Tuesday, January 6, 2015

முக்கூடற் பள்ளு - III - நீயா - நானா ?

வணக்கம் நண்பர்களே !!

முக்கூடற் பள்ளு என்னும் சிற்றிலக்கியம் தரும் பேரின்பத்தில் இருந்து இன்னும் வெளியேற முடியவில்லை ; கதை மாந்தர்களின் அறிமுகங்களைப் பார்த்தோம் ; இனி அடுத்து வருவனவற்றைப் பார்ப்போம் ; இங்கு அழகன் , மூத்த பள்ளி, இளைய பள்ளி அவர்களது குடிப் பெருமையைக் கூறுகிறனர் ; அதில் ஒரு சில பாடல்களைப் பார்த்துவிட்டுச் செல்வோம் ;

பள்ளன் தன் பெருமை கூறல்:

ஒருபோ தழகர்தாளைக்
கருதார் மனத்தைவன்பால் 
      உழப்பார்க்குந் தரிசென்று
      கொழுப்பாய்ச்சுவேன்
சுருதிஎண் ணெழுத்துண்மைப் 
பெரியநம் பியைக்கேளாத்
      துட்டர்செவி புற்றெனவே
      கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதிநூற்றெட்டும்
மருவி வலம்செய்யார் தம்
      பேய்க்காலை வடம்பூட்டி
      ஏர்க்கால் சேர்ப்பேன்
திருவாய் மொழிகல்லாரை
இருகால்மா டுகளாக்கித் 
      தீத்தீயென் றுழக்கொலால்
      சாத்துவே னாண்டே.”

பள்ளன் அழகர் அபிமானி. அழகர் அபிமானிகளாக இல்லாதவரை எவ்விதம் தண்டிப்பேன் என்பதற்குப் பாட்டுச் சொல்கிறான்... கொஞ்சம் பயமாத்தான் இருக்கு..

ஒப்பற்ற செந்தாமரைமலர் போன்ற அழகரின் திருவடிகளை நினையாதவர் மனத்தை முரம்பு நிலத்தில் உழுவதற்குக் காணப்படுகின்ற தரிசு நிலமென்று கருதிக் கொழுவினைப் பாய்ச்சி உழுவேன்; அரிய நூல்களிலுள்ள மதிப்பிற்கு உரிய இலக்கிய உண்மையை எங்கள் பெரிய நம்பியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாத தீயோருடைய செவிகளைத் தரிசு நிலத்திலுள்ள புற்றுகளை யான் வெட்டுவது போலவே மண்வெட்டிக்கொட்டால் வெட்டுவேன்; பெருமாளுடைய நூற்றெட்டுத் திருப்பதிகளையும், மனத்தில் மருவி வலஞ்சுற்றி வராதவருடைய பேய்த்தன்மை வாய்ந்த கால்களை வடம்பூட்டி ஏர்க்காலிற் சேர்ப்பேன்; திருவாய்மொழியைப் படியாதவரை இரண்டு கால் மாடுகளாகக்கொண்டு தீத்தீ யென்று அதட்டித் தார்க் கோலால் சாத்துவேன் நயினாரே..

மூத்த பள்ளி தம் பெருமை கூறல்:

உத்தர பாக மான
சித்திர நதிக்குத் தென்பால்
ஓடும் பொருநையுடன் 
கூடும் போதே
அத்தனை காலமுந் தொட்டு
இத்தனை காலமுங் கண்டு
அடியடி வாழையாய்நான்
குடியில் வந்தேன்
பத்திலே பதினொன் றாக
வைத்தா னில்லைக் குடும்பன்
பண்டே சரடுகட்டிக் 
கொண்டான் என்னை
முத்தமிழ் நாட் டழகர்
கொத்தடி யானுக் கான
முக்கூடல் மூத்தபள்ளி
நானே யாண்டே.”

இந்த பழத்துல ஊசி ஏத்துறது தெரியுமா ? அதத்தான் செய்யுறா மூத்த பள்ளி ;

வடக்கே சித்தரா நதின்னு ஒரு சிற்றாறு ஓடுது ; அது தெக்கால இருக்க பொருநை நதிகூட கலக்குது. அது இன்னிக்கு, நேத்து நடக்குறது இல்ல ; காலங் காலமா நடக்குறது ; அந்தக் காலத்துல இருந்தது வர நல்ல குடும்பத்துல வாழையடி வாழையா வந்தவ நான் ; என்னை அழகன் பத்தோடு பதினொன்னா கூட்டிட்டு வந்து வைச்சுகல , என்னை முதலிலேயே தாலிகட்டித் தன் மனைவியாகக் கொண்டான் ; முத்தமிழ் நாடாகிய இந்தத் திருமுக்கூடலி லெழுந்தருளி யிருக்கும் அழகருக்குக் கொத்தடியானாகிய என் தலைவனுக்குப் பொருத்தமான முக்கூடல் மூத்தபள்ளி நானேஆண்டே ;



இளைய பள்ளி::

மூத்த பள்ளி தன் பெருமை கூறியதும் இளைய பள்ளி சும்மா இருப்பாளா ?

"செஞ்சிக்குங் கூடலுக்குந் 
தஞ்சைக்கும் ஆணை செல்லும்
      செங்கோல் வடமலேந்த்ரன்
      எங்கள் ஊரே
நெஞ்சிற் குறித்த குளம்
அஞ்சுக்குஞ் சக்கரக் *கால்
      நிலையிட்ட நாளிற்பண்ணைத்
      தலையிட் டேன்நான்
கஞ்சிக்குந் தன்னிலே தான்
கெஞ்சிப் புகுந் தவளல்ல
      கண்டாசைப் பட்டேகொள்ளும்
      பெண்டா னவள்
மஞ்சிற் கறுப் பழகர்
தஞ்சைப்பள் ளனுக் கேற்ற
      மருதூர் இளையபள்ளி
      நானே யாண்டே."

மதுரை யென்ன தஞ்சை யென்ன செஞ்சிக் கோட்டை யென்ன அங்கெல்லாந் தனது ஆணை செல்லும்படியான செங்கோல் முறைவழுவாத வடமைலையப்பப் பிள்ளையன் என் ஊர்தான். அவர் மனத்திற் குறிப்பிட்டுத் தோண்டிய ஐந்து குளத்திற்கும் திருவாழிக்கல் நட்டுக் கால்கொண்ட நாளிலேயே நான் இந்தப் பண்ணையில் வந்து சேர்ந்தேன். நான் மூத்தவ மாதிரி கஞ்சிக்கு ஆசைப்பட்டு கெஞ்சிட்டு வந்தவ இல்ல ; அவன் என்னப் பாத்து ஆசைப்பட்டு காதலித்து

மூத்த பள்ளி நகர் வளம் கூறல் :

இளையவ சீண்டி விட மூத்தவளுக்கு கோவம் வந்து அவ ஊருப் பெருமையைச் சொல்லுறா ;

"கொண்டல் கோபுரம் அண்டையிற் கூடும்
      கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டந் தண்டலை நாடும்
      கனக முன்றில் அனம்விளை யாடும்
விண்ட பூமது வண்டலிட் டோடும்
      வெயில்வெய் யோன்பொன் னெயில்வழிதேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
      அழகர் முக்கூடல் ஊரெங்கள் ஊரே."

கொண்டல்= மேகம் ; அவ ஊர்ல இருக்க கோபுரங்கள் மேகத்தைத் தொடுமம்மா ; அந்த கோபுரத்து மேல இருக்க கொடிகள் அந்த மேகத்துக்கு மேல போய் ஆடுமாம் ; தண்டலை = சோலை ; ஊர்ல இருக்க சோலைகளில் இருக்கும் மரங்கள் மேகத்தைத் தொடும் அளவு வளர்ந்தது அதற்கும் மேல உள்ள மேலுலகத்தை அடைய விரும்பி மேலும் வளரும் ; அந்தச் சோலையில் அன்னப் பறவைகள் சேவலும் , பேடையுமாக விளையாடும் ; இதழ் விரிந்தத பூக்களில் இருந்தது தேன் வழிந்தோடும் ; வெயில் வீசுகின்ற கதிரவன் அங்கு உள்ள பொன்வண்ணமான கோட்டைகளில் அம்பு எய்ய அமைத்துள்ள துளை வழியே நுழைந்து போவதற்கு வழி தேடிக் கொண்டிருக்கும்; தேவர்களுக்கெல்லாந் தலைவரும், செண்டு என்ற படைக்கலக் கருவியைக் கைப்பிடித்த அழகருமாகிய முக்கூடலழகரின் திருமுக்கூடல் ஊர் எங்கள் ஊராகும்...

உடனே இளைய பள்ளி, இது என்ன பிரமாதம் , எங்க ஊரு எப்பிடினானு ஆரம்பிக்கிறா

"சங்கம் மேடைகள் எங்கும் உலாவும்
      தரங்க மீன்பொன் னரங்கிடை தாவும்
திங்கள் சோலை மரங்களை ராவும்
      தெருக்கள் தோறும் மருக்களைத் தூவும் 
பொங்க ரூடிளம் பைங்கிளி மேவும்
      பூவை மாடப் புறாவினங் கூவும்
வங்க வாரிதி வெங்கடு உண்ட
      மருதீசர் மருதூ ரெங்கள் ஊரே."

சங்குகள் மேடைகள் முதலிய எல்லா இடங்களிலும் உலாவித் திரியும்; நீரில் கொந்தளிக்கின்ற அலைகளிலுள்ள மீன்கள் அழகிய பென்னரங்கங்களிலே தாவிப் பாயும்; நிலாவானது சோலையிலுள்ள மரங்களை அராவிக்கொண்டு செல்லும்; அத்தகைய உயர்ந்த சோலைகள் தெருக்கள் தோறும் மருவாகிய பூந்தாதுகளைத் தூவும்; பொங்கர் எனப்படும் சோலைகளினூடே பச்சைக் கிளிகள் துணையுடன் அமர்ந்திருக்கும்; அதைக் கண்ட நாகணவாய்ப்புட்களும்
மாடப் புறாக்களும் பிரிந்துசென்ற தங்கள் துணைப் பறவையைக் கூவும்; மரக்கலஞ் செல்லுங் கடலில் தோன்றிய வெப்பமான நஞ்சினையுண்டு
திருமால் முதலியவர்களைக் காத்த மருதீசருடைய திருமருதூர் எங்கள் ஊராகும்;

சும்மா விடுவாளா மூத்தவ !!

"கறைபட் டுள்ளது வெண்கலைத் திங்கள்
      கடம்பட் டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட் டுள்ளது விண்ணெழும் புள்ளு
      திரிபட் டுள்ளது நெய்படுந் தீபம்
குறைபட் டுள்ளது கம்மியர் அம்மி
      குழைபட் டுள்ளது வல்லியங் கொம்பு
மறைபட் டுள்ளது அரும்பொருட் செய்யுள்
      வளமை ஆசூர் வடகரை நாடே."

வடகரையில் உள்ள, வளம் மிக்க ஆசூர் நாடு என் நாடு அது, பெருமை பெற்றது. அந்த நாட்டில் கறை என்பதைத் திங்களில் மட்டுமே காணலாம்.
கடம் பட்டிருப்பது = கட்டப்பட்டிருப்பது, மதங் கொண்ட யானை மட்டுமே. சிறைப்பட்டவை பறவைகள் மட்டுமே. திரிக்கப்பட்டிருப்பது நெய் விளக்கு
ஏற்றுவதற்காகத் திரிக்கப்பட்ட திரி மட்டுமே, குறைப்பட்டிருப்பது கொத்தப்படுவதால் குறைபட்ட கம்மாளர்களின் அம்மி மட்டுமே.
குழைத்திருப்பது பூங்கொடிகளும் பூங்கொத்துக்களும் மட்டுமே, மறைக்கப் பட்டிருப்பது உயர் செய்யுள்களின் பொருள் மட்டுமே. இவையல்லால், பிற குறைகள் ஏதுமில்லா நாடு எங்கள் நாடு என்கிறாள் மூத்த பள்ளி... !!



அருமை , அருமைனு நாம சொல்லும் போதே இளைய பள்ளி மறுபடியும் ஆரம்பிக்குறா ;

"காயக் கண்டது சூரிய காந்தி
      கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
      மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்குலைச் செந்நெல்
      தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடுஞ் சந்தனம்
      சீவல மங்கைத் தென்கரை நாடே."

தனது நாடான சீவல மங்கைத் தென்கரை நாட்டில் சூரியன் மட்டுமே காய்வான், கட்டித் தயிர் மட்டுமே மத்தால் கடையப்பட்டுக் கலங்கும்.
அழிந்து போவது நாழிகைகளும் கிழமைகளுமே, சுழன்று வருவது வான்மழை பொழிந்த வெள்ளம் மட்டுமே, சுமை தாங்காமல் சாய்ந்தது நெற்கதிர்
மட்டுமே, தவம் செய்வோர் மனம் மாட்டுமே ஆசைகள் ஒடுங்கி இருப்பது, தேய்ந்து போவது உரைக்கப்படும் சந்தனம் மட்டுமே என்கிறாள்..

இவ்வாறே தமிழ் பாடி விளையாடுகிறார்கள் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும். அது பாட்டுக்கு ஒரு 25 பாட்டு இது மாதிரியே போகுது ;

நாம இந்த விளையாட்டை இதோட நிறுத்திட்டு அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கலாம் ;

நன்றி
ஆசிப் 

1 comment:

  1. Harrah's Cherokee Casino opens on casino floor, Cherokee
    Cherokee Casino Resort & Spa announced on Tuesday it 제주도 출장안마 is 전라남도 출장안마 opening the Harrah's Cherokee Casino 안동 출장샵 Resort & Spa. The 부산광역 출장샵 property, which is owned 광주광역 출장마사지 by

    ReplyDelete