Wednesday, January 21, 2015

கற்பெனப்படுவது !!

வணக்கம் நண்பர்களே !!

புத்தாண்டு பிறந்ததும் வேலைப் பளு கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு; சுற்றுலாக் காலம் வேற ; அதுதான் பதிவு எழுத முடியாம போய்டுச்சு ; இப்ப வந்தாச்சு ஒரு புதுத் தலைப்போட...

வீட்டுல பசங்க, "அம்மா நேர்மைனா என்னாமானு" கேட்டா உடனே ஹமாம்னு சொல்லிடலாம் ; அதே பையனோ, பொண்ணோ "அம்மா கற்புனா என்னாமானு" கேட்டா என்ன சொல்லுவிங்க ? நம்மைச் சொல்லிக் குற்றம் இல்லை ;சங்க காலம் முதல் இருந்து வரும் ஒரு சொல்லை "பண்புப் பெயராக" மாற்றியதன் விளைவே இது; ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு இதே சொல் பெண்ணை அடிமைப்படுத்த ஆகச் சிறந்த சொல்லாக இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது ?

பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள் " படித்தால் முதல் அத்தியாயமே "கற்பு"தான் ... மிகத் தெளிவாக கற்பு என்பது பெண்ணை அடிமையாக்கும் சொல் என்பதைச் சொல்லி இருப்பார்..

சரி, இப்ப கேக்கலாம் கற்புனா என்னா? நம்ம இலக்கியங்கள் என்ன சொல்லுது ? பெண்ணடிமைத்தனத்துக்கு உதவி செய்கிறதா ? பெண்ணிற்கு மட்டும் உரியது என்று சொல்கிறதா ?

பாரதி "ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்" அப்பிடின்னு சொல்லுறாரு...சரி ? எதை ? எதைப் பொதுவில் வைப்பது ? இங்க நான் சொல்ல வருவது பாரதி காலத்துலேயே இதன் பொருள் மாறி விட்டது; பாரதியும் இத பண்புப் பெயராகத்தான் பார்க்கிறார்.. இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம் ;

நச்சினார்க்கினியர். தொல்காப்பிய உரையாசிரியர். தமிழ் மற்றும் வடமொழிப் புலமை கொண்டவர் ; ஒரே குறை ; வட மொழித் தாக்கம் மிகுந்தது இருக்கும் ; இவர் திருமணத்தைப் பற்றிக் கூறும்போது, திருமணம் முடிந்த முதல் நாள் தலைவியை சந்திரனுக்கும், இரண்டாம் நாள் கந்தர்வர்க்கும் (தேவர்கள்), மூன்றாம் நாள் அக்னி தேவனுக்கும் கொடுப்பார்களாம் ; இவர்களோடு கூடி இருந்த பின் நான்காம் நாள் அக்னி தேவன் தலைவியைத் தலைவனுக்குக் கொடுப்பனாம் ; so total family damage ; உரையாசிரியர் சொன்ன மாதிரி இருந்தா கற்பு மகாப் புனிதமானது :) அப்ப, உரையாசிரியர் காலத்துலையும் கற்பு என்பது வேறு ; Note : இன்றும் அய்யர் ஓதும் சம்ஸ்கிருத மந்திரம் இதனையேக் கூறுகிறது.. என்ன நமக்கு புரியாத மொழியில் சொல்வதால் நாம கேட்டுட்டு பேசாம இருக்கோம் :(( 

சரி, நம்ம வள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் ?? அறத்துப்பால், பொருட்பால் இதுலாம் எதுனா சொல்லி இருக்காரா ? ஒன்னும் சொல்லல ; ஆனா மனைவி எப்பிடி இருக்கனும்னு சொல்லுறாரு;

1. "மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் 
   வளத்தக்காள் வாழ்க்கைத் துணை."

 இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள். ஓகே ; budget போட்டு குடும்பம் நடத்துனும் ;

இதப் பாருங்க : ஒரு point இருக்கு இதுல :

2. "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்." 

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? சரி ; எதோ கொஞ்சம் match ஆகிற மாதிரி இருக்குல ; ஆனா நமக்கு இன்னும் "கற்புனா" என்னனு தெரியுனுமே ;

3. "தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள்,
 ‘பெய்’ என, பெய்யும் மழை."

  வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!  நம்ம கண்ணகி மாதிரி ; கணவனே கண் கண்ட தெய்வம் ; பிரச்சனை என்னான , இதப் படிச்சுட்டுதான் நம்ம அய்யா பெரியார் திருக்குறளில் பெண்ணடிமைக் கருத்துகள் இருக்குனு சொன்னார்.. உண்மை மாதிரித்தான் தெரியுது  கற்பின் பெயரால் பெண் அடிமைப் படுத்தப்படுகிறாள்..
உடனே வள்ளுவர் down down சொல்லிட்டுக் கிளம்பிடாதிங்க !! அவர் காலத்துல இப்பிடி நடைமுறை இருந்துருக்கு அதுனால இவர் எழுதி இருக்கிறார் ; அவ்வளவே !!

இப்ப எங்காதான் போய் "கற்பு" defination கண்டுபிடிக்கிறது?? இருக்கவே இருக்காரு நம்ம தமிழ் HOD Mr.தொல்காப்பியர் !! 2௦௦௦ வருசம் பின்னால போனாத்தான் நமக்கு உண்மை விளங்கும்..

சங்க காலத்துல என்ன பண்ணிட்டு இருந்தாங்க நம்ம மக்கள் ? ஆறு மாசம் போர் புரிந்தனர் ; அடுத்த ஆறு மாசம் காதல் புரிந்தனர் (ஒரே பெண்ணைத்தான்).. பெரும்பான்மையான திருமணங்கள் காதல் திருமணங்களே; தலைவன் , தலைவியைக் கண்டு, காதலில் விழுந்து
பெரிய போரட்டங்களுக்கு நடுவில் அவளை திருமணம் செய்வான் ; காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கதாவர் இருப்போரோ ?சங்க காலமாய் இருந்தாலும் காதல் ரகசியமாய் வைக்க வேண்டிய ஒன்று ; யாருக்கும் தெரியாமல் தலைவியை தோழி, தோழன் துணை கொண்டு இரவிலோ , பகலிலோ சந்தித்து காதலை வளர்த்து வந்தனர் ; இதுனால் இதன் பெயர் "களவு". 

களவின் முடிவு திருமணம் !! இரகசியாமாய் வளர்த்த காதல் ஊரார்க்குத் தெரியும் முன்போ/தெரிந்த பின்போ இருவரும் திருமணம் செய்து கொள்வர் ; இதுவே கற்பு எனப்படும் ; வள்ளுவரின் காமத்துப்பால் இரண்டு இயல்களைக் கொண்டுள்ளது ; களவியல் , கற்பியல் ; தொல்காப்பியமும் பொருளதிகாரித்தில் களவியல் , கற்பியல் என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது ;

களவு = திருமணத்திற்கு முன் தலைவன், தலைவி இடையேயான காதல் வாழ்க்கை ; 
கற்பு  = திருமணத்திற்கு பின் தலைவன், தலைவி இடையேயான திருமண வாழ்க்கை ; Thats All !!

சும்மா அடிச்சு விடாத ... Where is the proof ?? அதுதானே உங்க கேள்வி ? தொல்காப்பியம் தரும் தரவுகள் இதோ ;

தொல்காப்பியம் : பொருளதிகாரம் : கற்பியல்: செய்யுள் 1:

முதல் செய்யுளே கற்புனா என்னனு சொல்லிடுத்து

"கற்பு எனப்படுவது கரணமொடு புணர,
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை,
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப, கொள்வதுவே."

கரணம் = சடங்கு (திருமணச் சடங்கு ) ; இங்க நடக்குறது love cum arranged marriage ; காதல் இரு வீட்டிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரு வீட்டு சம்மதத்துடன் சடங்கோடு நடைபெறுவது ; இன்னொரு விசயம் இதுல என்னனா ,

கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை = இரண்டு பேரும் ஒத்த குலம் அல்லது திருமணம் செய்து கொள்ள தகுதி உடையவர்கள் ; இங்கு சாதி பற்றி பேசப் படவில்லை என்பது மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டியது ; கொடைக்கு உரி மரபினோர் = பெற்றோர்கள் ;

ஆக, கற்பு என்பது திருமணம் செய்து கொள்ள தகுதியான இருவர் அவர்தம் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் சடங்குகளோடு  சேர்வதே ; அதன் பின் அவர்கள் இணைந்தது வாழ்வதே...

காதலுக்கு வில்லன் இல்லனா எப்பிடி ? பெற்றோர்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை ? தலைவி என்ன செய்வாள் ? தலைவன் என்ன செய்ய்வான் ? நீங்க சம்மதிக்கலனா என்ன ? நாங்களா திருமணம் செய்து கொள்கிறோம் என்று தாமாகவே செய்து கொள்வர்; இதுவும் கற்புதான் ;

தொல்காப்பியம் : பொருளதிகாரம் : கற்பியல்: செய்யுள் 2:

"கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே,
புணர்ந்து உடன் போகிய காலையான."

கொடுப்போர் இன்றியும் = பெற்றோர் சம்மதம் இல்லமால் ; அவர்களும் இல்லாம ; கரணம் உண்டே = still திருமணச் சடங்கு உண்டு ; புணர்ந்து உடன் போகிய காலையான = தலைவி தலைவனுடன் சேர்ந்து உடன்போக்கு மேற்கொண்டால் ;

அது என்னையா உடன் போக்கு ? : தலைவனுக்கும், தலைவிக்கும் காதல் ; முதல்ல இரகசியமா இருந்தாது மெதுவா வெளியவருது ; தலைவி வீட்டுல காதலுக்கு ஒப்புதல் தரல ; அவளும் ரொம்ப போராடிப் பாக்குறா ;ஒண்ணும் நடக்குற மாதிரி தெரியல ; தலைவனும் வந்து பேசிப் பாக்குறான் ; பெண் வீட்டுல NO சொல்லிடராங்கா ; தலைவிக்கோ அவனை மறக்க முடியல ; இருவரும் சேர்ந்தது ஒரு முடிவுக்கு வருகிறார்கள் ; தலைவி தலைவனுடன் சேர்ந்தது வீட்டை விட்டு அவனுடன் சென்று விடுகிறாள் ;

இதுதான் உடன்போக்கு ; எவ்வளவு அழகான வார்த்தை ; இப்ப நாம எப்பிடி சொல்லுறோம் இத "ஓடிப் போய்டா" :((

சரி, அப்பிடி அவன் உடன் சென்று பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடக்கும் திருமணமும்  கற்புதான் !!

அது எல்லாம் சரிதான் !! கரணம் = சடங்கு ; அப்பவும் இதே மாதிரி மந்திரம் ஓதி, அம்மி மிதித்து, அனுஷ்காவப் (அருந்ததி) பார்த்துதான் திருமணம் நடந்துச்சா ? எதுக்காக இந்த சடங்கு ? அது தமிழ் பண்பாடா ??

அதுக்கும் பதில் சொல்லுறாரு Mr.தொல்.. ஊரெல்லாம் கூட்டி இந்த மாதிரி சடங்கு செய்யாம இருவர் மட்டுமே சேர்ந்து தெய்வம் சாட்சியாக நடைபெறும் திருமணத்திர்க்கு கந்தர்வ மணம் என்று பெயர் ; என்ன பிரச்சனைனா ? யாரும் சாட்சி இல்ல ; கொஞ்சம் நாள் இருந்துட்டு அப்புறம் நீ யாருனே எனக்குத் தெரியாது சொல்லிட்டு போக ஆரம்பிச்சுடாங்க ; அதுலாம் வராம இருக்கத்தான் இந்த சடங்கு வந்துச்சு ;

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம்' என்ப.

ஐயர் = பெரியவர் ; இப்ப இருக்க அய்யர் இல்ல ; அது கடைச் சங்க காலம் ; மக்கள் நால் வகை வருனமாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர் ; அரசனும் , அந்தணனும் கந்தர்வ மணம் என்ற பெயரில் நிறைய advantage எடுத்ததால் வந்ததே இது என்று கருதலாம்...

சடங்குன்னு சொன்னா போதுமா ? திருமணம் எப்பிடி நடந்துச்சு ? கொஞ்ச நால் முன்னால என்னோட முகநூல் பக்கத்துல "சங்க இலக்கியத்தில் ஒரு முதலிரவுப் பாடல்" அப்பிடின்னு ஒரு பதிவு போட்டு இருந்தேன் ;அந்தப் பாட்ட பார்த்தா போதும் ;

"மைப்பு அறப் புழுக்கின் – நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு – புரையோர்ப் பேணி
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக – தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கள்

சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து – கடவுள் பேணி
படு மண முழவொடு – பரூஉப் பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் – விதுப்புற்று

பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென் பூ வாகைப் – புன் புறக் கவட்டிலை
பழங் கன்று கறித்த பயம்பு – அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் – தலைப்பெயற்கு ஈன்ற

மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு – வெண் நூல் சூட்டி
தூஉடைப் பொலிந்து – மேவரத் துவன்றி
மழை பட்டன்ன, மணல் மலி பந்தர்"

மைப்பு அறப் புழுக்கின் – நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு – புரையோர்ப் பேணி

மைப்பு = கசடு ; வரையா வண்மை = வரம்பு இல்லாம; புரையோர் = உறவினர்கள் ;

புழுக்கல் அரிசி தான் இறைச்சிக்கு ஏற்றது; கசடு நீக்கிய இறைச்சி + வெண் சோற்றில் எள்-நெய்  ஊற்றி வரம்பு இல்லாம உறவினர்களுக்கு சோறு போட்டு.....




புள்ளுப் புணர்ந்து இனிய ஆக – தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, 

விசும்பு = வானம் ; திறந்த வெளியில் பந்தல் போட்டிருக்காங்க! விடிகாலையில் பறவைகளின் ஒலி; விடியலின் ஒளி..

திங்கள் – சகடம் மண்டிய, துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுள் பேணி

திங்கள்-சகடம் = நிலவு-உரோகிணி என்னும் விண்மீனுடன் கூடிய ஓரையில்.. (Constellation) திருமணத்துக்கு நல்ல நாள்; “நல்ல நாள்”-ன்னா என்ன? = எரி நட்சத்திரம் & அனல் இல்லா நாட்கள்; கடவுள் பேணி = கடவுளை வணங்கி…

படு மண முழவொடு, பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர், விதுப்புற்று
பூக்கணும் இமையார் ,நோக்குபு மறைய

மண முழவு = கல்யாண மேளம்; பரூஉப் பணை = பெரிய முரசு
எல்லாரும் வைச்ச கண் வாங்காமல் “அவளையே” பார்க்க

மென் பூ வாகைப், புன் புறக் கவட்டிலை
பழங் கன்று கறித்த, பயம்பு அமல் அறுகைத்

கவட்டிலை = கவர்த்த இலை (இரட்டைக் கொத்தாய், இலை)
அறுகை = கன்றுகள் மேய விட்டுக் கடித்த அறுகம் புல்!

தழங்கு குரல் வானின், தலைப் பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன, மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு , வெண் நூல் சூட்டி

பருவ காலத்தின் முதல் மழை; அப்போ முளைச்ச மஞ்சள் கிழங்கு!
வாகை இலை + அறுகம் புல் + மஞ்சள் கிழங்கு
= மூனும், வெள்ளை நூலிலே, பூவோடு ஒன்னாக் கட்டி..  (பந்தக்கால்)


தூஉடைப் பொலிந்து, மேவரத் துவன்றி
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்
இழை அணி சிறப்பின்…

தூய ஆடை உடுத்தி, மணல் பரப்பிய பந்தலிலே… மழை படபட -ன்னு கொட்டுவது போல் கெட்டி மேள ஒலி
 இழை = Fibre; நூல் போன்ற அணிகலன் (பனை ஓலையால் செய்த அணிகலன் )
 இழை அணி சிறப்பின் = சிறப்பான “அணிவிப்பு”.. திருமண நாள் அன்றைக்கு மட்டும் அணிவிக்கப்பட்ட ஒரு மங்கல அணி; வாழ்நாள் முழுவதும் இல்லை

அவ்ளோ தான் திருமணம்; அக்னி  எல்லாம் ஒன்னுமில்ல; ! புரோகிதர் இல்லை!

so, தொல்காப்பியம் சொன்ன மாதிரிதான் பழந்தமிழர் திருமணம் நடந்து இருக்கு ; திருமண வாழ்வும் (கற்பு ) நடந்து இருக்கு ;

அதுவேதான் இன்னிக்கு வேற பொருளில் பெண்ணுக்கான ஒரு பண்பா ஆகிடுச்சு !! இனிமே யாரவது பெண்ணியம் பேசுறேன்னு வந்து கற்பு, கற்ப்புக்கரசினு பேசினா வேலையைப் பாத்துட்டு போனு சொல்லிடுங்க !!

ஆணும், பெண்ணும் திருமணம் புரிந்து மனம் ஒன்றி அன்பும் அறனுமே இல்வாழ்வின் பண்பும் பயனும் எனப் புரிந்து வாழ்வதே கற்பு ; அது பெண்ணின் உடலில் இல்லை ..நம் இலக்கியங்கள் அவ்வாறு கூறவும் இல்லை ; 

உங்கள் கருத்துக்களை commentடி விட்டுச் செல்லாம்..

நன்றி !!

உசாத்துணை : 
தொல்காப்பியம் - பாவலரேறு ச.பாலசுந்தரம் உரை - தமிழ் இணையக் கல்விக்கழகம் 
பெண் ஏன் அடிமையானாள் - தந்தைப் பெரியார்
தமிழ்க்காதல் - வ.சு.ப. மாணிக்கம் 
dosa365 - கண்ணபிரான் ரவி சங்கர் (KRS)

No comments:

Post a Comment