Monday, January 26, 2015

ஊரு சனம் தூங்கிடுச்சு - பாவி மனம் தூங்கலையே

வணக்கம் நண்பர்களே !!

மெல்லத் திறந்தது கதவு படத்துல வர "ஊரு சனம் தூங்கிடுச்சு" பாட்டுக் கேட்டுருக்கிங்களா ? அந்தப் பாட்டுதான் இன்னிக்கு நாம பாடு பொருள் :) முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை அப்பிடின்னு ஐந்திணைகள் இருக்கு ; பாலை = பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ; தலைவன் பக்கத்துல இல்ல, போருக்கோ, படிக்கவோ, தூது சொல்லவோ போயிருக்கான் ; இங்க அம்மிணிக்கு அவன் இல்லாம இருக்க முடியல ; எப்ப வருவன்னு தெரியல :( இரவு படுத்தா தூங்க முடியல ; அவனுடன் கூடி இருந்த நினைவுகள்தான் கண்ணை மூடினா ; ஆனா பாருங்க ஊர்ல எல்லாரும் நல்லாத் தூங்கறாங்க :)) இது போதுமே ; ஏண்டா நான் ஒருத்தி தூங்க முடியாம கிடக்கேன் இங்க நீங்கலாம் நல்லாத் தூங்ககிரிகளானு கடுப்பு ஆகுறா ;

அந்தக் கடுப்புல பாடுற மாதிரி வரும் குறுந்தொகையைப் பாடல்களைப் பார்ப்போம்.

"மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.. "

தலைவன் வரை பொருளுக்காகப் பிரிந்த காலத்தில், அவன் விரைந்து வாராமைபற்றிக் கவலையுற்ற தோழியை நோக்கி. “என் துன்பத்தை அறியாமல் தூங்குகின்ற இவ்வூர் மக்களை யான் யாது செய்வேன்?” என்று தலைவி சினந்து கூறியதாக ஔவையாரால் பாடப்பட்டது.

பாட்டை கடைசில இருந்து படிங்க :

அலமரல் அசை வளி அலைப்ப = சுழலுதலை உடைய, அசைந்து வருகின்ற தென்றல் காற்று 
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே = எனது வருந்துதலை உடைய காம நோயை உணர்ந்து கொள்ளாமல் கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளாரை...

அதாவது, நல்ல தென்றல் காற்று வீசுது , அந்த காற்று தலைவனை பிரிவை/நினைவை அதிகமாக்குது... ஆனா ஊருல இருக்குரவங்கலாம் சந்தோசமா தூங்குறாங்க ; அவங்களாம் சேர்ந்துதான் இருக்காங்க போல ; நம்ம அம்மிணி கடுப்பில் என்ன செய்யப் போகுது தெரியுமா ?

மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல் = என் உடம்பைக் கொண்டு முட்டுவேன் ; ஒரு கம்பு கிடைச்சா அத வைச்சு தாக்குவேன் 
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு = ஒரு தலைக்கீட்டை மேற்கொண்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல் = ஆஅ ஒல்லென - ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாக, கூவுவேன்..

அவங்கள தூங்க விடாம முட்டுவேன் , அடிப்பேன் இல்லனா ஆ என்று கத்தி கூச்சலிட்டு அவங்கள எழுப்பி விடுவேன் ; ஐயோ எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலையே...

இதுதான் பாட்டு ; நம்ம சினிமாப் பாட்டு  இதுல இருந்துத்தான் வந்துச்சு :)


இத விட நல்ல இன்னொரு பாட்டு ; இதப் பாருங்க

"கேட்டிசின் வாழி தோழி யல்கற்      
பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய     
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்     
தமளி தைவந் தனனே குவளை 
வண்டுபடு மலரிற் சா அய்த்      
தமியேன் மன்ற வளியேன் யானே, "

தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியது ஆற்றாமைக் காரணத்தைத் தோழி வினாவத் தலைவி, “இயல்பாக ஆற்றியிருக்கும் நான் தலைவனை கூடியாதாகக் கண்ட பொய்க் கனாவினால் வருத்தமுற்றதாகக் கூறியது போல கச்சிப்பேட்டு நன்னாகையார் என்ற புலவரால் பாடப்பட்டது.

தலைவன் பொருள் தேடும் பொருட்டு தலைவியைப் பிரிந்து Onsite :) சென்று விட்டான். அவளால் அந்த பிரிவைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை ; கண்ணை மூடித் தூங்கினால் அவனுடன் கூடிய நினைவுகள் கனவில் வருகின்றன ; அந்தக் கனவுகளும் மெய் போலவே இருக்கின்றன ; அப்பிடி ஒரு கனவு அவனுடன் கூடியதை போலவே மயக்கத்தை உண்டாக்க அவன்தான் அருகில் இருக்கிறான் என்று எண்ணி படுக்கையைத் தடவிப் பார்த்தேன் ;

தலைவி மட்டுமே பிரிவை நினைத்து வருந்துவது இல்லை ; தலைவன் கூற்றும் உண்டு ; இவளை விட்டு வேறு எங்கும் போய்த் தேடும் பொருள் ஏதும் எனக்கு வேண்டாம் எனக் கூறும் ஒரு பாடல் இதோ..

"மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே      
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்     
பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்     
கல்கெழு கானவர் நல்குறு மகளே"

 கீழ இருந்தது படிங்க :

கல்கெழு கானவர் நல்குறு மகளே = கற்கள் பொருந்திய காட்டையுடையவர் பெற்ற மகளே ; தலைவியின் தந்தை கிரானைட் இருக்குற காடு வைச்சுருக்கார் போல :) ; அப்பிடி அல்ல, "man from forest with mountains"=குறிஞ்சி நிலத் தலைவனின் மகள் ;

அரும்பிய சுணங்கின் அம் பகடு இள முலை => அரும்பிய சுணங்கின் = தேமலை உடைய ; அம் பகடு = அழகான பெருமையுடைய ;

பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் = பெரிய தோளையும் நுண்ணிதாகிய இடையையும் உடைய

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே = எதுக்கு மருந்து ? என் காம நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் ; இனிய வாழ்விற்கு தேவைப்படும் செல்வமாகவும் இருப்பவள் ;

இப்ப மறுபடியும் பாட்டைப் படிங்க :

செல்வம் தேட இவளைப் பிரிந்து onsite போகச் சொல்லுறியே என்னோட நெஞ்சே, கேட்டுக்க , அவ குறிஞ்சி நிலத் தலைவனின் மகள் ; மஞ்சள் புள்ளிகள் உடையத் தேமலுடன் கூடிய இள முலையையும் , பெரியத் தோளையும் ,சிறுத்த இடையயும்  கொண்டவள் ; நான் காம நோய்வாய்ப் படும்போதல்லாம் மருந்தாய் இருந்து அதை தீர்ப்பவள் ; என் செல்வமாய் இருப்பவள் ; அவளைப் பிரிந்து போய் சேர்க்கும் வேறு செல்வம் வேறு ஏதும் இல்லை ;

ஆக, பாலை = பிரிவு ; அதிலும் பல சுவையான பாடல்கள் இருக்கு சங்க இலக்கியத்துல,, வெறும் சோகம் மட்டும் இல்லை ; மீண்டும் சந்திப்போம்..

நன்றி !!

No comments:

Post a Comment