Tuesday, June 2, 2015

பதிப்புச் செம்மல் சி.வை. தா - மறக்கப்பட்ட தமிழ்த்தாத்தா

பதிப்புச் செம்மல் சி.வை. தா - மறக்கப்பட்ட தமிழ்த்தாத்தா 

வணக்கம் நண்பர்களே !!

பொதுவாய் ஒருவரைத் தாத்தா என்று அழைத்தால் அவர் தாய் வழித் தாத்தாவாகவோ இல்லை தந்தை வழித் தாத்தாவாகவோ இருப்பார். அப்பிடித் தாய்வழித் தாத்தாவான உ.வே.சா அவர்களை நாம் நன்கு அறிவோம். தந்தை வழித் தாத்தாவாய் இன்னொருவர் இருந்தார் அவரை நாம் யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்திற்காக மறந்து விட்டோம். அவர்தாம் சி.வை. தாமோதரம் பிள்ளை.


இவரும் உ.வே.சா அவர்களைப் போலவே சுவடித் திரட்டி உ.வே.சாவிற்கு  முன்னவே அதனைப் பதிப்பித்தவர். பதிப்புச் செம்மல் என அழைக்கபடுபவர். இன்னும் சொல்லப் போனால்உ.வே.சா அவர்கள் சிந்தாமணியைப் பதிப்பில் கொண்டுவர ஊக்குவித்து அவர்க்குப் பதிப்புத் துறையை அறிமுகப் படுத்தியவர் சி.வை.தா அவர்கள்.இதை உ.வே.சாவே, ""இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம்பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887-இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

தாமோதரனார் யாழ்ப்பாணம் அருகேயுள்ள சிறுப்பிட்டி எனும் ஊரில் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு செப்டம்பர் 12, 1832 அன்று மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தமிழ், ஆங்கிலம், அறிவியல் ஆகியன கற்று பின்  கோப்பாய் எனும் ஊரில் இருந்த போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். அவரின் 21 வயதில் (1853 ஆம் ஆண்டு) நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார்.அதன்பின் சென்னை வந்த இவர் சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கானத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார். பிறகு சட்டம் படித்து வக்கீல், நீதிபதி போன்ற பதவிகளை வகித்தார்.

நாம் அன்னாரின் பதிப்புச் சாதனைக்கு வருவோம். அதே நேரத்தில் ஆறுமுக நாவலர் 1868-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைஆய்வுசெய்து கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து அவருடன் இணைந்து தொல்காப்பியம் சொல்லதிகாரத்தை ஆராய்ந்து அதனைப் பதிப்பித்தார். ஆங்கில மோகத்தின் காரணாமாய் தமிழ் நூல்கள் அருகி வருவதைக் கண்டு மனம் வெதும்பி தொல்காப்பியம் முழுக்க பதிப்பிக்க முனைந்தார்.

நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரம் அர்ப்பணிப்புடனான அவரது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சிட்டு தமிழ் நாட்டின் பட்டினங்கள் தோறும் அந்நூலை அவர் பவனி வரச் செய்தார். சொல்லும், பொருளும் பதித்த பிறகு தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரையைப் பதிப்பித்தார்.

அத்தோடு நில்லாமல்  வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), போன்ற பண்டைய இலக்கண நூல்களை உரையோடு பதிபித்தார்.

தொல்காப்பியத்தை (சொல், எழுத்து, பொருள்) முழுக்க பதிப்பித்து மக்களிடையே சேர்த்தது சி.வை.தா அவர்கள்தாம். அத்தோடு நில்லாமல் இன்னும் பல இலக்கண நூல்களைத் தேடிப் பதிப்பித்தார்.

அவர் பதிப்பித்த நூல்கள் :


  • நீதிநெறி விளக்கம் (1953)
  • தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
  • வீரசோழியம் (1881)
  • திருத்தணிகைப் புராணம்
  • இறையனார் அகப்பொருள்
  • தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
  • கலித்தொகை
  • இலக்கண விளக்கம்
  • சூளாமணி
  • தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை


அன்னார் இயற்றிய நூல்கள்


  • கட்டளைக் கலித்துறை
  • சைவ மகத்துவம்
  • வசன சூளாமணி
  • நட்சத்திர மாலை
  • ஆறாம் வாசகப் புத்தகம்
  • ஏழாம் வாசகப் புத்தகம்
  • ஆதியாகம கீர்த்தனம்
  • விவிலிய விரோதம்
  • காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)


அந்தத் தாத்தா பழம் பெரும் இலக்கியங்களைத் தேடி பதிப்பித்தார் அதே போல இந்தத் தாத்தா தமிழரின் அடையாளமான பழம் பெரும் இலக்கணங்களைத் தேடி, ஆராய்ந்து பதிப்பித்தார். இது உ.வே.சாவின் சாதனைக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி,
ஆசிப்

No comments:

Post a Comment