Saturday, April 18, 2015

ஓ காதல் கண்ணகி !!

வணக்கம் நண்பர்களே !!

நேத்து ஓ காதல் கண்மணி பார்த்தது முதல் ஒரே காதல் mood. அதே பீலிங்ஸ்லேயே ஆபீஸ் போனா என்னத்த வேலை ஓடும் ?
நான் பாட்டுக்கு சிலப்பதிகாரம் படிக்க ஆரம்பித்துவிட்டேன். சிலம்போட ஆரம்பமே கோவலன், கண்ணகி திருமணம்தான். அதுக்கு அடுத்த அதிகாரத்தைத்தான் இங்க பகிரப் போகிறேன். அதிகாரத்தோட பேரு "மனையறம் படுத்த காதை". அதாவது நாம இப்ப கோவலன், கண்ணகி முதல் இரவில் என்ன நடந்துச்சுன்னு பாக்கப் போறோம். என்னது first night சீனான்னு ஆர்வமாகிட்டிங்களா? இளங்கோ அடிகள் சமணத் துறவி. அதுனால நீங்க எதிர்பார்க்குறது இங்க இருக்காது :). பின்ன என்ன "வா வா பக்கம் வா, பக்கம் வர வெட்கமா " பாட்டையா பாடி இருப்பாரு? நீ போங்கு ஆட்டம் ஆடுறனு நினைச்சு கோவபட்டுறாதிங்க. அழகன் படத்துல மம்முட்டி பானுப்ப்ரியாவுக்கு பாரதிதாசனோடகுடும்ப விளக்குல வர ஒரு கவிதை மாதிரி ஒண்ணு எழுதி பாடி காமிப்பாரே (சாதி மல்லி பூச்சரமே) கிட்டத்தட்ட் அந்த மாதிரி ஒரு காட்சிதான் இப்ப..


ஒரு சின்ன முன்னுரை..ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. தனிக் குடித்தனம் வைச்சுட்டாங்க. ஒரு தனி மாளிகை,கண்ணகிக்கு உதவியாகப் பனிப் பெண்கள் பலர். அதுக்கு பேரு இன்ப மாளிகை :). அது ஒரு இரண்டு அடுக்கு மாளிகை; அதுக்கும் மேல ஒரு தளம் (open Terrace). நிலாக் காலங்களில் பொழுது போக்க அருமையான இடம் அது; இரண்டு பேரும் சந்தோசாமா இருக்குறாங்க அங்க.

சரி, மேட்டர்க்கு (என்னது ???) வருவோம். கோவலன் அருகில் இருக்கும் கண்ணகியைப் பார்க்கிறான். இவள்தான் என் கண்மணி எனத் தோன்றுகிறது அவனுக்கு. அவளின் நாணத்தைப் போக்க வேண்டும். என்ன பண்ணலாம் ? சரி மானே, தேனேனு கவிதை சொல்லலாம் அவள் அழகைக் கொண்டுனு முடிவு செய்றான்.

குழவித் திங்கள் இமையவர் ஏத்த,
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னொடு பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகு என

குழவித் திங்கள் = குழந்தை நிலா (பிறை நிலா) ; இமையவர் = இமய மலையின் மீது இருக்கும் சிவன் ;

இரவுப் பொழுது. அறைக்குள் ஒளி குறைவாத்தான் இருக்கு. சின்ன விளக்கு மட்டுமே இருக்குது அங்க. உள்ளே வரும் கண்ணகியைப் பார்க்கிறான். முதலில் அவள் நெற்றியைப் பார்க்கிறான். சிவனின் சடையில் அழகாகப் பொலிந்து இருக்கும் நிலா நிச்சயம் உன்னோடதான் பிறந்து இருக்க முடியும் என எண்ணி அவன் அந்த பிறை நிலவை உன் நெற்றியாகத் தந்தான். அதாவது நிலா, பாற்கடலில் திருமகளான (கண்ணகி) உன்னோடு கூடப் பிறந்தது. ஆகவே, சிவன் தனது பிறை நிலாவை உன்னுடைய நெற்றியாகக் கொடுத்துவிட்டான்.

அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டாகலின்
உருவு இலன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவமாக ஈக்க

அடையார் முனை= போர் முனை ; உருவு இலன் = உருவம் இல்லாதவன். ;

நெத்தியைப் பாத்தானா, அடுத்து புருவம். எல்லா கவிஞரும் சொன்னதுதான். புருவம் வில் மாதிரி இருக்குனு சொல்லுறான். அதக் கொஞ்சம் ரொமாண்டிக்கா சொல்லுறான். போரில் கலந்துகொள்ளும் வீரர்களுக்குப் படைக்கருவிள் வேண்டும். என்னோடு காதல் போர் செய்ய வரும் உனக்குத் தன்னுடைய பெரிய கரும்பு வில்லை இரண்டு கருத்த புருவங்களாகச் செய்து கொடுத்தான் உருவம் இல்லாத மன்மதன். அது என்ன உருவம் இல்லாத மன்மதன் ? பழைய கதைதான். சிவன் கோவப்பட்டு மன்மதனை
எரித்து விடுகிறார். ரதியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவள் மட்டும் கானும்  மாறும் மற்றவர் கண்ணிருக்கு தெரியாமல் இருக்குமாறு ஒரு உருவம் கொடுக்கிறார் சிவன்.அந்த மன்மதனைத்தான் உருவம் இல்லாத மன்மதன் எனச் சொல்ல்கிறார்.


மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படை நினக்கு அளிக்க அதனை நினக்கு இடையென

மூவா மருந்து = அமுதம் ;

புருவத்துக்கு அப்புறம் கண்ணைப் பார்ப்பான்னு நினைப்பிங்க ; அவன் கொஞ்சம் வேகமா கீழ வந்தது இடுப்பப் பாக்குறான். (கெட்ட பையன் சார்)..
இந்த தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த கதை தெரியும்ல. அப்பிடி பண்ணும் போது அந்த அமுதம் வருவதற்கு முன்னால பல வேறு பொருட்கள் வந்தனவாம். அப்பிடி வந்து இந்திரனுக்கு கிடைத்தது வச்சிரம் எனும் ஆயுதம். அதோட கைப் பிடி சிறுத்திருக்கிறது.
அத இந்திரன் கண்ணகிக்கு கொடுத்துவிட்டான். அதை அவள் மெலிந்த இடையாகச் செய்துகொண்டு விட்டாள். (உஸ்ஸ்ஸ்.. சின்ன இடை, அதைத்தான் சுத்தி சுத்தி எழுதிருக்கான். :))) )


அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்
இறு முறை காணும் இயல்பினின் அன்றே
அம்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது

அறுமுக ஒருவன் = ஆறுமுகன் / முருகன் ; இறுமுறை காணும் = இறுதி பண்ணிப் பார்க்க (முடித்து கட்டிவிடப் பார்க்கும் )

இடையைப் பார்த்தவன் கொஞ்சம் மேல பார்க்குறான். இருங்க இருங்க. அவன் இப்பத்தான் கண்ணைப் பார்க்கிறான்.

இந்த ஆறுமுகன் இருக்கானே அவனுக்கு என் மேல என்ன கோவமோத் தெரியல. ஆறு முகம் = 12 கண்கள். ஆனா ஒன்றில் கூட அவனுக்கு என் துன்பம் தெரியல ; என்ன துன்பம் கோவலனுக்கு ?? முருகன் அவனுடைய அழகிய சுடர் மிகுந்த நெடுவேலை இரண்டாக்கி ஒன்றை கண்ணகியின் குளிர்ச்சியான இரண்டு கண்களாக மாறும்படி செய்துவிட்டான். இப்போது அந்த வேல் போன்ற உன் கண்கள் என்னைக் குத்திக் கொல்கின்றன..


மா இரும் பீலி மணிநிற மஞ்சை நின்
சாயல் குடைந்து தண்காண் அடையவும்
அன்னம் நன்னுதல் மென் நடை கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்

மா இரும் பீலி மணிநிற மஞ்சை = கருத்த பெரிய தோகையையும் நீலமணி போன்ற நிறத்தையும் உடைய மயில்

நீல நிற மயில் ஒன்று தன் பெரிய கருத்த தோகையை விரித்து ஆடும் போது எப்பிடி இருக்கும் ? ரொம்ப அழகா இருக்கும்ல.. அப்பிடிப்பட்ட மயில்களாம்
உன் அழகிற்கு முன் தோற்று காட்டிற்குள் ஓடிப் போய் விட்டன. மயில்கள் மட்டுமில்லை இந்த அன்னப் பறவைகள் நீ நடப்பதைப் பார்த்து விட்டு உன்னோட போட்டியிடமுடியாது என்று நல்ல நீரை உடைய வயல்களில் நிறைந்திருக்கும் மலர்களுக்கு நடுவே சென்று பதுங்கிக்கொண்டன.


அளிய தாமே சிறு பசும் கிளியே,
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்
மடநடை நின் மலர்க்கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின

இந்த மயில்கள், அன்னப் பறவைகள் இதுக கூட பராவாயில்லை. ஆனா இந்த பச்சைக் கிளிகள்தான் ரொம்பப் பாவம். குழலும் யாழும் அமுதமும்
சேர்ந்து குழைத்த உன்னுடைய மழலைப் பேச்சுக்குமுன்னால் அந்தக் கிளிகளின் பேச்சு எடுபடவில்லை. ஆனாலும் உன்னைவிட்டுட்டு போக அவைகளுக்கு மனம் இல்லை. மலர் போன்ற உன் கையிலேயே தங்கியிருந்து உன்னுடைய பேச்சைக் கேட்டுப் பழகிக்கொள்ளலாம் என்று திட்டமிடுகின்றன


நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர்
மறுவில் மங்கல அணியே அன்றியும்
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்!

நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர் = மணம் மிகுந்த மலர்களை அணிந்த கோதையே, உனக்கு அலங்காரம் செய்கிற பெண்கள்

இது முதல் இரவு. எனவே கண்ணகிக்கு பணிப் பெண்கள் அலங்காரம் செய்து இருக்கிறனர். கோவலனுக்கு அதைப் பார்த்ததும் கோவம் வருகிறது. நல்ல மணம் மிகுந்த பூக்களை அணிதிருக்கும் கண்ணகியே, யார் உனக்கு இவ்வளவு அலங்காரம் செய்தார்கள்? உன்னுடைய இயற்க்கை அழகே ஏதும் குற்றம் சொல்ல முடியாததது. அதன் மேல் எதுக்கு செயற்கை அழகு கூட்ட இந்த நகைகளை அணிவிக்கிறார்கள் ? அதனால் ஒரு பயனும் கிடையாது.


பல்லிரும் கூந்தல் சின்மலர் அன்றியும்
எல் அவிழ் மாலையொடு என்னுற்றனர் கொல்!

அடர்த்தியான உன்னுடைய கூந்தலில் ஒன்றிரண்டு மலர்களைச் சூடினால் போதாதா? இத்தனை பெரிய மாலையைச் சுமத்தவேண்டுமா?

நானம் நல் அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்!

உன் கூந்தலுக்கு மணம் நிறைந்த நல்ல அகில் புகையை ஊட்டினார்கள். சரி. அதற்குமேல் கஸ்தூரிச் சாந்து பூசியது எதற்காக?

திருமுலைத் தடத்து இடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்!
திங்கள் முத்து அரும்பவும் சிறு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர் என்னுற்றனர் கொல்!

அழகிய உன் மார்புகளில் தொய்யில் (சந்தனக் கோலம்) வரைந்தார்கள். சரி. அதற்குமேல் ஓர் ஒற்றை வட முத்துமாலையை அணிவித்திருப்பது எதற்காக?
அவர்கள் இத்தனை நகைகளையும் உனக்கு அணிவித்துவிட்டதால், உன்னுடைய சிறு இடை பாரம் தாங்காமல் நோகிறது. நிலா போன்ற உன் முகத்தில் முத்துபோல் வியர்வை அரும்புகிறது. இப்படி உன்னை வருந்தச் செய்த அவர்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது!. கண்ணகியின் இடை அவ்வளவு மேல்லியது. நகைகளின் பாரம் தாங்காமல் இடை நோகிறதாம்.


மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலைஇடைப் பிறவா மணியே என்கோ!
அலைஇடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழ்இடைப் பிறவா இசையே என்கோ!

குற்றம் இல்லாத பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே,
என் உயிரைப் பிடித்துவைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே! உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில்
பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா?

முக்கியாம ஒன்ன சொல்ல மறந்துட்டேன். அந்த மாளிகையில் நிறைய ஓவியங்கள் மாட்டப்பட்டு இருந்தன. இதன் பின் அதுல ஒரு ஓவியத்தை
மிக அருகில் காட்டுகிறோம்...A Close up shot..Cut !!!




2 comments:

  1. இனிமையான காதல் அனுபவம் இல்லாது இப்படி ஒரு காவிய காதல் பதிவை இரசித்து எழுத முடியாது என்பது என் கருத்து...

    ReplyDelete
    Replies
    1. பாலா , ஏன் இப்பிடி? எழுதினது இளங்கோ அடிகள் நான் வெறும் ரசிகன். ;)

      Delete