Wednesday, December 17, 2014

மான் கலவி !!

வணக்கம் !!
ஒரு ஊர்ல ஒரு வேட்டைக்காரன் இருந்தான். அவனின் மனைவி வேட்டைக்காரியைப் பற்றிய கதைதான் இன்னிக்கு. இது ஒரு புறநானூறு பாடல். பாடியது வீரை வெளியனார். வெளியன் என்பது இவரது இயற்பெயர்; வீரை யென்பது இவரதூர்.புதுச்சேரிக் கருகில் இருக்கும் வீராம்பட்டினம்தான் இந்த ஊர். சரி வாங்க பாட்டை பாப்போம்.

"முன்றில், முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்"

வேட்டைக்காரன் வீடு எப்பிடி இருக்குனு சொல்லறாங்க இங்க. வீட்டுக்கு முன்னால நிறைய பலா மரம் இருக்கு. பக்கத்துல முன்னைக் கொடி & முசுண்டைக் கொடிகள் நிறைய வளர்ந்து அந்த பலா மரங்களின் மீது படர்ந்து இருக்கு. ரொம்ப நெருக்காம பந்தலே தேவை இல்லைங்கற மாதுரி நெருக்கமா கொடிகள் மரத்தின் மீது படர்ந்து இருக்கு. அப்பிடி இருக்க வீட்டோட முன் மண்டபத்தில வேட்டைக்காரனும் , வேட்டைகாரியும் தூங்கிட்டு இருக்காங்க.
எப்பிடிப் பட்ட வேட்டைக்காரன் அவன், கைமான் வேட்டுவன் = யானை வேட்டைக்காரன். அவன் நல்ல ஒய்யாரமா தூங்குறான். பக்கத்துல இரண்டு மான்கள் பார்வையாலே தழுவிட்டு (தழுவியும் தழுவாமலும்) இருக்குங்க.
(கலை = ஆண் மான்; பிணை = பெண் மான்).



"தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து,"

இந்த ஆண் மானுக்கு என்ன வேலைனா மேய்ச்சல்தான் வேலை. ஆனா அந்த வேலையை இப்ப விட்டுருச்சு. விட்டுட்டு புதுசா இன்னொரு வேலையை பிடிச்சுருச்சு. என்ன வேலை ? அந்த பெண் மானோட புணர்ந்து இருக்குறதுதான். கவிஞர் இன்னும் அழகாச் சொல்லுறார். "இன்புறு புணர்நிலை". புணர்ச்சியே இன்பம்தனே , அது என்ன இன்புறு புணர்ச்சி.
எந்த ஒரு வலி/துன்பம் இல்லாம இன்பம் மட்டுமே இருக்கற மாதிரி அந்த ஆண் மான் பாத்துக்குதாம். :))

நம்ம வேட்டைக்காரிக்கு பசி , மெதுவா எழுந்து பழம் சாப்பிடலாமுன்னு வரா. அப்ப அங்க நடந்துட்டு இருக்க மான் கலவியைப் பாக்குறா. பயம் வந்துருது அவளுக்கு , தம் கணவன் ஒரு வேடவன் , அவன் எழுந்தால் மான்களுக்கு எதுனா ஆபத்து வந்துரும் .இல்லனா தான் நடந்து, அந்த சத்தம் கேட்டு கலை (ஆண்), பிணை (பெண்ணை) விட்டு நீங்கிருமோ? -ன்னு அஞ்சி, அந்தப் புணர்ச்சி இன்பம் தடைபட கூடாதுன்னு அந்த இல்லிலே (மண்டபத்திலே), நகராமல், ஒடுங்கியே கிடந்தாள்!

இங்கயே பாட்டு முடிஞ்சு போச்சு ; ஆனா கொஞ்சம் extra fitting இருக்கு.

"மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,"

அவ வீட்டு முற்றத்தில் திணை காயப் போட்டிருக்கா. அத கானக் கோழி, இதல் (புறா) வந்து கொத்தி தின்னுது. அத சத்தம் போட்டு விரட்டனும். ஆனா அவ விரட்டல. மான் கல்விக்கு மரியாதையை கொடுத்து அங்கேயே நிக்குறா.
இந்த வேட்டைக்கரனோட ஊரு எப்பிடி இருக்கும்னா சந்தனக் கட்டையின் அருமை தெரியாமல், நெருப்புக்கு எரிக்கும் வேடர்களின் காடு; அதில் ஆரல் மீன் நாற்றம்;துண்டுத் துண்டா அரிஞ்ச கறி – இறைச்சி; சுற்றத்தோடு அதைக் கூடி உண்ணுவார்கள்.


தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே!

அந்த ஊர் வழியாக ஒரு பாணன் அரசனை சந்தித்து பாடி பரிசில் பெற போகிறான். தனக்கு-ன்னு வச்சிக்காது, பல வேந்தர்கள் தரும் பரிசில்/திறை எல்லாத்தையும், பரிசில் வேண்டிச் சொல்வோர்க்குக் குடுக்கும் அரசன்; அங்கே போ; பரிசில் வாங்கிக்கோ; ஆனா, அந்த அரசனைக் காட்டிலும், பெருமை உள்ளவ இந்தப் பொண்ணு. அரசன் குடுப்பானே தவிர, தன் செல்வத்தில் யாரேனும் கை வச்சி விளையாடினாப், பாத்துக்கிட்டு இருக்க மாட்டான்! ஆனா, இவ பாத்துக் கிட்டு இருந்தா. கோழியும் புறாவும் கொத்தக் கொத்தப் பாத்துக்கிட்டு இருந்தா; அவள் ஊரிலே தங்கி விட்டு, அப்பறம் அரசன் ஊருக்குச் செல் பாணனே !! அவ்வளவு நல்ல பண்பினை கொண்ட தலைவி இவள்.

பாடல் (32௦): புறநானூறு
கவிஞர்: வீரை வெளியனார்
திணை: வாகை
துறை: வல்லாண் முல்லை

உங்களுக்கு பிடிச்சுருந்தா சொல்லிட்டுப் போங்க :))

நன்றி.
ஆசிப்







No comments:

Post a Comment