசனின் மன்னாசைக்காக !! இதுபோல உண்மையாகவே  நடந்தா? நமக்கு எப்பிடித் தெரியும் ? இருக்கவே இருக்கு புறநானூறு. இதற்கும் ஒரு புறநானூற்றுப் பாடலைப் பார்ப்போம்.

பாடல் 16 : செவ்வானும் சுடு நெருப்பும் ! பாடியவர் - பாண்டரங்க கண்ணனார் - பாடப்பட்டோன் - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி - திணை - வஞ்சி

"வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை உருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச் சென்று, அவர்
விளை வயல் கவர்பூட்டி,

மனை மரம் விறகு ஆகக்
கடி துறை நீர்க் களிறு படீஇ,
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற,
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை,

துணை வேண்டாச் செரு வென்றி,
புலவு வாள், புலர் சாந்தின்,
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றை, கனிப் பாகல்,

கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம ல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே"

இக்கிள்ளியிடத்தே ஆற்றல் மிக்க பெரும்படை ஒன்று இருந்தது. பகைவர் நாட்டை விரைந்து குதிரை மேற்சென்று வென்று அவர்தம் நெல் விளையும் கழனியைக் கொள்ளையிட்டு, வீடுகளை இடித்து எரியூட்டி, காவற் குளங்களில் யானைகளை இறக்கி அழித்து கொடும் போர்புரியும் திறம் மிகுந்தது அப்படை. அது சென்ற பகைவர் நாடு சுடு நெருப்பால் வெந்து செக்கர் வானைப் போல செந்தீ ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும். துணை வேண்டாது தனித்தேப் போரிடும் பெரிய படையினது வலுவும், புலால் நாற்றம் நாறும் கொலை வாளும், பூசிப் புலர்ந்த சாந்தும், முருகனைப் போன்ற வெஞ்சினமும் உடைய அச்சம் ஊட்டுந் தலைவனே , நின்னோடு மாறுபட்டவர் நாடு என்பதால் இவ்வாறு எரியூட்டி கொடுமை செய்கிறாயே. நின் குதிரைப் படையோடு சேர்ந்து களிற்றுப் படையும் சேர்ந்து அழித்தவனே !! ஆனாலும் நீ புலவர்பால் மட்டும் அன்பாய் இருக்கிறாய்.

அரசனின் போர் வீரத்தைப் புகழ்வது போல் புகழ்ந்து அவன் வன்மத்தையும் பாடுவதாக அமைந்த பாட்டு. இதில் வரும் எரியூட்டுதல்தான் தொல்காப்பியம் கூறும் "எரி பரந்து எடுத்தல்"

பாகுபலியில் வரும் இன்னொரு காட்சி. போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சட்டென்று காளகேயர்களின் கை ஓங்கிவிடும். மகிழ்மதியின்  வீரர்கள் மரணத்தைக் கண்டது போல பின் வாங்குவர். அப்போது பாகுபலி அவர்களை நிறுத்தி ஊக்கம் கொடுத்து தனியே முன்னேறிச் சென்று காளகேயர்களைத் தாக்கி அழிப்பான். அதுதான் "வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை". வெள்ளமென வரும் பகைவர்களை தனி ஒருவனாக நின்று பகைப் படையைத் தடுத்தல். இதுவும் நடந்தா? எனக் கேட்டால் மீண்டும் புறநானூறு வேண்டும்.

பாடல் 330: பாடியவர் - மதுரைக் கணக்காயனார் ; திணை - வஞ்சி

"வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
ஆழி அனையன் மாதோ என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே"

தன் வேந்தனின் படைமுனையானது, பகைவர் தாக்குதலால் உடைந்து போவது கண்டு, வலக்கையிலே வாள் ஏந்தியவனாக ஒரு வீரன் விரைந்து சென்று, தன்னைக் கடந்து பகைவர் எவரும் வாராதவாறு   தடுத்து நின்று பெரும் போரிட்டு காத்தனன். அலைஅடிக்கும் பெருங்கடலுக்குக் கரை போன்று விளங்குபவன் அவன். பாடிச் சென்றவர்களுக்கு வேண்டுவன வழங்குவது மட்டுமில்லாமல் அவற்றுக்கு இணையாக நிலங்களும் தந்து காக்கும் சிறந்த ஊரின் தலைவன். அதுமட்டுமின்றி தன் குடியின் பழம்பெருமை பேசி அவற்றுக்கு மேலும் வழங்கும் வன்மையை உடையவன் அவன். அவன்பால் நீயும் செல்க. !

அடுத்து உழிஞை, தும்பை, வாகை என வரிசையாகப் பார்ப்போம்.

நன்றி,
ஆசிப்







No comments:

Post a Comment